வியாழன், 1 நவம்பர், 2018

கீழடி ஆய்வறிக்கை: அமர்நாத்துக்கு அனுமதி!

கீழடி ஆய்வறிக்கை: அமர்நாத்துக்கு அனுமதி!மின்னம்பலம்: கீழடியில் நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையைத் தயார் செய்ய தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு அரசாணை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகேயுள்ள கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 18 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இங்கு நடந்த முதல் இரண்டு கட்ட அகழாய்வின் பொறுப்பாளராக இருந்தவர் மத்தியத் தொல்லியல் துறை பெங்களூரு பிரிவு அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன். இவருக்குப் பதிலாக, பி.எஸ்.ஸ்ரீராமன் என்பவரைக் கீழடி ஆய்வின் பொறுப்பாளராக நியமித்தது மத்திய அரசு. அகழாய்வின்போது பொறுப்பில் இருந்த அதிகாரி ஆய்வறிக்கையை வெளியிடுவது வழக்கமாக இருந்துவரும் நிலையில், கீழடி முதல் இரண்டு கட்ட ஆய்வறிக்கையை வேறோர் அதிகாரி வெளியிடுவார் என்று தெரிவித்தது மத்தியத் தொல்லியல் துறை. இதற்கு, தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், கீழடி ஆய்வு குறித்த வழக்கொன்று தொடுக்கப்பட்டது. கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டுமென்றும், இந்த ஆய்வைக் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்குக் கீழடியில் தொடர வேண்டுமென்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 11ஆம் தேதியன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஐந்தாம் கட்ட அகழாய்வுக்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாகத் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று (அக்டோபர் 31) நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஸ்குமார் அடங்கிய அமர்வு முன்பாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கீழடியில் நடைபெற்ற முதல் இரண்டு கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையைத் தயார் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தார் மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்.
கீழடியில் முதல் இரண்டு கட்ட அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சுமார் 2,300 ஆண்டுகள் பழைமையானது என்று ஆய்வில் தெரியவந்ததாகவும், மூன்றாம் கட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கார்பன் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது மத்தியத் தொல்லியல் துறை.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்தியத் தொல்லியல் துறை வசம் இருந்துவரும் கீழடி அகழாய்வு அறிக்கையைத் தமிழகத் தொல்லியல் துறையிடம் கொடுக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை ஏழு மாதங்களுக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை: