வியாழன், 30 மே, 2019

அதிமுகவுக்கு அமைச்சர் பதவி இல்லை .. நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் (தமிழர்களாம்) மத்திய அமைச்சர்களாகி உள்ளனர்

Hemavandhana - tamil.oneindia.com : சென்னை: அப்படின்னா இவ்வளவு நாள்
அதிமுக காத்து கிடந்ததெல்லாம் வீண்தானா என்று ஆகிவிட்டது. குறிப்பாக ஓபிஎஸ்! மத்திய அமைச்சர் பதவி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று இல்லாமல் போய்விட்டது.. அதாவது அதிமுக தரப்பில் யாருக்குமே சீட் தரப்படவில்லை!
அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்னாடி ஆகட்டும், அதற்கு பிறகு ஆகட்டும், முடிந்தது தமிழகத்தின் கதை என்றுதான் நினைக்க தோன்றியது. அவ்வளவு எதற்கு, "மாட்டிக்கிச்சே.. மாட்டிக்கிச்சே" என்று பாஜகவிடம் தமிழகம் சிக்கி கொண்டதாககூட மீம்ஸ்கள் பறந்தன.
அதேபோல, தமிழகம் சார்பில் யாராவது அமைச்சரவையில் இடம் பெறுவார்களா என்ற கிலியும் பற்றிக் கொண்டது. இதற்கு காரணம், சொந்த கட்சி உட்பட அதிமுக, பாமக, தேமுதிக, என ஒருத்தர் கூட ஜெயிக்கவில்லை. அதனால் நமக்காக குரல் கொடுக்க யாருமே இருக்க மாட்டார்களா, தமிழகம் சார்பாக "நாங்கள் இருக்கிறோம்" என்று ஒருத்தராவது சொல்ல மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு இன்று பொழுது விடிந்ததுமே தொத்திக் கொண்டது.


 போன முறை போலவே இந்த முறையும் 2 பேர் தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சர்களாகி உள்ளனர்.


இப்போதும் அதேபோல, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் இருவரும் பாஜக சார்பில் மத்திய அமைச்சர்களாகி உள்ளனர். வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றிய போது சிறப்பாக செயல்பட்டவர்தான் ஜெய்சங்கர். இவரை மோடிக்கு ரொம்ப பிடிக்குமாம். மோடி பிரதமராகி அமெரிக்கா போனபோது, இந்திய தூதரக அதிகாரியாக இருந்தவர்தான் ஜெய்சங்கர். அந்த சமயத்தில் மோடிக்கு ரொம்ப உதவி புரிந்திருக்கிறார். இவரது சமயோஜித புத்தி, சாமர்த்திய திறமைதான் மோடியை கவர்ந்திழுத்து, இன்றைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து உயர்த்தி உள்ளது.

அதேபோலதான் நிர்மலா சீதாராமனும்! மறைந்த இந்திரா காந்திக்கு பிறகு, முழுநேர பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பெண் என்ற பெருமையை பெற்றவர்தான் நிர்மலா சீதாராமன். எங்கே போய் பணியாற்றினாலும், நிர்மலா சீதாராமனை தமிழகத்து பெண்ணாகதான் நம் மக்கள் பார்த்து வருகிறார்கள். அதனால்தான் எம்பிக்களின் வரிசையில் நிர்மலாவின் செயல்பாடுகள் தமிழக மக்களால் உன்னிப்பாக தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

எல்லாரையும் பகைச்சுக்கிட்டு, நம்பி கூட்டணி வைத்த அதிமுகவுக்கு சீட் தரவே இல்லை. அதிலும், வாரணாசி போய் வணங்கிவிட்டு வந்தது முதல் ஓபிஎஸ் எடுத்த எல்லா முயற்சிகள் எல்லாமே வீணாகி விட்டது. டெல்லிக்கு வரச்சொல்லி போன் வந்ததால், எப்படியும் ரவீந்திரநாத் குமாருக்கு பதவி தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் என்ன ஆச்சோ தெரியவில்லை, எங்கு என்ன நடந்தோ புரியவில்லை. ரவீந்திநாத் குமாருக்கு பொறுப்பு தரவில்லை.

இதனால் தமிழகம் சார்பாக பிரதிநிதித்துவம் என்பதே இல்லாமல் போய்விடுமோ என்று ஒரேடியாக சொல்லி விட முடியாது என்றாலும், அதிமுகவுக்கு இது அதிர்ச்சிதான். ஓபிஎஸ்சுக்கோ பயங்கர ஷாக்தான்! தமிழகம் சார்பாக 2 பேர் பொறுப்பேற்றாலும் அவர்கள் பாஜக தரப்பினராக பார்க்கப்படுவது இயல்பு. ஒரு தொகுதியில்கூட பாஜக ஜெயிக்காத நிலையில் 2 பேர் மத்திய அமைச்சர்களாகி இருப்பதை எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை.
ஆனாலும், அதிமுக சார்பில் ஒருவரும் அமைச்சரவையில் இடம்பெறாதது தமிழகத்தின் ஒட்டுமொத்த தோல்வியின் அடையாளமாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை: