புதன், 13 மார்ச், 2019

பொள்ளாச்சி புதிய புகார்.. பாலியல் வன்கொடுமை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: புதிய புகார்!மின்னம்பலம் : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், மேலும் ஒரு பெண் இன்று புகார் அளிக்க முன்வந்துள்ளார்.
பொள்ளாச்சியில் இளம்பெண்கள், மாணவிகளை ஃபேஸ்புக்கில் நட்பு கொண்டு, அவர்களைத் தனியான இடத்துக்கு வரவழைத்து, மிரட்டி நிர்வாணப்படங்கள் எடுத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மீது குண்டர் சட்டம் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் பலருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டி வருகின்றன திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு இளைஞர் மீது புகார் தெரிவிக்க முன்வந்துள்ளார் ஒரு பெண். இது பற்றி, புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இதில், ஒரு இளைஞர் தன்னைக் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டியுள்ளார் அந்த பெண். “மூன்று வருஷங்களாக நாங்க லவ் பண்ணினோம். என்னை ஆசை வார்த்தை காட்டி, கூட்டிட்டுப் போய், பலவந்தப்படுத்தி தப்பான போட்டோஸ் எடுத்து வச்சு, என்னை மிரட்டி நிறைய காசு பணம் வாங்க ஆரம்பிச்சுட்டான். அதுக்கப்புறம் அவனுக்குத் தேவைப்படுற பொருள், பைக், வீட்டுக்குத் தேவையான பொருள் எல்லாம் வாங்கித் தரணும்னு மிரட்ட ஆரம்பிச்சான். இந்த போட்டோவை எல்லாம் உங்க அப்பாவுக்கு அனுப்பிச்சுருவேன். ஃபேஸ்புக், வாட்ஸ்அப்ல போட்டு உன் மானத்தை வாங்கிருவேன்னு சொன்னான்.

அவனை லவ் பண்றது தெரிஞ்சதும், இதுபோல பாதிக்கப்பட்ட பொண்ணுங்க என்கிட்ட பேச ஆரம்பிச்சாங்க. நானும் உன்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்க தான்னு சொன்னாங்க. நம்ம எல்லோரும் சேர்ந்து கம்ப்ளெய்ண்ட் பண்ணலாம்னு சொன்னப்ப, ‘என்னால வரமுடியாது, நான் வந்தா என் குடும்பமே சூசைட் பண்ணிக்கும்’ சொல்லிட்டாங்க. இந்த பிரச்சினைனு வந்தப்புறம், எனக்கொரு முடிவு வேணும். என்னை மாதிரி வேற யாரும் பாதிக்கப்படக் கூடாதுன்னு முன்வந்து கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருக்கேன். இதுக்குண்டான ஒரு நடவடிக்கை எடுத்து, போலீஸ் தண்டனை வாங்கித் தரணும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் தொடர்பாக, இன்று (மார்ச் 13) காலை முதல் காவல் துறையின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். “நேற்று (மார்ச் 12) சாயங்காலம் கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருக்கேன். இப்போவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. எதுவுமே பேசலை, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்கன்னு சொன்னாங்க. காலையில இருந்து இப்போவரைக்கும் வெயிட் பண்ணிட்டு தான் இருக்கேன். இப்போவரைக்கும் பதில் சொல்லலை” என்று தெரிவித்துள்ளார்.
இது போலத் தாங்களும் பாதிக்கப்பட்டதாக, சுமார் 15 பெண்கள் தன்னிடம் பேசியதாகக் குறிப்பிட்டுள்ளார் இந்தப் பெண். “விசாரிச்சுப் பார்த்த வரைக்கும், அவன் வேலை செய்ற பஸ் கம்பெனியில 100 புள்ளைங்க வரைக்கும் இதுமாதிரி இருக்குது. அரிசி கடத்தல், கஞ்சா கடத்தல் பண்றதா, அவன் வாயாலயே சொல்லியிருக்கான். நான் கேட்டிருக்கேன். அவனை விசாரிச்சாலே, நிறைய உண்மைகள் வெளிவர வாய்ப்பிருக்கு” என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர் வெளியாகவில்லை.
இந்த பெண் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் குறித்து, சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அடித்து நொறுக்கிய மக்கள்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து அதிமுக பிரமுகரான ‘பார்’ நாகராஜை தப்பவைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பொள்ளாச்சி அம்மா பேரை 34ஆவது வார்டு பொறுப்பாளராக இருந்த இவரை, கடந்த வாரம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தது அக்கட்சித் தலைமை. இந்த விவகாரத்தில் புகார் தெரிவித்த பெண்ணின் சகோதரரைத் தாக்கிய வழக்கில் மட்டும் நாகராஜ் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தது காவல் துறை. இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று அவருக்குச் சொந்தமான பார் அடித்து நொறுக்கப்பட்டது. பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் உள்ளே இருக்கும் மதுபான பார், இவரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுச் செயல்பட்டு வந்தது. இந்த சம்பவத்தின்போது, சுமார் 50க்கும் மேற்பட்டோர் மதுபானக் கடைக்கு அருகே கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதன்பின்னர், அங்கு வந்த காவல் துறையினர் மோதலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பார் நாகராஜ் வீடியோ
இன்று மாலையில் சில செய்தித் தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் பார் நாகராஜ் இரண்டு பெண்களுடன் இருப்பது போன்ற வீடியோக்கள் வெளியானது. இது பற்றி நியூஸ் 18 தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அதில், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது என்ற நோக்கத்துடன் அந்த பெண்களின் முகங்கள் மறைக்கப்பட்டிருந்தன. இந்த வீடியோக்களை சபரிராஜன், சதீஷ் இருவரும் எடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த பெண்களை மிரட்டிப் பணிய வைப்பது அந்த வீடியோவில் தெரிய வந்திருக்கிறது. தற்போது பார் நாகராஜ் தலைமறைவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது

கருத்துகள் இல்லை: