செவ்வாய், 30 அக்டோபர், 2018

பட்டாசு வெடிக்க 2 மணி நேரத்திற்கு மேல் அனுமதி இல்லை - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

மாலைமலர் :புதுடெல்லி: இந்தியா முழுவதும் பட்டாசுகளுக்கு தடை
விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசுகளை தயாரிக்கவோ விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை இல்லை என தீர்ப்பளித்தது.
அதேசமயம், பட்டாசுகளை தயாரிக்கவும் வெடிக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது இரவு 11.30 மணி முதல் இரவு 12.30 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டது. மேலும், பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழக அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா மனுவை தாக்கல் செய்தார்.


அந்த மனுவில், கோர்ட்டு உத்தரவின்படி குறைந்த அளவு நேரமான 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஒரே நேரத்தில் அனைவரும் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் மாசுக்கேடு விளைவிக்கும் என்றும், தீபாவளியின் போது தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க (அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை) அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா கோரிக்கை விடுத்தார்.

இதேபோல் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பான நிபந்தனைகளை தளர்த்தக்கோரி சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரண்டு மனுக்களும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்றும், எந்த 2 மணி நேரம் என்பதை அரசு முடிவு செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

காலையில் ஒன்றரை மணிநேரம், மாலையில் ஒன்றரை மணி நேரம் அனுமதி வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்த தமிழக மக்கள் இந்த தீர்ப்பினால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: