புதன், 29 ஆகஸ்ட், 2018

காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பெண் உயிரழப்பு!

காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பெண் பலி!மின்னம்பலம் :திருவேற்காடு காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று (ஆகஸ்ட் 29) உயிரிழந்தார்.
சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி பகுதி செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் கடைகளுக்கு பிஸ்கட், சிப்ஸ் போன்ற தின்பண்டங்களை விநியோகிக்கும் வேலையைச் செய்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா, செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். அப்பகுதியிலுள்ள வயதான நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று, அவர்களுக்குப் பணிவிடைகள் செய்து வந்தார். இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
கஜேந்திரன் தனது வீட்டில் புதிதாகக் கழிவறை கட்டி வருகிறார். இதன் மேற்கூரை, பக்கத்து வீட்டின் பின்பக்கக் கதவைத் திறக்க முடியாதபடி அமைந்துள்ளது. இதை எடுக்குமாறு, அந்த வீட்டில் வசித்துவரும் அமிர்தவள்ளி கூறினார். இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து, அமிர்தவள்ளி ரேணுகா மீது போலீசில் புகார் அளித்தார்.
இருவீட்டாரையும் அழைத்து போலீசார் சமரசம் பேசினர். இந்நிலையில், நேற்று மீண்டும் இருவீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
மீண்டும் போலீசார் ரேணுகாவின் கணவரை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தபோது, வெளியே நின்று கொண்டிருந்த ரேணுகா போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறினார். திடீரென்று, தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
போலீசார் ஓடிவந்து தீயை அணைத்தனர். அதற்குள் ரேணுகாவின் உடல் முழுவதும் தீக்காயம் பரவி, அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் ரேணுகா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்தார்.
போலீசார் அமிர்தவள்ளி குடும்பத்தினருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால்தான், ரேணுகா தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

கருத்துகள் இல்லை: