சனி, 31 ஆகஸ்ட், 2019

பாஜகவின் நச்சு கரங்கள் திமுகவை தீண்டுமா?

டிஜிட்டல் திண்ணை:  அமித் ஷாவுக்கு ஸ்டாலின் விட்ட திடீர் தூது- நடந்ததும் நடக்கப்போவதும்! மின்னம்பலம் : வானம் தன் சூரிய டேட்டாவை ஆன் செய்துவிட்ட பொழுதில், மொபைல் டேட்டாவை ஆன் செய்தபோது வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. ‘காலை வணக்கம்’ என்ற மெசேஜைத் தொடர்ந்து டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“இரண்டாவது முறையாக மோடி பிரதமர் பதவியேற்ற நிலையில் பாஜகவின் அறுதிப் பெரும்பான்மை ஆட்சியில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அமித் ஷா. அவர் திமுகவின் முக்கிய பிரமுகர்கள், எம்.பி.க்களின் அரசியல் ரீதியான ஜாதகங்களை மத்திய உளவுத் துறை மூலம் கேட்டிருக்கிறார் என்று சில மாதம் முன்பே செய்திகள் வந்தன. இந்த நிலையில்தான், ஜூலை 12 ஆம் தேதி டெல்லி சோர்ஸ் மூலமாக கிடைத்தது அந்தத் தகவல்.
‘திமுக தலைவர் ஸ்டாலினை டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய அமைப்புகள் மூலம் விசாரணை நடத்துவது பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தில் ஆலோசனைகள், விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன’ என்பதுதான் அந்தத் தகவல். அதன் பின் நாடாளுமன்ற கூட்டத் தொடர், காஷ்மீர் பிரச்சினை என்று உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு முக்கியப் பிரச்சினைகள் வந்துவிட்ட நிலையிலும், ஆபரேஷன் ஸ்டாலின் ஆலோசனை ஒரு பக்கம் நடந்துகொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் டெல்லிவாலாக்களிடம் மேலும் பேசியபோது,
‘சமீப ஆண்டுகளின் அரசியல் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டினால் மோடி, அமித் ஷா ஆகியோர் தங்களை கடுமையாக விமர்சனம் செய்தவர்களை அரசியல் ரீதியாக கடுமையாக ஒடுக்கி வருகிறார்கள். அந்த வகையில் மோடியை பாசிஸ்ட் என்று தொடர்ந்து விமர்சித்தவர் ஸ்டாலின். மோடிக்கு கறுப்புக் கொடி காட்டியவர். தமிழகத்தில் எடப்பாடி, பன்னீர் செல்வம் ஆகியோர் பாஜக சொல்வதைக் கேட்கிறார்கள். ஆனால், ஸ்டாலினோ கருத்தியல் ரீதியாக எதிர்ப்பது ஒருபக்கம் என்றாலும் மோடியை தமிழ்நாட்டில் நுழையவிடமாட்டோம் என்றார். இப்போது வரை தொடர்ந்து பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் ரஜினியை வைத்து ஒரு ஷோ நடத்தலாம் என்று திட்டமிட்டிருக்கிறது பாஜக. மோடி இரண்டாவது முறை ஆட்சியைப் பிடிக்காமல் போயிருந்தால் ரஜினி பாஜகவிடம் இருந்து நிச்சயமாக நழுவியிருப்பார். ஆனால், மீண்டும் மோடி ஆட்சி அமைந்துவிட்டதால் ரஜினியால் பாஜகவின் அழைப்பை நிராகரிப்பது கஷ்டம். மேலும் ஸ்டாலினை வீழ்த்த ரஜினியை தயார் செய்வது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஸ்டாலினின் இமேஜை வீழ்த்த அவரை கைது செய்ய வேண்டும் என்பதும் டெல்லியின் திட்டம்’ என்கிறார்கள் டெல்லி வாலாக்கள்.
இந்தச் சூழலில் கடந்த ஆகஸ்டு 21 ஆம் தேதிக்குப் பின்னர் அதாவது ப.சிதம்பரம் கைதுக்குப் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க வேண்டும் என்று ஸ்டாலின் சார்பாக ஒரு திடீர் மூவ் தொடங்கியது. இந்த காய் நகர்த்தலை திமுக சார்பில் டெல்லியில் இருக்கும் அரசியல் பிரதிநிதிகளான டி.ஆர்.பாலுவோ, கனிமொழியோ செய்யவில்லை. மாறாக ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மூலமாகவே அமித் ஷாவை அணுகுகிறார்கள்.
டெல்லியில் அரசியல் ரீதியான அப்பாயின்ட்மென்ட் என்றால் உடனடியாகக் கிடைத்துவிடும். ஆனால் அரசியல் ரீதியாகக் கேட்காமல் சபரீசன் என்ற பிரத்யேக நபர் மூலம் மூவ் செய்திருக்கிறார் ஸ்டாலின். அதுவும் சபரீசன் இன்னொரு மூன்றாம் நபர் மூலமாகத்தான் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறார். பல முறை முயன்றும் அமித் ஷாவின் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை. பலத்த முயற்சிக்குப் பின் சந்திப்புக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறார் அமித் ஷா. அப்போதுதான் சில முன் நிபந்தனைகளை அந்த மிடில்மேன் மூலமாக சபரீசன் தரப்பு அமித் ஷாவுக்கு தெரியப்படுத்தியுள்ளது. நாளை சந்திப்பு என்றால் இன்று அமித் ஷாவிடம் இருந்து திடீரென அப்பாயின்ட்மென்ட் மறுக்கப்பட்டுவிட்டது. காரணம் அந்த முன் நிபந்தனைகள்தான். ‘இப்போது அவங்க தயவு நமக்குத் தேவையில்லை. நம்ம தயவுதான் அவங்களுக்குத் தேவை. ஆனால், அவங்களே கண்டிஷன் போடுறாங்கன்னா அந்த சந்திப்பே தேவையில்லை’ என்று சில மணி நேரங்களுக்கு முன் அப்பாயின்ட்மென்ட்டை ரத்து செய்துவிட்டார் அமித் ஷா.
இதையெல்லாம் சுட்டிக் காட்டி, ‘அக்டோபர் வாக்கில் ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. அதற்கான வேலைகளில் அமித் ஷா தீவிரமாகிவிட்டார். இந்த மாநில சட்டமன்றத் தேர்தல்களின் மூலம் ராஜ்யசபாவிலும் பாஜகவின் வலுவை அதிகப்படுத்துவது என்பது அவரது திட்டம். மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்னால் அமித் ஷாவின் கவனம் திமுக மீது, குறிப்பாக ஸ்டாலின் மீது திரும்பக் கூடும்’ என்கிறார்கள் டெல்லி வாலாக்கள்.
‘திமுக தமிழகத்தில் ஆட்சியை விட்டுப் போய் ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒன்பது ஆண்டுகளாக திமுகவின் பரம வைரியான அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது. ஸ்டாலினை கைது செய்ய சட்ட ரீதியான வழி வகைகள் இருந்தால் அவர்கள் ஏற்கனவே செய்திருப்பார்கள். இந்த நிலையில் எதை வைத்து ஸ்டாலினை கைது செய்ய முடியும்?’ என்று அவர்களிடம் கேட்டபோது, ‘அதைப் பத்தியெல்லாம் உங்களுக்கு என்ன ஜி கவலை? யார்கிட்ட, எப்படி வாக்குமூலம் வாங்கணும்னு அவங்களுக்குத் தெரியாதா?’ என்ற கேள்வியே பதிலாக வருகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: