செவ்வாய், 30 அக்டோபர், 2018

இடைத்தேர்தல் ..20 தொகுதிகளுக்கும் விரைவில் .. அதிமுக தொகுதி பணிக்குழு நியமனம்

தினத்தந்தி : இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. தேர்தல்
பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நடந்த அ.தி.மு.க. அவசர ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. சென்னை, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் நடவடிக்கை செல்லும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழக அரசியல் களம் பரபரப்பு கட்டத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளையும் சேர்த்து, 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஒரு மினி பொது தேர்தல் என்பதால், இந்த இடைத்தேர்தலை சந்திக்க தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. அதேநேரத்தில் எம்.எல்.ஏ. பதவியை இழந்துள்ள டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையிட்டுக்கு செல்வதா? இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர். இந்தநிலையில், அ.தி.மு.க. அவசர ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.


இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த கூட்டத்தில் 20 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

ஆர்.கே.நகரில் வெற்றி வாய்ப்பை இழந்தது போல் இந்த 20 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்து விடக்கூடாது. கண்ணும் கருத்துமாக இருந்து 20 தொகுதிகளிலும் வெற்றியை பெற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. மேலும், எதிர்க்கட்சியால் சுப்ரீம் கோர்ட்டில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்ற வழக்கு விசாரணை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டம் மதியம் 2 மணிக்கு முடிவடைந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதன்படி பெரம்பூர் தொகுதி பொறுப்பாளர்களாக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் டி.ஜெயக் குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர், விஜிலா சத்தியானந்த் எம்.பி., மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, டி.ஜி.வெங்கடேஷ் எம்.பி., தி.நகர் சத்யா எம்.எல்.ஏ., விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ., ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

திருப்போரூர் தொகுதி- அமைச்சர் சி.வி.சண்முகம், இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, அமைப்பு செயலாளர்கள் மனோஜ் பாண்டியன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் டி.கே.எம்.சின்னையா, மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், எஸ்.ஆறுமுகம், வாலாஜாபாத் கணேசன், மரகதம் குமரவேல் எம்.பி.

பூந்தமல்லி (தனி) தொகுதி- அமைச்சர்கள் பா.பென்ஜமின், மாபா பாண்டியராஜன், வேணுகோபால் எம்.பி., மைத்ரேயன் எம்.பி., எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பி.வி.ரமணா, திருத்தணி அரி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நரசிம்மன், விஜயகுமார், சிறுணியம் பி.பலராமன், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி

கருத்துகள் இல்லை: