ஞாயிறு, 22 டிசம்பர், 2019

மொபைலில் இருந்த போட்டோ; சிக்கிய கிருஷ்ணப்ரியா’- சிக்கலில் சசிகலா சொத்துகள்

கிருஷ்ணப்ரியாசசிகலாvikatan.com - மலையரசு : சுமார் 1,500 கோடி ரூபாய் அளவில் ஏழு பெரிய நிறுவனங்களை சசிகலா தரப்பு வாங்கியதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய தண்டனைக் காலம் முழுதாக முடிவதற்கு முன்பே அடுத்த ஆண்டில் அவர் விடுதலையாகிவிடுவார் என்று தகவல்கள் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது அவர் மீண்டும் ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை சமயத்தில், சுமார் 1,500 கோடி ரூபாய் அளவில் ஏழு பெரிய நிறுவனங்களை சசிகலா தரப்பு வாங்கியதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது.
அப்படி வாங்கிய சொத்துகளுக்கு முறையாக ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்யாமல் பணம் மட்டும் கைமாறியிருக்கிறது. வருமானவரித்துறையினர் இதுபற்றி அறிந்து, அந்த சொத்துகளின் ஆவணங்களை முடக்கியிருக்கின்றனர். சென்னை, மதுரை, கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அந்தச் சொத்துகளின் அதிகாரவரம்பில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் (Sub Registrars Office), நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகங்களுக்கும் (Registrar of Companies), பரப்பன அக்ரஹாரா சிறைக்கும், சசிகலா தரப்புக்கும் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகச் சொல்லப்பட்டன. இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிலளித்த வருமான வரித்துறை, “பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் தடை செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு ஒரு ரிசார்ட், இரண்டு ஷாப்பிங் மால்கள், ஒரு மென்பொருள் நிறுவனம், ஒரு சர்க்கரை ஆலை, ஒரு காகித ஆலை மற்றும் 50 காற்றாலைகளை சசிகலா வாங்கினார். இவைகள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ளவை ஆகும்” என்று கூறியுள்ளது. நீதிபதி அனிதா சுமந்த் தலைமையில் நேற்று நடந்த விசாரணையின்போது சசிகலா தரப்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், “இந்த விவகாரம் தொடர்பாக தன் மருமகள் கிருஷ்ணப்ரியா, வழக்கறிஞர் செந்தில் உட்பட சிலரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும். அதுவரை மதிப்பீடு தொடர்பாக வருமான வரித்துறை உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டது. ஆனால், “சசிகலாவின் வருமான வரி கணக்கு தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்டன. இதனால் குறுக்கு விசாரணை அவசியம் இல்லை என்றும் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல” என்றும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதால் சசிகலா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். நவம்பர் 9, 2017-ல் கிருஷ்ணப்ரியாவின் இல்லத்தில் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டது.
அப்போது கைப்பற்றப்பட்ட அவரது மொபைல் போனில் இருந்து சில புகைப்படங்கள் சிக்கியதாகவும், அந்தப் புகைப்படம் முக்கிய வணிக நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் சில புள்ளிவிவரங்களைக் காகிதங்களில் கைகளால் எழுத்தப்பட்டிருந்தது என்றும் ஐடி வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்தப் புகைப்படங்கள், பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வந்த சசிகலா தனது இல்லத்தில் தங்கியிருந்தபோது பெறப்பட்ட கவர்களில் இருந்து எடுக்கப்பட்டது என்று கிருஷ்ணப்ரியாவே ஒப்புக்கொண்டார் என்றும் வருமான வரித்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. > வணிக நிறுவனங்களுக்குச் செலுத்திய தொகை உள்ளிட்ட விவரங்கள் இருந்ததால் அதை போட்டோவாக தனது மொபைலில் கிருஷ்ணப்ரியா சேமித்திருந்தார் என `தி இந்து’ ஆங்கில நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐடி நடத்திய விசாரணையில் போட்டோவில் இருந்த காகிதத்தில் வணிக நிறுவனங்களின் பெயர்களை எழுதியது வழக்கறிஞர் செந்தில் என்றும், பண மதிப்பிழப்பின்போது சில சொத்துகளை வாங்கியதற்கான பணப் பரிவர்த்தனை விவரங்கள் அதில் இருந்தன என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள பெரம்பூரில் ஒரு ஷாப்பிங் மால், மதுரை கே.கே.நகரில் ஒரு ஷாப்பிங் மால், புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட், கோயம்புத்தூரில் ஒரு காகித ஆலை, சென்னைக்கு அருகிலுள்ள ஒரகடத்தில் ஒரு சர்க்கரை ஆலை, பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி மற்றும் கோயம்புத்தூரில் உள்ள காற்றாலைகள் ஆகியவற்றை சசிகலா வாங்கியுள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் வழக்கறிஞர் செந்தில்குமார் கொடுத்த விளக்கத்தில், 2016 டிசம்பரில் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோதே சசிகலா இந்தக் கம்பெனிகளை வாங்க தீர்மானித்து தன்னை அழைத்து அதற்காக அட்வான்ஸ் பணத்தை கொடுக்கச் சொன்னார். அப்படிதான் பழைய நோட்டுகள் கொடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும், சசிகலா உத்தரவுபடி நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட பண விவரங்களைக் காகிதத்தில் எழுதி அவற்றை சீல் வைத்த கவரில் பாதுகாப்பாக வைத்திருந்தேன் என்றும், 2017-ல் சசிகாலா பரோலில் வந்து கிருஷ்ணப்ரியாவின் இல்லத்தில் தங்கியிருந்தபோது அதை சசிகலாவிடம் ஒப்படைத்தேன் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
vikatan.com.

கருத்துகள் இல்லை: