ஞாயிறு, 26 மே, 2019

காஞ்சிபுரம் வடகலை தென்கலை மோதல் கைகலப்பு


தினகரன் : சென்னை: நாலாயிர திவ்விய பிரபந்தம் பாடுவதற்கு, தென்கலை பிரிவினருக்கு ஆதரவாக காஞ்சிபுரம் கலெக்டருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் திடீரென சந்தித்தார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவம் கடந்த  17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கிடையில், வைகாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு தென்கலை பிரிவினர் நாலாயிர திவ்விய பிரபந்தம் பாட, வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து திருவடி கோயில் முதல் வாகன மண்டபம் வரை தென்கலை பிரிவினர் பாசுரங்களை பாட அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் தென்கலை பிரிவினர் பாசுரங்கள் பாடக்கூடாது என கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து, தென்கலை பிரிவினருக்கு ஆதரவாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜ ஜீயர், கலெக்டர் பொன்னையாவை நேரில் சந்தித்து உத்தரவை தளர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து, ஆலோசனை நடத்தினார்.


இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் ஜீயர் தரப்பை அணுகி கேட்டபோது எந்த தகவலையும் தர மறுத்துவிட்டனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நீண்ட காலமாக நீருபூத்த நெருப்பாக வடகலை - தென்கலை பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் நீதிமன்றத்தில் உள்ளன. ஆனாலும், வடகலை - தென்கலை பிரச்னை தீர்க்கப்படாமலேயே உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் வைகாசி பிரமோற்சவத்தில் உள்ளூர் பக்தர்கள், உபயதாரர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்நிலையில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவது பக்தர்களை கவலையடைய வைத்துள்ளது. எனவே கோயில் நிர்வாகம், அதிகாரிகள், வடகலை பிரிவினர், தென்கலை பிரிவினர் என முத்தரப்பினை இணைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணவேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துகள் இல்லை: