புதன், 28 ஆகஸ்ட், 2019

நிர்மலா சீதாராமன் : தொழில்முனைவோர்கள் அச்சப்பட வேண்டாம்!

மின்னம்பலம் : தொழில்முனைவோர்கள்
தொழில்முனைவோர்கள் அச்சப்பட வேண்டாம்!அச்சப்படாமல் தங்களது தொழிலைத் தொடர வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுக்க பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துவரும் நிலையில் தொழில்முனைவோர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நிலை சரியாகி மீண்டும் சுமுக நிலை திரும்பினாலும் இந்தப் பின்னடைவிலிருந்து மீண்டு வர ஐந்து வருடங்களுக்குக் குறையாமல் ஆகும் என தொழில்முனைவோர்கள் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக மராட்டிய மாநிலம் புனேவில் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஆகஸ்ட் 27) ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சிறு, குறு, நடுத்தர, பெரிய தொழில்முனைவோர்கள் எந்தவோர் அச்சமும் இல்லாமல் தங்களது தொழிலைத் தொடர வேண்டும் என்பதே எங்களது இலக்கு. ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் மூலமாகத் தீர்வு காணப்படும்.
வெள்ளம் பாதித்த மாநிலங்களில் ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு ஒரு மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வரி வசூல் இலக்கை எட்டுவதற்கான இறுதித் தேதி கலந்து பேசியே முடிவு செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் போர்டு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 51 கோடி ரூபாயை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தாங்களே சுயமாக ஏற்படுத்திய பொருளாதாரப் பேரழிவை எவ்வாறு சமாளிப்பது எனத் திணறி வருகின்றனர். ரிசர்வ் வங்கியிலிருந்து பணத்தைத் திருடுவது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது. இது துப்பாக்கிச் சூட்டில் குண்டடி காயம்பட்டவருக்கு மெடிக்கல் ஷாப்பிலிருந்து பேன்ட்-எய்ட்டை திருடி ஒட்டுவது போன்றதாகும்” என்று விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “ராகுல்காந்தி ‘சோர், சோரி’ என குரல் எழுப்பும்போதெல்லாம் ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அவர் ‘சோர், சோரி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்று விட்டார். ஏற்கனவே தேர்தலில் அவருக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்து விட்டனர்” என்று கூறினார். “அதே சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் அதன் பயன் என்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் ரிசர்வ் வங்கியின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் காங்கிரஸ் செயல்படுகிறது என நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை: