வெள்ளி, 2 நவம்பர், 2018

தீபாவளி வெடிகள் வெடிப்பதற்கு நேர அட்டவணை .. அரசு அறிவிப்பு

வெடிக்கணும், சத்தமில்லாம வெடிக்கணும்!தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தீபாவளியின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள். “இரவில் பட்டாசு வெடிப்பது வட மாநிலத்தவர்களின் வழக்கம். தென் மாநிலங்களில் காலையிலேயே பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதனால், தமிழகத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடுதலாக இரண்டு மணி நேரம் அவகாசம் தர வேண்டும்” என்று தமிழக அரசின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும், அது எந்த நேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் எனவும் தெரிவித்தது.
இந்நிலையில், இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதில், தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடிக்கும்போது பின்பற்ற வேண்டியவை குறித்து, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. “குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் திறந்த வெளியில் ஒன்றுகூடிப் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க முயற்சிக்கலாம். அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடிகளைத் தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
விபத்தில்லாத, மாசில்லாத தீபாவளியைக் கொண்டாடுமாறு தமிழக அரசு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை: