செவ்வாய், 12 மார்ச், 2019

திமுக, விசிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்து

தினகரன் : சென்னை: திமுக மற்றும் விசிக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் முடிவானது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்
மின்னம்பலம் :    திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்தத் தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்த கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. நேற்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “காங்கிரஸ், விசிக போட்டியிடும் தொகுதிகள் மட்டும் இன்னும் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தை முடிந்து இன்று இரவு அல்லது நாளைக்குள் முடிவு அறிவிப்போம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று (மார்ச் 11) மாலை அண்ணா அறிவாலயத்துக்குச் சென்ற விசிக தலைவர் திருமாவளவன், பொதுச் செயலாளர்கள் சிந்தனைச் செல்வன், ரவிக்குமார் ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினிடமும் துரைமுருகன் குழுவினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டோம். அதை திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். எந்தச் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார். அநேகமாக சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சின்னம் தொடர்பாக இதுவரை விசிக தரப்பில் முடிவு ஏதும் எடுக்கப்படாத நிலையில், இதுகுறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட சில திமுக நிர்வாகிகள் நம்மிடம் கூறுகையில், “இரண்டு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள், இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் செலவுக்காக தலா 20 கோடி தருகிறோம் என்று திமுக தலைமை சார்பாக கூறியுள்ளனர். யோசித்து முடிவெடுப்பதாகக் கூறிச்சென்ற திருமாவளவன், ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிடுகிறோம் என்ற தனது முடிவை திமுக தரப்பிடம் சொல்லியிருக்கிறார். அதாவது தான் தனிச் சின்னத்திலும், மற்றொரு வேட்பாளரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் என்பது அவரது ஐடியா. ஏனெனில் அப்படிச் செய்தால் தேர்தல் செலவுக்குப் பணம் கிடைத்தது போலவும் ஆகிவிட்டது, தனிச் சின்னத்தில் போட்டியிட்டது போலவும் ஆகிவிட்டது என்று நினைத்திருக்கிறார். ஆனால் இதற்கு திமுக தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுவிட்டதாம். இரண்டு தொகுதிகளுக்கும் உதயசூரியன் என்றால் ஓகே என்று கூறியிருக்கிறார்கள்” என்று கூறினர்.
இந்த நிலையில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பாக நேற்று இரவு விசிக நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை மேற்கொண்டார். சின்னம் என்பது ஒரு பிரச்சினையே இல்லை என நேற்று திருமாவளவன் சொல்லியிருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

கருத்துகள் இல்லை: