செவ்வாய், 30 அக்டோபர், 2018

நடிகர் சிவகுமார் செல்பியும் ..சாரு நிவேதிதாவும்

charuonline.com : அராஜகம் பலவிதம்… சிவகுமாரோடு ஒரு ரசிகர் செல்ஃபி
எடுக்க முயல்கிறார். உடனே அந்த போனை ஆக்ரோஷமாகத் தட்டி விடுகிறார் சிவகுமார். போன் எங்கோ பறந்து போய் விழுகிறது.
காணொளியில் இந்தக் காட்சியைப் பார்த்தேன். தமிழ்நாட்டில் அல்லது இந்த உலகத்திலேயே ஒரு எழுத்தாளனாவது இப்படிச் செய்வானா? எத்தனை பெரிய அராஜகம் இது? அனுமதி கேட்க வேண்டியதுதான். ஆனால் அனுமதி இல்லாமல் செல்ஃபி எடுத்ததற்கு இப்படியா அராஜகமாக நடந்து கொள்வது? உண்மையில் சிவகுமார் அந்த அன்பரை அடித்திருக்க வேண்டும். அதைத்தான் எல்லா சினிமா நடிகர்களும் செய்கிறார்கள். செய்து வந்தார்கள். ஏனோ சிவகுமார் அடிக்காமல் விட்டார்.
இதெல்லாம் ஏன் வந்தது? இது சிவகுமாரின் தப்பு அல்ல. சினிமா நடிகர்களை, வெறும் கேளிக்கை காட்டிக் கொண்டிருப்பவர்களை, கேளிக்கையைத் தவிர வேறு எதுவுமே தெரியாதவர்களை நீங்கள் எல்லோரும் கடவுள் ரேஞ்ஜுக்குக் கொண்டு போய் வைத்துக் கும்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இவர்கள் தான் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடையே உரை ஆற்றுகிறார்கள். இவர்கள்தான் தமிழின் சிந்தனையாளர்கள்.

ஆனால் உண்மையில் இவர்கள் யார் என்பதை அந்தக் காணொளி உங்களுக்குக் காட்டும். இத்தனைக்கும் சிவகுமார் என் நெருங்கிய நண்பர். ஆனால் நட்பு பற்றியெல்லாம் நான் கவலைப்படுபவன் அல்ல. நீண்ட கால நட்பு என்னுடைய இந்தப் பதிவோடு முடிவுக்கு வரலாம். பரவாயில்லை. பாதகம் கண்டால் மனம் பதறுகிறது. எனக்குக் கம்பன் பற்றி மூன்று மணி நேரம் சொற்பொழிவு ஆற்றத் தெரியாது. ஆனால் மனிதனாக வாழ்கிறேன் என்பதில் நான் பெருமிதம் அடைகிறேன். எனக்குப் பிரியம் இல்லாமல் யாரேனும் செல்ஃபி எடுத்தால் – அப்படி நடக்க வாய்ப்பில்லை; என்னோடு செல்ஃபி எடுக்க ஆயிரம் பேர் இருந்தாலும் நான் தயார் – அப்படியே நான் பிரியப்படாமல் போனால், தம்பி, இப்போது எடுத்ததை அழித்து விடு என்றுதான் அன்போடு சொல்லுவேன். அவர் கையில் இருக்கும் போனைப் பிடுங்கி எறிய மாட்டேன்.
மிருகத்தை உள்ளே வைத்துக் கொண்டு மனித வேஷம் போடுபவர்களை தெய்வமாக வணங்கும் தமிழர்களைக் கண்டு பரிதாபம் கொள்கிறேன்…

கருத்துகள் இல்லை: