செவ்வாய், 24 டிசம்பர், 2019

குடியரசு தலைவர் பங்கேற்ற பல்கலை விழா பதக்கங்கள் பெற மறுத்த மாணவியர்

 ஜனாதிபதி பங்கேற்ற பல்கலை விழா பதக்கங்கள் பெற மறுத்த மாணவியர் தினமலர் : புதுச்சேரி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள் சிலர், புதுச்சேரியில் நேற்று, ஜனாதிபதி பங்கேற்ற பல்கலை விழாவில், பதக்கங்கள் பெறுவதை தவிர்த்தனர். குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த், இரண்டு நாள் பயணமாக, நேற்று புதுச்சேரி வந்தார். பகல் 12:40 மணியளவில் காலாப்பட்டில் அமைந்துள்ள புதுச்சேரி பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜனாதிபதி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க, மாணவர் சங்கத்தினர், சமூக வலைதளத்தில் ஆதரவு திரட்டினர்.
தங்க பதக்கம் பெற தேர்வு செய்யப்பட்ட, கேரள மாணவி ரபியா, ஏற்கனவே குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதால், அவரை உள்ளே அனுமதிக்க, போலீசார் மறுத்து விட்டனர்.ஜனாதிபதி சென்றதும், மாணவி ரபியாவை அனுமதித்தனர்.மேடைக்கு சென்ற ரபியாவிற்கு, தங்க பதக்கம் வழங்கிய போது, அதை பெற மறுத்த அவர், 'பட்டப் படிப்பிற்கான சான்றிதழ் மட்டும் போதும்' எனக் கூறி, கீழே இறங்கி விட்டார்.


ரபியா கூறுகையில், ''தங்க பதக்கம் பெற வந்தவர் என்றுகூட பாராமல், வெளியேற்றி அவமதித்து விட்டனர். அதற்கான காரணத்தை கூட கூறவில்லை. இதன் காரணமாகவே, தங்க பதக்கத்தைபெறவில்லை. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, மாணவர்கள் நடத்தும்போராட்டத்திற்குஎன் ஆதரவு உண்டு,''என்றார்.இதேபோல, மேலும் சில மாணவர்களும், ஜனாதிபதியிடம் பட்டங்கள் பெறுவதை புறக்கணித்தனர்.

மாணவி மேகலா கூறுகையில், ''குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டையும் நான் எதிர்க்கிறேன். பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதன் மூலம், என் எதிர்ப்பை பதிவு செய்ய முடியும். இந்த மசோதாவை சட்டமாக்கிய ஜனாதிபதியிடம் இருந்து, பட்டத்தை பெற விரும்பவில்லை,'' என்றார்.

கருத்துகள் இல்லை: