செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

விக்கிரவாண்டியில் உதயநிதி- திமுக, அதிமுக வியூகம்!

டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டியில் உதயநிதி- திமுக, அதிமுக வியூகம்!மின்னம்பலம் : மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“வேலூர் மக்களவைத் தேர்தல் எப்படி திடீரென அறிவிக்கப்பட்டதோ அதேபோல விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக செப்டம்பர் முதல் வாரத்துக்குள் தேர்தல் அறிவிப்பு வரலாம் என்று இரு முக்கியக் கழகங்களும் எதிர்பார்த்து வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக உறுப்பினர் ராஜாமணி மறைவை அடுத்து இடைத்தேர்தல் வர இருக்கிறது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் எம்.பி. ஆனதையடுத்து ராஜினாமா செய்த காரணத்தால் அங்கும் இடைத்தேர்தல் வர வருகிறது.
இதில் நாங்குநேரியை விட விக்கிரவாண்டி தொகுதிக்கு திமுக முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிகிறது. விக்கிரவாண்டி தொகுதிக்கான போட்டியில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளர் புகழேந்தி, விக்கிரவாண்டி ஜெயச்சந்திரன் உள்ளிட்ட திமுகவினர் சீட் கிடைக்குமா என்று முயன்று கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கௌதம சிகாமணி சில நாட்களாக இன்னொரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவர் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை விக்கிரவாண்டியில் நிற்கச் சொல்லி உதயநிதியிடமே நேரடியாக வலியுறுத்தி வருகிறார். கடந்த மக்களவைத் தேர்தலில் பாரிவேந்தருக்காக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி தொகுதியை கடைசி நேரத்தில் உதயநிதிதான் தலையிட்டு, கௌதம சிகாமணிக்குப் பெற்றுக் கொடுத்தார். அதற்கு நன்றி செலுத்தும் வகையில் இப்போது விழுப்புரம் மாவட்டத்தில் உதயநிதியை போட்டியிட வற்புறுத்தி, தலைமையிடம் தன் கிராஃபை உயர்த்திக் கொள்ளத் திட்டமிடுகிறார் கௌதம சிகாமணி. அதனால் தான் எப்படியாவது உதயநிதியை விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைக்க முயற்சி செய்கிறார் கௌதம சிகாமாணி.
அதேநேரம் ஸ்டாலின் விக்கிரவாண்டி வேட்பாளர் பற்றி நிதானமாகவே முடிவெடுக்கலாம் என்று நினைக்கிறார். காரணம், அதிமுக வேட்பாளர் யார் என்று அறிந்து அதன் பிறகு திமுகவின் வேட்பாளரை முடிவு செய்துகொள்ளலாம் என்று கருதுகிறார் ஸ்டாலின். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
அதிமுகவில் எசாலம் பன்னீர், சிந்தாமணி வேல் உள்ளிட்ட சிலர் விக்கிரவாண்டி சீட்டுக்காக காய் நகர்த்தி வந்தாலும், அமைச்சர் சி.வி. செல்வத்தின் அண்ணன் ராதாகிருஷ்ணன் விக்கிரவாண்டியில் நிற்கவே வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். தனது அண்ணனுக்காக மக்களவைத் தொகுதியிலேயே வாய்ப்பு கேட்டார் சிவி. சண்முகம். ஆனால், அப்போது கூட்டணி உள்ளிட்ட பல காரணம் சொல்லி வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்நிலையில் ராஜாமணி காலமான அடுத்த நாளில் இருந்தே சி.வி. சண்முகம் விக்கிரவாண்டி தொகுதியின் அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து தேர்தல் வேலையைத் தொடங்கச் சொல்லிவிட்டார். அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனின் மகன் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில், தேர்தலில் நிற்க ராதாகிருஷ்ணன் யோசிப்பதாகவும் ஒரு தகவல். ஆனால் சி.வி. சண்முகமோ எப்படியாவது தன் அண்ணனையே நிறுத்தி அவரை ஜெயிக்க வைத்து தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொள்ள தீவிரமாக இருக்கிறார்.
அதிமுகவில் இப்படி ஒரு மூவ் நடந்துகொண்டிருக்கும் நிலையில், அமைச்சர் அண்ணனுக்கு எதிராக உதயநிதியை நிறுத்தி பலப்பரிட்சை பார்க்க வேண்டுமா என்று ஸ்டாலின் கருதுகிறார். காரணம் அதிமுகவில் சாதாரண வேட்பாளர் என்றாலே பணத்தைக் கொட்டிக் கொட்டி செலவு செய்வார்கள். அமைச்சரின் அண்ணனே நின்றால் அரசு இயந்திரமும், பணமும் சேர்ந்துகொள்ளும். இப்படி ஒரு நிலையில் முதல் தேர்தலே உதயநிதிக்கு கடினமாக இருக்க வேண்டுமா என்று ஸ்டாலின் யோசிப்பதாக சொல்கிறார்கள். அதனால்தான் அதிமுக வேட்பாளரை அறிவித்த பிறகு திமுக வேட்பாளரை அறிவிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார் ஸ்டாலின் “ என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: