செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

15 வயது சிறுவன் காரோட்டி விபத்து; உடன் சென்ற மாணவர் இரழப்பு .. தந்தை கைது

/tamil.thehindu.com : எண்ணூரில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் காரோட்டி விபத்தில் சிக்கியதில் உடன் சென்ற மாணவர் பலியானார். 15 வயது சிறுவனை காரோட்ட அனுமதித்த தந்தை கைது செய்யப்பட்டார்.
எண்ணூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (45). தொழிலதிபராக உள்ளார். இவரது மகன் குமார் (15) பெயர் மாற்றப்பட்டுள்ளது. அருகில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். நேற்று குமார் தனது தந்தையின் காரை எடுத்துக்கொண்டு உடன் 6 நண்பர்களை ஏற்றிக்கொண்டு ஜாலி ரைடு போயுள்ளார். காரில் அவரது பள்ளி நண்பர்கள் ஆறு பேர் இருந்துள்ளனர். அனைவரையும் ஏற்றிக் கொண்டு எண்ணூர் விரைவுச் சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார். அன்னை சிவகாமி நகர் அருகே வந்தபோது, ஆங்கிலப்பட பாணியில் காரை ட்ரிப்ட் செய்ய ஹேண்ட் பிரேக்கை உபயோகித்துள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சுற்றி சுழன்றுள்ளது. இதனால் காரின் சக்கரங்கள் தரையில் தேய்ந்து டயர்கள் வெடித்துள்ளது.

இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த செங்கல் குவியலின் மீது மோதியது. இதில் முன்பக்க உட்கார்ந்திருந்த குமாரின் நண்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குமார் பலத்த காயமடைந்தார். மற்ற மாணவர்கள் சிறு சிறு காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக சாலையில் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த மாதாவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் உயிரிழந்த சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் தற்போதைய மோட்டார் வாகனச் சட்டப்படி 18 வயதுக்கு குறைவானவர்கள் விபத்து ஏற்படுத்தினால் அவர்களது பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர் கைது செய்யப்படுவார். அதன்படி காரை ஓட்டிய சிறுவன் குமாரின் தந்தை அலெக்ஸை போலீஸார் கைது செய்தனர். ஆனால் சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் அவரை சிறையில் அடைக்காமல் சொந்த ஜாமீனில் விடுவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை: