புதன், 12 ஜூன், 2019

ரோஜாவுக்கு ஆந்திர புதிய தலைநகர கட்டமைப்பு கழக தலைவர் பதவி

/tamil.oneindia.com - VelmuruganP.: அமராவதி: ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக நடிகை ரோஜா, ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் ரோஜா தனக்கு எந்த வருத்தமும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தார்.
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார். அவருடன் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் பதவியேற்றனர். நகரி தொகுதியின் எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா ஜெகன்மோகன் ரெட்டியுடன் இணைந்து சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தார். இதனால் இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாக செய்திகளும் வெளியாகின.

இந்நிலையில், ஆந்திர சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ளது. இதில் பங்கேற்பதற்காக விஜயவாடாவுக்கு நேற்று வந்த ரோஜா, அமைச்சர் பதவி கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை என்றும். ஜாதிகளின் அடிப்படையில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றும் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் கூறினார்.

இதனிடையே திடீர் திருப்பமாக ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர அரசின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொறுப்பில் ரோஜா நியமிக்கப்பட்டு இருப்பது ஆந்திர மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: