வெள்ளி, 15 மார்ச், 2019

BBC :நியூசிலாந்தில் 49 பேர் உயிரிழப்பு இருவேறு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு


நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக, கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் என்னும் மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த தாக்குதல் இரண்டு மசூதிகளில் நடைபெற்றது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு காவல்துறையினர் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர்.< "இது நியூசிலாந்தின் கருப்பு தினங்களில் ஒன்றாக இருக்கும்" என்று அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
இன்னும் எத்தனை துப்பாக்கித்தாரிகள் உள்ளனர் என்பது இறுதி செய்யப்படவில்லை என்றாலும், துப்பாக்கித்தாரிகளில் ஒருவர் ஆஸ்திரேலியர் என்பதும், அவர் குடியேற்றத்துக்கு எதிரான கொள்கையை கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இந்த துப்பாக்கித்தாரி தாக்குதல் தொடுக்கும்போது எடுத்ததாக கூறப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த உறுதிப்படுத்தப்படாத, கவலையேற்படுத்தக்கூடிய காணொளியை யாரும் பகிர வேண்டாமென்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. re>கிரைஸ்ட்சர்ச்சில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாக அந்நகர காவல்துறை ஆணையர் மைக் புஷ் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கித்தாரியிடமிருந்து தப்பிப்பதற்காக தாங்கள் அவ்விடத்தை விட்டு ஓடி வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
"முதலில் நாங்கள் மின்சார ஷாக் என்று நினைத்தோம். பிறகு சூழ்நிலையை புரிந்து கொண்டு அனைவரும் அங்கிருந்து ஓடத்தொடங்கினோம்" என்று சம்பவ இடத்திலிருந்து தப்பித்த மோஹான் இப்ராஹிம் என்பவர் நியூசிலாந்து ஹெரால்டிடம் தெரிவித்துள்ளார்.
"என்னுடைய நண்பர்கள் இன்னமும் அங்குதான் உள்ளனர். கூட்ட நெரிசல் அதிகம் இருந்ததால் என் நண்பர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று பயமாக உள்ளது."
கிரைஸ்ட்சர்ச் நகரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த மசூதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பித்தவர்கள், நிகழ்விடத்தில் இறந்த உடல்களை பார்த்ததாக கூறினாலும், அது இன்னும் காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்படவில்லை.



"மறு அறிவிப்பு வரும்வரை கிரைஸ்ட்சர்ச் நகரவாசிகள் தங்களது வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
கிரைஸ்ட்சர்ச்சின் ஹாகிலே பூங்காவுக்கு அருகிலுள்ள மற்றொரு மசூதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலிருந்து, நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியினர் பத்திரமாக வெளியேறிவிட்டாக பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: