புதன், 29 மே, 2019

காடு ரெடி! தமிழகத்தில் பரவும் ஜப்பான் ’மியோவாக்கி’ முறை.. கொஞ்சம் இடம்... கொஞ்சம் கழிவு...

மியோவாக்கி காடு
மியோவாக்கிvikatan.com -kumaresan-r : ‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பதே பொழப்பா போச்சு’னு கிராமத்துல ஒரு சொலவடை சொல்வாங்க. அதுக்கு நாமதான் சரியான உதாரணம். இயற்கையா இருந்த காடு கரையை அழிச்சு, கான்கிரீட் காடுகளை உருவாக்கிக்கிட்டே போறோம். இதனால, மாதம் மும்மாரி பெய்த மழை, இப்ப மூணு வருஷத்துக்கு ஒருமுறை எட்டிப்பார்த்துட்டுப் போயிடுது. இதுக்கெல்லாம் காரணம், மரங்களை வெட்டியதும், காடுகளை அழிச்சதும்தான்னு சொல்றாங்க. அதனால, மரம் நடும் விழாக்களை நடத்திட்டு இருக்கோம். இப்ப மறுபடியும் ஒருமுறை முதல் வரியை படிச்சுப் பாருங்க. 
அரசாங்கம், தனியார் அமைப்புகள் மட்டும் இல்லாமல், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மரம் வளர்க்கணும்கிற எண்ணம் இப்ப வந்திருக்கு. தாமதமா வந்தாலும், இப்பவாவது வந்திருக்கேன்னு சந்தோஷப்படணும். இதை இன்னும் வேகமா செஞ்சாலே, பழைய நிலைமை திரும்ப பல வருஷம் ஆகும்னு சொல்றாங்க சுற்றுச்சூழல் அறிஞர்கள். ஆக, ‘‘காடுகளை உருவாக்கணும்... அதுவும் வேகமா உருவாக்கணும். பத்து வருஷத்துல வளர்ற மரம், ரெண்டே வருஷத்துல வளரணும். அப்பதான் ஓரளவுக்காவது பழைய நிலைமை திரும்பும். எல்லாம் சரிதான், பத்து வருஷம் ஒரு மரம் வளர்ந்தா என்ன வளர்ச்சி இருக்குமோ, அது ரெண்டே வருஷத்துல எப்படி சாத்தியம்?

'நிச்சயம் சாத்தியம்'னு சொல்கிறார், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் ‘அகிரா மியாவாக்கி’. ஜப்பான் நாட்டுல இருக்கும் ‘யோகோஹாமா’ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த இவர், மரங்கள் அதிவேகமா வளர்ற மாதிரியான ஒருமுறையைக் கண்டுபிடிச்சிருக்கார். ‘இடைவெளி இல்லா அடர்காடு’ங்கிற இவரோட தத்துவப்படி, குறைஞ்ச இடத்துல அதிக எண்ணிக்கையில் மரங்களை நடலாம். இந்த மரங்களும் அதிவேகமா வளர்றதை நிரூபிச்சிருக்கார் இந்த விஞ்ஞானி. இந்த முறையில், இதுவரைக்கும் 4 கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு, குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கியிருக்கிறார் மியோவாக்கி. இவரது இந்த சேவைக்காக 2006 - ம் வருஷம், ‘புளூ பிளானெட்’ விருது கொடுத்துக் கௌரவிச்சிருக்கு, சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு.
உலகம் முழுக்க மியோவாக்கி முறையில் காடுகளை உருவாக்கும் முறை, வேகமா பரவிக்கிட்டிருக்கு. தமிழ்நாட்டுலயும் இந்த முறையில காடுகளை உருவாக்கும் செயல், பல இடங்கள்ல நடந்துக்கிட்டு இருக்கு. இந்த முறையில காடுகளை உருவாக்கத் தேவையானது ரெண்டே விஷயம்தான். ஒண்ணு, காலியிடம். இன்னொண்ணு கழிவுகள், குப்பைகள். இது ரெண்டும் நம்ம ஊர்ல நிறைய இருக்கு. அதை முறையா பயன்படுத்தி, மியாவாக்கி முறையில் குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கினா, எதிர்காலத்துல மழையீர்ப்பு மையமா தமிழ்நாடு இருக்கும்.
அது என்ன மியாவாக்கி முறை? அந்த முறையில் எப்படி காடுகளை உருவாக்க முடியும்? இந்தக் கேள்விக்கு பதில் சொல்றாரு, கோயம்புத்தூரைச் சேர்ந்த வீட்டுத் தோட்ட ஆலோசகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான வின்சென்ட். ‘‘ மியாவாக்கி முறைங்கிறது கம்மியான இடத்துல, காடுகளை உருவாக்கும் ஒரு முறை. குப்பைகளை வெச்சே குட்டி வனத்தை உருவாக்கும் அற்புதமான தத்துவம். ஆழமான குழிகளை வெட்டி, அதில் குப்பைகளைப் போட்டு, நெருக்கமா செடிகளை நடும் முறைக்குப் பேர்தான், மியாவாக்கி. இந்த முறையைக் கண்டுபிடிச்ச விஞ்ஞானியின் பெயர் மியாவாக்கிங்கிறதால, அந்தப் பெயரையே இதுக்கு வெச்சிட்டாங்க. இந்த முறை,  உலகம் முழுக்க பிரபலமாகிட்டு வருது. ஒவ்வொரு நாட்டுலயும், அந்தந்த நாட்டுக்கு ஏற்ப இந்த முறையில் சின்னச்சின்ன மாற்றம் செஞ்சு, செயல்படுத்துறாங்க. நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி சில மாற்றங்கள் செஞ்சு, கோயம்புத்தூர் பகுதிகள்ல சோதனை முயற்சியா சில இடங்கள்ல மியாவாக்கி காடுகளை உருவாக்கினேன். அத்தனையும் அருமையா வளர்ந்திருக்கு. இந்த முறையோட சிறப்பு, பத்து வருஷத்துல ஒரு மரம் என்ன வளர்ச்சியில் இருக்குமோ, அந்த வளர்ச்சி ரெண்டே வருஷத்துல கிடைச்சிடும். மரங்கள் நெருக்கமா இருக்கிறதால, ஒளிச்சேர்க்கைக்காக சூரிய ஒளியைத் தேடி ஒண்ணுக்கொண்ணு போட்டி போடும் செடிகள் வேகமா வளருது. ஆழமான குழியில் செடியை நடவு செய்வதால், வேகமாக வேர் உள்ளே இறங்கிப் பிடித்துக்கொள்ளும்.
      மியோவாக்கி
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏகப்பட்ட குப்பைகள் சேருது. அவற்றை, இதுவரைக்கும் முறையா கையாளவில்லை. காலி இடங்களைத் தேர்வு பண்ணி, மூணடி ஆழத்துக்கு குழியெடுக்கணும். அந்தக் குழிக்குள்ள, நமக்குக் கிடைக்கிற குப்பைகளைக் கொட்டி, குழியை நிரப்பணும். மேலே, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேம் ஆகியவற்றைப் போட்டு, அதுல செடிகளை நெருக்கமா நட்டு வைக்கணும். இப்படி நடும்போது, நம்ம நாட்டு மரங்களை நடுறது நல்லது. சிலர், ரொம்பப் பெரிய செடிகளை நடுவாங்க. பெரிய செடிகளோட வேர், பிளாஸ்டிக் பாக்கெட்டைச் சுத்தியே இருக்கும். அந்தச் செடிகளை மண்ணில் நடும்போது, வேர் நேராகப் போகாது. அதனால, நடுத்தரமான செடிகளை நடுறது நல்லது. இந்த முறையில் நான் நடவு செஞ்ச ஒரு இடத்துல, அக்டோபர் மாசம் ஆறு அடி உயரத்துல இருந்த ஒரு செடி, பிப்ரவரி மாசம் 12 அடி உயரத்துக்கு வளர்ந்திடுச்சு. இந்த முறையை பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் கையிலெடுத்து, காலியான இடங்களிலெல்லாம் குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கணும். இப்படிச் செய்றதால குப்பையையும் முறையா பயன்படுத்த முடியும், அதிக அளவிலான காடுகளையும் உருவாக்க முடியும். இந்த முறையில் நடவு செய்ய, ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையுள்ள மழைக்காலம்தான் சரியானது. நடவு செஞ்சதும் உயிர்த் தண்ணி. அதன் பிறகு, ரெண்டு, மூணு தண்ணி கொடுத்துட்டாப் போதும். அதுக்குப் பிறகு, தன்னால காடு உருவாகிடும்.
இந்த முறையில், உலகளவுல ‘ஃபுட் பாரஸ்ட்’ ங்கிற முறைதான் அதிக இடங்கள்ல செயல்பாட்டுல இருக்கு. இந்த முறையில், நமக்குத் தேவையான பழ மரங்களை நடவு செய்யலாம். 600 சதுர அடி இடத்துலகூட ஒரு வீட்டுக்குத் தேவையான எல்லா வகையான பழங்களும் கிடைக்கும். பழச்செடிகளை நடவு செஞ்சா, ஆறாவது மாசத்துல இருந்து பழங்களைப் பறிக்கலாம். இந்த முறையை அரசாங்கமும், வனத்துறையும் பொதுமக்கள் கிட்ட கொண்டுபோய், இதை ஒரு இயக்கமாக்கினா, இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல தமிழ்நாடே பசுமையா மாறிடும்‘‘ என்றார்.

கருத்துகள் இல்லை: