திங்கள், 26 ஆகஸ்ட், 2019

கடலோரவாசிகளே தயாராக இருங்கள்.. கிரின்லாந்தின் பனிக்கட்டிகள் உருகி கொண்டு..... வீடியோ .


மின்னம்பலம் :கிரீன்லாந்தின் பனிக்கட்டிகள் உருகிக் கொண்டிருக்கின்றன! கிரீன்லாந்து, அன்டார்டிகாவை அடுத்து உலகிலேயே இரண்டாவது மிக பெரிய பனிக்கட்டிகளால் ஆன இடம், தற்போது அந்த இரண்டாவது என்ற அந்தஸ்தை இழந்து வருகிறது. புரியவில்லையா, கீரின்லாந்தின் பனிக்கட்டிகள் உருகிக்கொண்டிருக்கின்றன.
கிரீன்லாந்து என்னும் இந்தப் பனிப்பரப்பு, 80 சதவிகிதம் 'Ice Sheet' எனப்படும் பனித் தகடுகளால் ஆனது. இந்தப் பனிப் பரப்பில் 98 சதவிகித பனித் தகடுகள் உருகிக்கொண்டிருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு.
சரி, இந்தப் பனித் தகடுகள் உருகினால் என்ன ஆகும்?
கிரீன்லாந்தில் உள்ள மொத்த பனித் தகடுகள் முழுவதுமாக உருகினால், கடல் மட்டத்தின் அளவு 23 அடிகள் உயரும். பனித் தகடு உருகுவதன் விளைவையும், எவ்வளவு அளவிலான பனித் தகடுகளை இந்தத் தீவு கொண்டுள்ளது என்பதையும் இது விளக்கும்.

'கடல் மட்டம் உயர்வதற்கான அதிக பங்களிப்பை கிரீன்லாந்து இந்த ஆண்டு அளித்துள்ளது' என்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர் மார்கோ டெடெஸ்கோ (Marco Tedesco).
அப்படி கிரீன்லாந்தில் எவ்வளவு அளவு பனித் தகடுகள் இந்த ஆண்டு உருகியுள்ளது?
தேசிய பனி மற்றும் பனிக்கட்டி தரவு மையத்தின் கணக்கீட்டின்படி இந்த ஆண்டு ஜூன் 11 முதல் 20ஆம் தேதிக்கு இடையில், கிரீன்லாந்தின் பனித் தகடுகள் 80 பில்லியன் டன் பனிக்கட்டிகளை இழந்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 197 பில்லியன் டன் பனிக்கட்டிகள் உருகிவிட்டன. இது 80 மில்லியன் ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்புவதற்கு சமமானது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஜூலை மாதத்தின் நிலை இப்படி இருக்க ஆகஸ்ட் 1இல் வரலாற்றில் இல்லாத அளவு ஒரே நாளில் 12.5 பில்லியன் டன் பனிக்கட்டிகள் உருகின. ஒரு நாள் முன்னதாக 10 பில்லியன் டன் பனிக்கட்டிகள் உருகியுள்ளன. காலநிலை நிபுணர் மார்ட்டின் ஸ்டெண்ட்ல் (Martin Stendl) இதற்கு ஓர் ஒப்பீட்டை வைக்கிறார், இந்த இரண்டு நாட்களில் உருகிய பனிக்கட்டிகளால், மொத்த ஜெர்மனியையும் 7 செமீ தண்ணீரால் நிரப்பிவிடலாம்.
கடந்த 2012இல் கிரீன்லாந்து இது போன்ற மிகப்பெரிய அளவிலான பனிக்கட்டிகள் உருகும் நிலையைச் சந்தித்தது. அந்த ஓர் ஆண்டில் மட்டும் 250 பில்லியன் டன் பனிக்கட்டிகள் உருகின. ஆனால், இன்னும் இந்த ஆண்டு முடிவு பெறாத நிலையில், கிரீன்லாந்தில் பனிக்கட்டிகள் உருகிய அளவு 250 பில்லியன் டன்களைக் கடந்து சென்றுவிட்டது. 1980களுடன் ஒப்பிடுகையில் இங்கு பனிக்கட்டிகள் உருகும் விகிதம் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான ஓர் ஆய்வின்படி, கிரீன்லாந்தில் பனிக்கட்டிகள் உருகும் அளவு, கடந்த 350 வருடங்களில் எப்போதும் இல்லாத அளவு. கடந்த ஜூன் மாதம், இங்கு பனிக்கட்டிகள் உருகுவதை ஆராய்ந்த அமெரிக்க மற்றும் டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள், 2100ஆம் ஆண்டுக்குள் கிரீன்லாந்தில் உருகும் பனிக்கட்டிகள் கடல் மட்டத்தை 5 முதல் 33 செமீ வரை உயர்த்திவிடும் என்று எச்சரிக்கிறார்கள்.
இவ்வளவு நாட்கள் நம்மால் செய்யப்பட்ட வினை, நம்மைச் சுற்றியுள்ள உயிர்களைப் பாதித்துக்கொண்டிருந்தது. தற்போது, அந்த வட்டம் தொடங்கிய புள்ளியிலேயே முடிவடைய முடிவு செய்து விட்டது. எனவே, கடலோரவாசிகளே தயாராக இருங்கள், கடல் மட்டம் உயர்வதில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் கிரீன்லாந்து, வெப்பமடைந்து கொண்டிருக்கிறது, அதன் பனிக்கட்டிகள் உருகிக்கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: