திங்கள், 11 மார்ச், 2019

பொள்ளாச்சி கூட்டு பலாத்காரர்களை காப்பாற்ற துடிக்கும் அதிமுக அரசியல்வாதிகள் .. பெண்களை மிரட்ட வீடியோ வெளியிட்ட ரத்தத்தின் ரத்தங்கள

tamil.thehindu.com எஸ்.கோபு புகார் கொடுக்க வரும் பெண்களை மிரட்டவே பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்கள் வெளியானதாக சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் பைனான்சியர். கனகராஜின் மகன் திருநாவுக்கரசு (27). இவர் தந்தையுடன் சேர்ந்து பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ் (28), வசந்தகுமார் (24) ஆகியோருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி இளம் பெண்களை மடக்கி அவர்களைப் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி அதனை வீடியோவாக எடுத்துள்ளனர். அதைக் கொண்டு அந்தப் பெண்களை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவர்களிடம் இருந்து பணம், நகை ஆகியவற்றை பறிப்பதைத் தொழிலாகச் செய்து வந்துள்ளனர்
இந்த கும்பலால் கடந்த 6 ஆண்டுகளில்  பொள்ளாச்சியில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயம் வெளியில் தெரிந்ததால் தங்களின் எதிர்காலமே நாசமாகிவிடும் என்ற அச்சத்தில் கடந்த மாதம் வரை எந்தப் பெண்ணும் புகார் தெரிவிக்கவோ, தங்களின் குடும்பத்தினரிடம் பகிரவோஇல்லை.
இதனை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட இந்த கும்பல், தங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி பொள்ளாச்சியில் உள்ள ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரின் மகன், அவரின் நண்பர்கள் என பலருக்கு வீடியோவில் உள்ள பெண்களை மிரட்டி அவர்களிடம் அனுப்பி உள்ளனர். அதற்குக் கைமாறாக அவர்களிடமிருந்து பணம் பெற்றுள்ளனர். மேலும் அதிகாரத்தில் உள்ளவர்களின் நட்பையும் எளிதில் பெற்றுள்ளனர்.

கடந்த மாதம் 24-ம் தேதி பொள்ளாச்சியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி அதனை வீடியோவாக எடுத்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவர்களிடம் இருந்து தப்பித்து பெற்றோர்களிடம் நடந்த சம்பவங்களைத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதின் பேரில் போலீஸார் சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோரைக் கைது செய்தனர். திருநாவுக்கரசு தலைமறைவானார்.
முக்கியக் குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி திமுக, கொமதேக, மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. திருநாவுக்கரசு போலீஸிடம் சிக்கினால் தங்களை குறித்த தகவல்களை தெரிவித்து விடுவார் என்பதால் திருநாவுக்கரசைக் காப்பாற்ற ஆளுங்கட்சியினர் போலீஸாருக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றனர் என பல்வேறு தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டு தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து கடந்த 5-ம் தேதி திருநாவுக்கரசை மாக்கினாம்பட்டியில் வைத்து கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து இளம் பெண்களின் ஆபாச  வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள்அடங்கிய 2 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். பெண்ணின் அனுமதியின்றி ஆடைகளைக் களைவது, தொடுவது, பெண்ணின் அனுமதியின்றி ஆபாசமாக வீடியோ எடுத்து பாலியல் தொல்லைஅளிப்பது, வழிப்பறி மற்றும் பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் திருநாவுக்கரசு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் கூறியதாவது: ''திருநாவுக்கரசு குழுவினர் பணம் கொடுக்க முடியாத நிலையில் உள்ள பெண்களை தனது நண்பர்கள் வட்டத்தில் உள்ள பலரிடம் அனுப்பியுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பணம் பெற்றுள்ளனர். இதனைக் கடந்த 6 ஆண்டுகளாகத் தொழிலாகவே செய்து வந்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர், பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவரின் மனைவி, தனியார் கல்லூரி பேராசிரியை, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் இளம் பெண்கள், சில குடும்பப் பெண்கள் என 60-க்கும் மேற்பட்டவர்கள் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நண்பர்கள் வட்டத்தில் ஆளுங்கட்சியின் அமைப்பு பொறுப்புகளில் இருந்த சிலரும் இருந்துள்ளனர். அவர்களின் மூலம் பொள்ளாச்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரின் மகனின் தொடர்பு கிடைத்துள்ளது. திருநாவுக்கரசு அனுப்பி வைக்கும் கல்லூரி மாணவிகளை அந்தப் பிரமுகரின் மகன் காரில் வெளியூருக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்'' என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருநாவுக்கரசு பிடிபட்டு இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற உண்மையைச் சொல்லிவிடக்கூடாது என்பதற்காகவே திருநாவுக்கரசைப் பிடிப்பதில் போலீஸார் காலதாமதப்படுத்தி வந்துள்ளனர். இதற்கிடையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர் திருநாவுக்கரசை தொடர்பு கொண்டு அரசியல் கட்சியினர் யாருக்கும் இதில் சம்பந்தம் இல்லை என போலீஸில் கூறுமாறு மிரட்டியுள்ளனர்.
அத்துடன் தலைமறைவாக சுற்றித் திரியாமல் போலீஸிடம் பிடிபட்டு விடுமாறும், குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைத்தாலும் ஒரு வருடத்தில் வெளியே  வந்துவிடலாம் என அ ட்வைஸ் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் முக்கிய பிரமுகரின் மகன் சம்பந்தப்பட்ட வீடியோக்கள் ஏதேனும் திருநாவுக்கரசிடம் உள்ளதாக என விசாரிக்கப்பட்டதாகவும் போலீஸ்வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதற்கிடையில் மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் கொடுக்க முன்வந்துவிடக்கூடாது என்பதற்காக போலீஸாருக்கு மட்டுமே கிடைத்துப் பாதுகாக்கப்பட்ட வீடியோக்களில் சில சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இது புகார் கொடுக்க முன்வரும் பெண்களின் வீடியோக்களும் இதுபோல் வெளியாகும் என மறைமுகமாகவும், மனரீதியாகவும் மிரட்டுவதாக அமைந்துள்ளது என சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: