ஞாயிறு, 10 மார்ச், 2019

பாரிவேந்தருக்கு கள்ளகுறிச்சி ஒதுக்கப்படாது ? கூட்டணியில் இருந்து ஐஜேகே விலகல்?

திமுக கூட்டணியில்  இருந்து ஐஜேகே விலகல்?மின்னம்பலம் : திமுக கூட்டணியில் தொடரலாமா அல்லது விலகலாகா என்று பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறது.
திமுக தலைமையிலான கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்த ஐஜேகே கட்சிக்கு கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. ‘நாங்கள் கள்ளக்குறிச்சி தொகுதியை விரும்பிக் கேட்டிருக்கிறோம். அதுவே கிடைக்கும் என்று நம்புகிறோம்;’ என்று அறிவாலய வாசலிலேயே நிருபர்களிடம் பேசினார் பாரிவேந்தரின் மகன் ரவி.

ஆனால் சில நாட்களிலேயே காட்சிகளில் மாற்றம் ஏற்பட்டது. கள்ளகுறிச்சி தொகுதியில் போட்டியிட விரும்பி விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி விருப்ப மனு அளித்தார். இது ஐஜேகேவை அதிர வைத்தது.
இதுபற்றி விசாரித்தபோது உதயநிதியின் சிபாரிசில் கள்ளக்குறிச்சி தொகுதியை பொன்முடி மகனுக்கு ஒதுக்கியிருப்பதாக செய்திகள் வந்தன. இதுபற்றி, ‘உதயநிதி கோட்டா: பொன்முடி மகனுக்கு கள்ளக்குறிச்சியா?’ என்று மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் இன்று மக்களவை தொகுதிக்கு விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் இன்று பெரம்பலூர் தொகுதிக்கு விண்ணப்பித்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் எந்த கேள்வியும் கேட்கப்படாமல், “இந்தத் தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனால் நீங்கள் போகலாம்” என்று சொல்லிவிட்டார்கள்.
பெரம்பலூர் தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது என்றால் அது ஐஜேகேவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். கடந்த முறை பெரம்பலூரில்தான் ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் போட்டியிட்டார். ஆக அவர்களுக்கு முதலில் சொல்லப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி இல்லை என்று ஆகிவிட்டது.
இந்தத் தகவல் கிடைத்தவுடன் பாரிவேந்தர் இன்று தனது கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார். “போன தேர்தலில் நாம் பெரம்பலூரை கேட்டு வாங்கவில்லை. ஆனால் இம்முறை கள்ளக்குறிச்சிதான் வேண்டும் என கேட்டோம். வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் இப்போது பெரம்பலூரை எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். திமுகவுக்கு நாம் சொன்னபடி எல்லாவற்றையும் செய்துவிட்டோம். ஆனால் திமுக நமக்கு சொன்னபடி செய்யவில்லை. கள்ளக்குறிச்சி இல்லை என்றால் திமுக கூட்டணியில் தொடரலாமா?’’ என்று அப்போது விவாதம் நடந்திருக்கிறது.
இதற்கிடையில் கள்ளக்குறிச்சியில் கௌதக சிகாமணி நின்றால் வெற்றிபெற வாய்ப்பில்லை என்று அத்தொகுதிக்கு உட்பட்ட திமுகவின் பத்து ஒன்றிய செயலாளர்கள் தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்களாம்.

கருத்துகள் இல்லை: