சனி, 1 ஜூன், 2019

தி.மு. க-வை முதலில் குறிவைத்துள்ளோம்,, திமுக எம்பிக்களில் இருவரை இழுக்கும் வேலை நடக்கிறது .. பாஜக பிரமுகர்

பி.ஜே.பிvikatan.com = சக்தி தமிழ்ச்செல்வன் :
பி.ஜே.பிபி.ஜே.பி அலை சுழற்றி அடித்த போதும், தமிழகத்தில் அந்தக் கட்சி ஒரு இடத்தை கூட பெறமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர்களுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைச் சரிகட்ட அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாராகிவருகிறது பி.ஜே.பி.
அதற்கான மாஸ்டர் பிளான் இப்போது செயலுக்கு வர ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள் பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்கள்.
1980 ஆண்டு தொடங்கப்பட்ட பி.ஜே.பி கடந்த தேர்தலில் வகுத்த மாஸ்டர் பிளான் மோடியை இந்தியாவின் பிரதமராக அமர வைத்தது. `மோடி அலை’அந்தத் தேர்தலில் பி.ஜே.பிக்குக் கைமேல் பலன் கொடுத்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பி.ஜே.பி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தனது செல்வாக்கை இந்தியா முழுவதும் பரப்புவதற்கான வேலையைச் செய்தது.
பி.ஜே.பியின் தாய் வீடான ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பியுடன் இணைந்து இந்தியா முழுவதும் கட்சியின் பலத்தை அதிகரிக்க வேலை செய்தது. எந்த
மாநிலங்களில் பி.ஜே.பி யின் செல்வாக்கு குறைவாக இருந்ததோ அந்த மாநிலங்களில் பி.ஜே.பியின் முக்கிய பிரமுகர்கள் களமிறங்கினர். அந்த மாநிலத்தின் முன்னாள் கட்சித் தலைவர்கள் மற்ற கட்சியின் அதிருப்தியில் உள்ள தலைவர்கள் எனப் பலருடன் பல வித பேரங்கள் வியூகங்கள் நடந்து அவர்களை தங்கள் பக்கம் கொண்டுவந்தனர்.


இப்படி பல மாநிலங்களிலும் தனது காலடித் தடத்தை அழுத்தமாகப் பதிய வைத்தது பி.ஜே.பி. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் செய்த இந்த மாஸ்டர் வியூகம்தான் பி.ஜே.பிக்கு இந்தத் தேர்தலில் கைமேல் பலன் கிடைத்துள்ளது. பி.ஜே.பியின் கட்சித் தலைவர்களே எதிர்பார்க்காத மாநிலங்களில், தொகுதிகளில் எல்லாம் அபார வெற்றி கிடைத்துள்ளது. இந்தியா முழுக்கத் தங்கள் செல்வாக்கைப் அதிகரித்துக்கொண்ட பி.ஜே.பி.யினால் இதுவரை தமிழகத்தில் பெரிய அளவில் எந்த வெற்றியையும் பெறமுடியாததும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. அதேநேரம் வடகிழக்கு மாநிலங்களில் இதுவரை பி.ஜே.பி வெற்றி பெறாத பல தொகுதிகளில் இந்தத்  தேர்தலில் வெற்றி பெற்று தனது கோட்டையாக மாற்றியுள்ளது. பி.ஜே.பி-க்குச் சிக்கலாக உள்ள மாநிலங்களாக கேரளா, மேற்குவங்காளம், தமிழகம் ஆகிய மூன்று  மாநிலங்கள் மட்டுமே உள்ளன. மேற்குவங்கத்தில் கூட அந்தக் கட்சியின் வியூகம் ஒரளவு பலித்துவிட்டது. கேரளாவிலும் தமிழகத்திலும் அவர்களின் கணக்கு பூஜ்ஜியத்திலே உள்ளது. அந்த அதிருப்தியின் வெளிப்பாடு அமைச்சரவை ஒதுக்கியதிலே அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது. இந்தியாவில் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகள் வென்ற அ.தி.மு.க வை கிட்டத்தட்ட தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டும்கூட பி.ஜே.பியால் தனது கனவை தமிழகத்தில் நிறைவேற்ற முடியவில்லை. இந்தியா முழுக்கப் பரவிய பி.ஜே.பி அலை தமிழகத்துக்கு நுழைய முடியாமல் அடங்கி நின்றது. இனியும் தமிழகத்தை தள்ளிவைக்காமல் தங்களுது ஆளுகையின் கீழ் கொண்டுவர பி.ஜே.பியின் முக்கியத் தலைவர்கள் களமிறங்கி வியூகம் வகுத்துள்ளனர்.

இதுகுறித்து பி.ஜே.பி டெல்லி தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது “இந்தியா முழுக்கத் தங்களுடைய கட்சியை வலுவாக்கி வரும் பி.ஜே.பி தமிழகத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் தமிழகத்தை தனது கட்டுக்குள் கொண்டுவர பல கட்ட திட்டங்களை யோசித்து வருகிறார்கள். நடந்து முடிந்த தேர்தலில் எந்த ராஜ தந்திரமும் தமிழகத்தில் செல்லுபடியாகாததற்கு என்ன காரணம் என யோசித்தவர்கள் மிக முக்கியமான வியூகத்தை வகுத்துள்ளார்கள். கட்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பிலிருந்து வந்தவர்கள் மட்டுமே அதிகமாக உள்ளார்கள். அவர்களை வைத்துக்கொண்டு தமிழகத்தில் தேர்தல்களத்தைச் சந்திப்பது பிரயோஜனம் இல்லை. திராவிடக் கட்சியினரை வீழ்த்த அந்தக் கட்சியின் ஆட்களையே களத்தில் இறக்க வேண்டும். எனவே, முதலில் 37 எம்.பி. தொகுதிகளை வென்றுள்ள தி.மு. க-வை முதலில் குறிவைத்துள்ளோம். அந்தக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இருவரை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகளுக்குத் தயாராகிவிட்டது பி.ஜே.பி. தென் தமிழகத்தின் அதிக வாக்காளர்களைக் கொண்ட சாதியைச் சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர் ஒருவருடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார்கள். மேலும் வட தமிழகத்தில் பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த தி.மு.க வின் இரண்டாம் கட்டத் தலைவருடனும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகியுள்ளனர்.

அவர்களிடம் “பல நாள்களாக நீங்கள் கட்சியில் இருந்தாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறீர்கள். ஆனால், புதிதாகக் கட்சிக்குள் வருபவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுகிறது. இன்னும் ஐந்தாண்டுகள் மத்தியில் எங்கள் ஆட்சிதான். எங்கள் பக்கம் வந்தால் விரும்பியதைப் பெற்றுக்கொள்ளலாம். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் சீட் விஷயத்தில் தாராளம் காட்டுவோம். தென் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் எங்கள் கட்சிக்குள் வந்தவுடன் சீட் வாங்கவில்லையா? என்றெல்லாம் தூண்டில் போட்டுள்ளார்கள். இதேபோல், பலருக்கும் போன் போய் உள்ளது. இப்போது தி.மு.கவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களிடையே இந்த இழுப்பு விஷயம் குறித்து தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. இது தி.மு.க தலைமைக்குத் தெரியவந்தது அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் உஷார்படுத்திவருகிறார்கள்” என்று கூறுகிறார்கள்.
இந்தத் தகவலை வட மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவரும் உறுதி செய்கிறார். “37 சீட் பெற்றும் மத்தியிலும் ஆட்சியில் இடம்பெற முடியவில்லை, மாநிலத்திலும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாத சோகம் தி.மு.க தரப்பிடம் இருக்கிறது. இந்நிலையில் பி.ஜே.பியின் இந்த இழுப்பு பணிக்கு எந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள்” தி.மு.க தரப்பில்.
vikatan.com

கருத்துகள் இல்லை: