வெள்ளி, 14 ஜூன், 2019

இயக்குனர் ரஞ்சித்தை 19 தேதி வரை கைது செய்ய தடை .. மதுரை உயர் நீதிமன்றம்

ரஞ்சித் - ராஜராஜ சோழன்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?மின்னம்பலம் : ராஜராஜ சோழன் சர்ச்சை தொடர்பாக பா.ரஞ்சித் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர் உமர் பாரூக்கின் நினைவு நாள் பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ராஜராஜ சோழன் குறித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது சாதி, மத, இன ரீதியிலாக மக்களைப் பிளவுபடுத்தும் வகையிலான பேச்சு, கலவரத்தைத் தூண்டுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பா.ரஞ்சித் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். அதில், “எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடமும் பிரிவினையை ஏற்படுத்தவில்லை. பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள தகவல்களையே நானும் குறிப்பிட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்னிலையில் நேற்று (ஜூன் 13) விசாரணைக்கு வந்தது. ரஞ்சித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களையே என்னுடைய மனுதாரர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பலரும் பல மேடைகளிலும் புத்தகங்களிலும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எனது மனுதாரரின் பேச்சு மட்டும் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார்.
இதைக் கேட்டறிந்த நீதிபதி, “ஆயிரம் ஆண்டுகள் கழித்து ராஜராஜ சோழன் குறித்துப் பேச வேண்டிய அவசியம் என்ன? இன்றும் அரசு மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி அதற்கான நிவாரணங்களை வழங்குகிறது. அவ்வாறு இருக்கும்போது நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக ராஜராஜ சோழனை மட்டும் குறிப்பிடுவது ஏன்? பேசுவதற்குப் பல்வேறு விஷயங்கள் இருக்கும்போது மக்கள் கொண்டாடும் மன்னன் ஒருவனை இவ்வாறு பேசுவது ஏன்?” என அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பினார். இதுபோன்று பேசுவதை மனுதாரர் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக வரும் 19ஆம் வரை ரஞ்சித் கைது செய்யப்பட மாட்டார் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் காவல் துறை தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், அதுவரை ரஞ்சித்தைக் கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: