வெள்ளி, 14 ஜூன், 2019

தமிழக ஆட்சியாள அடிமைகள் எதையும் எதிர்க்கப் போவதில்லை. இது துவக்கம் மட்டுமே. ..

Subaguna Rajan : தோழர்களே! நாம் இப்போது விவாதித்துப் போராட வேண்டியது ராஜராஜன் சாதிவெறியனா ? அவனுக்கு முந்தைய ஆட்சியாளர்கள்வழி தொடர்ந்த சனாதனத் தொண்டனா என்பதை அல்ல .
மோடி தலைமையிலான நவீன சனாதனவாத ஒன்றிய அரசின் “புதிய கல்விக் கொள்கை” குறித்தே நாம் விவாதிக்க வேண்டும். கல்வியை மாநில உரிமையாக்குவது குறித்த விவாதத்தின் ‘ கருவறுக்கும் ‘ கொள்கை இந்தக் கல்விக் கொள்கை. பள்ளிக் கல்வி துவங்கி கல்வி உயராய்வுப் புலம் வரையான அனைத்தையும் ஒன்றிய சனாதன அரசின் கட்டுப்பாட்டிற்கு நகர்த்தும் தீர்க்கமான நகர்வு அது. மொழிக் கல்வி ,பயிற்று மொழி, பாடத்திட்டமென அனைத்து திட்டமிடல் / தீர்மானிக்கும் அதிகாரத்தையும் கபளீகரம் செய்யும் ஆயுதம் இந்தக் கொள்கை.
இது வரைவு அறிக்கை மட்டுமே, மக்கள் ஒப்புதலின்றி ஏற்கப்படாது என்ற விளக்கங்கள் ஏமாற்று வேலை. இந்த கொள்கை ஏற்கப்படுவதற்கு முன்னரே அரசு கல்விநிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மற்றும் உயராய்வு மையங்களிற்கான இளங்கலை கல்விக்கான அனுமதிக்கான ஒன்றிய கட்டுப்பாட்டிலான ‘ நீட் ‘ வகை நுழைவுத் தேர்வை கொள்கையாக அறிவித்து விட்டது . தமிழக ஆட்சியாள அடிமைகள் எதையும் எதிர்க்கப் போவதில்லை. இது துவக்கம் மட்டுமே.
ஏற்கனவே மாநில பொருளாதார உரிமைகளை ஜி எஸ் டி வழியாக முற்றாகப் பிடுங்கிவிட்டது ஒன்றிய அரசு. கல்வியையும் முற்றாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு நகர்த்தும் இந்தக் கல்விக் கொள்கையை கொண்டு வந்து விட்டால் பின்னர் மாநில அரசுகளை நிர்வகிக்க உருவாகப் போகும் எந்த அரசும் எந்த மக்கள் நலன் சார்ந்த எந்தக் கொள்கையையும் கொண்டிருக்க முடியாது . தெளிவாகச் சொன்னால் யார் வந்தாலும் ‘ அடிமை சேவக ஆட்சிதான் ‘ .

எனவே 38 ( பாண்டி உட்பட ) எம்பி கள் என்ன செய்வார்கள் என்பவர்களிற்கு ஒன்றைச் சொல்வோம், இந்தச் சனாதன புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் துவங்க வேண்டும் அவர்கள் பணி. இந்தியத்தின் மாநில அரசுகள் , Union Territory களாக ஆக்கப்படுவதை தடுக்கும் இறுதிப் போர் அது.
இந்திய ஒன்றியத்திற்கு மீண்டும் அரசியல் சாசனம் வழங்கியிருக்கும், இரட்டை மக்களாட்சி வடிவை ( ஒன்றியம், மாநிலம் ) நினைவுறுத்துவதும், நிலை நிறுத்துவதுமாகவே இருக்க வேண்டும். இரண்டாயிரமாண்டுகள் தொடரும் சனாதன மேலாண்மைக்கெதிரான திராவிட/தமிழர் போரை வழக்கம் போல தமிழகமே முன்னெடுக்க முடியும். இதர மாநிலங்கள் பின் தொடர்வர். தெற்கு தயாராகவே உள்ளது.

கருத்துகள் இல்லை: