புதன், 12 ஜூன், 2019

அயோத்தி தாசர் சுய ஜாதி பெருமை கொண்டிருந்தாரா? .. தமிழ் மறவன் பார்வையில்

"தமிழ் மறவன் : அண்ணல் அம்பேத்கர் முன்னெடுத்த தாழ்த்தப்பட்ட வகுப்பார் விடுதலை என்பதில் பட்டியலின மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த
விடுதலையே!
ஆனால், இரஞ்சித் விதந்தோதுகிற அயோத்திதாசர் முன்னெடுத்த தலித் விடுதலை அல்லது திராவிடர் விடுதலையென்பது பறையர் சமூகத்தினருக்கானது மட்டுமே!
அயோத்தி தாசரின் பூர்வீக திராவிடர்கள், சாதிபேதமற்ற திராவிடர்கள் என்கிற விளிப்பு பறையர்களை மட்டுமே உள்ளடக்குவதாக இருந்தது. அதோடு ஒடுக்கப்பட்ட சாதிகளின் இணைவை அவர் முன்னிறுத்தவில்லை என்பதோடு, அம்முயற்சிக்கு எதிரானவராகவும் இருந்தார் என்பது மிக முக்கியமானதாகும்.
சனவரி 6, 1909 நாளிட்ட, 'இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஜாதியோருக்கு
நியமிக்கப்பட்ட சங்கம்’ என்ற தலைப்பிட்ட கட்டுரையில் அயோத்திதாசர் இவ்வாறு எழுதுகிறார்.
“இந்த டிசம்பர் மாதம் விடுமுறைக் காலத்தில் சில பெரியோர்கள் கூடி இந்தியாவில் தாழ்த்தப்பட்டுள்ள சாதியோரைச் சீர்திருத்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
இவற்றுள் இயல்பாகவே அறிவின்றித் தாழ்ந்துள்ள சில வகுப்பாரும் உண்டு. சாதித் தலைவர்களின் விரோதத்தால் தாழ்த்தப்பட்டுள்ளவர்களும் நாளது வரையில் தாழ்த்தி வருகிறவற்றுள் தாழ்ந்தவர்களுமாகிய ஓர் வகுப்பாரும் உண்டு.

அவர்கள் யாரென்பிரேல் குறவர், வில்லியர், சக்கிலியர், மலமெடுக்கும் தோட்டிகள் இயல்பாகவே தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள்.
சாதித் தலைவர்களாகும் வேஷ பிராமணர்களால் பறையரென்றும், சாம்பாரென்றும் வலங்கையரென்றும் கூறி அவர்களைச் சுத்த ஜலங்களை மொண்டு குடிக்க விடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடாமலும், அம்மட்டர்களை சவரஞ்செய்ய விடாமலும், அந்தஸ்தான உத்தியோகங்களில் பிரவேசிக்க விடாமலும், ஏதோ துரை மக்கள் கருணையால் ஓர் உத்தியோகத்தை பெற்றுக்கொண்ட போதிலும் அதனினின்று முன்னுக்கு ஏறவிடாமலும் பலவகை இடுக்கங்களைச் செய்து தாழ்த்திக் கொண்டே வருகிறார்கள். இவர்களைத் தாழ்ந்த வகுப்பார் என்று கூறலாகாது. சாதிபேதமுள்ள மற்றவர்களால் தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்று கூறல் வேண்டும்.
இவற்றுள் கூளங் குப்பைகளுடன் குணப்பெரும் பொருட்களையும் சேர குவித்து குப்பைக் குழியென்பது போல கல்வியிலும், நாகரீகத்திலும், விவேகத்திலும், ஒற்றுமையிலும் மிகுந்து வேஷ பிராமணர்கள் கற்பனா கதைகளுக்கிணங்காமல் விரோதிகளாய் நின்ற திராவிட பெளத்தர்கள் யாவரையும் பறையர், சாம்பார், வலங்கையரென்று தாழ்த்திக் கொண்டதுமின்றி சக்கிலி, தோட்டி, குறவர், வில்லியர் இவர்கள் யாவரையும் ஐந்தாவது சாதியென்றும், பஞ்சம சாதியென நூதன பெயரிட்டு மேன்மக்களாம் பெளத்தர்களையும் அக்குப்பையில் சேர்த்து பஞ்சம சாதியென்று வகுத்திருக்கின்றார்கள்.” (அயோத்தி தாசர் தொகுதி 1, ப.97)
கூளங்குப்பைகள் அருந்ததியர், குணப்பெரும் பொருட்கள் பறையர்கள் என்கிறார்!
இயல்பிலேயே தாழ்ந்துள்ள தாழ்த்தப்பட்டவர்கள் எனவும் ஆதிக்க மனோபாவத்தோடு சொல்வதை கவனியுங்கள்.
அயோத்திய தாசர் கட்டமைக்கும் இருமை எதிர்வுகளையும் அவற்றின் பின் ஒளிந்துள்ள பாசிசக் கூறுகளையும் தலித் அரசியலில் அக்கறையுள்ள தோழர்களும் கவனிக்க வேண்டும்.
அயோத்திதாசரை தன் சாதித் தலைவராய் பா.இரஞ்சித் புகழ்பாடுவதை நாம் மறுக்கவோ, தடுக்கவோ போவதில்லை!
ஆனால், அண்ணல் அம்பேத்கருக்கு முன்பே தலித் விடுதலையை முன்னெடுத்தவர் என்பதை எம்மால் ஏற்க இயலாது. ஏனெனில், அவர் முன்னெடுத்த செயல்பாடுகள் பார்ப்பனீயத்தின் ஆதிக்கசாதி கூறுகளே!


(2)
இன்றைய கிருஷ்ணசாமியை விமர்சிக்கிறவர்கள், கண்டிக்கிறவர்களும் அன்றைய அயோத்திதாசரை புகழ்வதுதான் நகைமுரண்.
தோட்டிகளின் குழந்தைகள் படிக்கும் கல்விச் சாலைகளுக்கும், பறைக்குழந்தைகள் படிக்கும் கல்விச் சாலைகளுக்கும் பஞ்சமர் பாடசாலையென்ற ஒரே பேரை வைத்து விட்டார்கள் என்று பதறிப் போகிறார் தலித் சிந்தனையாளர் அயோத்திதாசர்!
“ஆயிரத்து ஐந்நூறு வருடகாலமாக இந்த திராவிட பெளத்தர்களைத் தலையெடுக்க விடாமல் தாழ்த்திப் பலவகை இடுக்கங்களைச் செய்து வந்த சத்துருக்களாகிய வேஷ பிராமணர்களுக்கு பருப்பில் நெய்யை விட்டது போலும், பாலில் பழம் விழுந்தது போலும் மென்மேலும் ஆனந்தம் பிறந்து தங்கள் வஞ்சகங்கள் யாவையும் சரிவர நிறைவேற்றி விடுவதற்காக தோட்டிகள் பிள்ளைகளுக்குக் கல்விச் சாலை வகுத்து அதையும் பஞ்சமர் பாடசாலை எனக் குறித்து விட்டார்கள்.
இவ்வகை கருத்து யாதெனில் இன்னுஞ் சில காலங்களுக்குப்பின் தோட்டிகள், பறையர்கள் யாவரும் ஒரு வகுப்பாரென்றுங் கூறி இன்னுந் தலையெடுக்க விடாமல் நாசஞ் செய்வதற்கேயாம்” - அயோத்தி தாசர் தொகுதி 1, ப.138.
தொடரும்...,

கருத்துகள் இல்லை: