வெள்ளி, 15 செப்டம்பர், 2017

மருத்துவ கவுன்சில் மிகப்பெரிய மோசடி ஒன்றை செய்துள்ளது.. NEET தமிழகத்துக்கு வெளி மாநில மாணவர்கள் ..

#TNagainstNEET 2011லேயே நீட்டுக்கு எதிராக மருத்துவர் புருனோ அவரது வலைப்பதிவில் எழுதி இருந்த குறிப்பு கீழே:
மருத்துவத்திற்கான பொது நுழைவு தேர்வு - தமிழக அரசு எதிர்ப்பது சரியா
மருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது
இது குறித்து நடந்து வரும் வழக்கில், பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசின் அனுமதி பெற்று விட்டதாக மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் பொய் கூறியதை அடுத்து உச்ச நீதிமன்றம் அவ்வாறு நடத்துவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது
தமிழக அரசு பொது நுழைவு தேர்விற்கு எதிராக தனது நிலையை ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளது. பார்க்க சுட்டி
இந்நிலையில் பொது நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களின் நலன் கருதி என்பது போலவும், பல நுழைவு தேர்வு எழுதுவதற்கு பதில் ஒன்று மட்டும் எழுதினால் போதும் என்பது போலவும் (அவர்களின் கூற்றுப்படி 22 தேர்வுகளுக்கு பதில் ஒரு தேர்வு - இது குறித்து விரிவாக பார்க்கலாம்), தமிழக அரசு மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பது போலவும் விஷ(ம)ப்பிரச்சாரம் ஒன்று வலைத்தளங்களிலும், சமூகவலைத்தளங்களிலும், மின்னஞ்சல் குழுமங்களிலும் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில், இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்
இந்தியாவில் இருக்கும் மருத்துவக்கல்லூரிகளை மூன்றாக வகைப்படுத்தலாம்
நடுவண் அரசால் நிர்வாகிக்கப்படுபவை / மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை - ஏய்ம்ஸ் (AIIMS) , பி.ஜி.ஐ சண்டிகர் (PGI Chandigarh) , எஸ்.ஜி.பி.ஜி.ஐ லக்னோ (SGPGI Lucknow), ஜிப்மர் பாண்டிச்சேரி JIPMER, சித்திரை திருநாள் - திருவனந்தபுரம் (SCTIMST), நிம்ஹான்ஸ் பெங்களூர் (NIMHANS), நிம்ஸ் ஹைதரபாத் (NIMS) போன்றவை
மாநில அரசால் நிர்வாகிக்கப்படுபவை / மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை - சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, மதுரை மருத்துவக்கல்லூரி, கட்டாக் மருத்துவக்கல்லூரி போன்றவை
தனியாரால் நிர்வாகிக்கப்படுபவை / தனியார் கட்டுப்பாட்டில் உள்ளவை - சி.எம்.சி வேலூர், ராமச்சந்திரா, அண்ணாமலை போன்றவை
இதில் ஒவ்வொரு கல்லூரிக்கும் மாணவர் சேர்க்கை விதிமுறை வேறானது
நடுவண் அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகள் அனைத்தும், தங்களது கல்லூரியில் மாணவர்களை சேர்க்க தனித்தனியாக நுழைவு தேர்வு நடத்துகின்றன. அதாவது ஏய்ம்சில் சேர ஒரு தேர்வு எழுதவேண்டும், ஜிப்மரில் சேர வேறு ஒரு தேர்வு என்று சொல்லிக்கொண்டே போகலாம்
(ஆந்திரா, காஷ்மீர் தவிர பிற) மாநில அரசின் கீழ் இருக்கும் கல்லூரிகளில் சேர்க்கை இருவிதமாக நடத்தப்படுகிறது
இளங்கலை படிப்பிற்கு
இந்த கல்லூரிகளில் இருக்கும் இடங்களில் 100 இடங்களில் 85 சதவித இடங்கள் அந்த மாநில அரசால் நிரப்பப்படுகிறது
மீதி இருக்கும் 15 சதம் இடங்கள் நடுவண் அரசால் நிரப்பப்படுகிறது
முதுகலை படிப்பிற்கு
இந்த கல்லூரிகளில் இருக்கும் இடங்களில் 100 இடங்களில் 50 சதவித இடங்கள் அந்த மாநில அரசால் நிரப்பப்படுகிறது
மீதி இருக்கும் 50 சதம் இடங்கள் நடுவண் அரசால் நிரப்பப்படுகிறது
ஆந்திரா, ஜம்மூ காஷ்மீர் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே 100 சதம் இடங்களும் மாநில அரசால் நிரப்பப்படுகின்றன
இதில் ஒரு விஷயத்தை நினைவு கூற வேண்டும். 1980கள் வரை மாநில அரசிடமே முழு கட்டுப்பாடும் இருந்தது. 1980களின் இறுதியில் மத்திய அரசு இளங்கலையில் 15 சதமும் முதுகலையில் 25 சதமும் கேட்டது. அப்பொழுது என்.டி.ஆர் அவர்கள் விடாப்பிடியாக மறுத்துவிட்டார் என்பார்கள்
பிற மாநிலங்கள் இளங்கலையில் 15 சதவித இடங்களையும், முதுகலையில் 25 சதவித இடங்களையும் அளித்தன
2005ல் முதுகலையில் 25 சதவித இடங்கள் அதிகரிக்கப்பட்டு 50 சதவித இடங்கள் ஆயிற்று
தனியார் கல்லூரிகளில் சேர தனியாக தேர்வு மற்றும் சேர்க்கை முறை உள்ளது
--
தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவன் எத்தனை தேர்வு எழுதவேண்டும்
மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு
மாநில அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு
ஏய்ம்ஸ்
ஜிப்மர்
பி.ஜி.ஐ. சண்டிகர்
எஸ்.ஜி.பி.ஜி.ஐ.லக்னோ
சித்திரை திருநாள் திருவனந்தபுரம்
நிம்ஹான்ஸ் பெங்களூர்
நிம்ஸ் ஹைதரபாத்
சி.எம்.சி வேலூர்
ஆகா
பத்து நுழைவு தேர்வா, பொது நுழைவு தேர்வு வந்தால் பத்திற்கு பதில் ஒன்று தானே - இப்படி ஒரு நல்ல திட்டத்தை தமிழக அரசு ஏன் எதிர்க்க வேண்டும் என்று அங்கலாய்க்கிறீர்களா
சற்று பொருங்கள் !! மேலும் தோண்டுவோம்
இன்று மாநில அரசின் பாட திட்டம் (ஸ்டேட் போர்டு) என்று ஒன்று உள்ளது குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்
அதே போல் மத்திய அரசின் பாட திட்டம் (செண்ட்ரல் போர்டு - சி பி எஸ் சி) என்றும் உள்ளது
இரண்டு ஒன்றா, இல்லையே
இதில் நடுவண் அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிப்பது மேல் குடி மக்களே (பெரும்பாலும் மத்திய அரசின் ஊழியர்களில் குழந்தைகள்) என்பது உள்ளங்கை நெல்லிக்கனி -
நடுத்தர மற்றும் ஏழை மக்கள் படிப்பது மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் தான்
அதே நேரம்
மத்திய அரசின் பொது நுழைவுத்தேர்வு, எய்ம்ஸ் நுழைவு தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு ஆகியவை மத்திய அரசின் பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்படுபவை
மாநில அரசுகள் நடத்தும் நுழைவுத்தேர்வு ஒன்று மட்டுமே மாநில அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும்
எனவே
மத்திய அரசு நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் (பொது நுழைவுத்தேர்வு, எய்ம்ஸ் நுழைவு தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு போன்றவை) சி பி எஸ் சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகம் பேர் தேர்வு பெறுவார்கள். மாநில அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களில் வெகு சிலரே தேர்வு பெற முடியும்
மாநில அரசு நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் மாநில அரசின் பாடத்திட்ட பள்ளிகளின் மாணவர்கள் அதிகம் தேர்வு பெறுவார்கள்
இந்நிலையில்
மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு, அதாவது மேல்குடி மக்களுக்கு வசதியாக உள்ள தேர்வு மட்டுமே இருக்க
நடுத்தர மற்றும் ஏழைகள் படிக்கும் பாடத்திட்டத்தின் கீழுள்ள மாநில பொது நுழைவுத்தேர்வை இரத்து செய்ய வேண்டும்
என்று வழக்கு தொடர்ந்திருப்பவர்களின் உண்மை நோக்கத்தை அறிந்து கொள்வது சிரமமா
அதனால் தான் தமிழக அரசு, இந்த பொது நுழைவு தேர்வை எதிர்த்தது
இந்நிலையில் செய்தியின் படி, உச்ச நீதிமன்றம் பொது நுழைவு தேர்விற்கு பச்சை கொடி காட்டியதாக தெரிகிறது
இந்நிலையில் மருத்துவ கவுன்சிலில் அயோக்கியத்தனம் வெளிவந்து விட்டது. இது குறித்து தற்சமயம் வெளியாகும் தகவல்களின் படி The MCI went ahead and issued the two notifications on December 21. Strangely, the Ministry officials were unaware of the notifications until it was reported in the newspapers on Monday after which they issued directive to the MCI asking them to withdraw them immediately.
அதாவது மருத்துவ கவுன்சில் மிகப்பெரிய மோசடி ஒன்றை செய்துள்ளது
உச்ச நீதிமன்றத்தில் சென்று மத்திய அரசு பொது நுழைவு தேர்விற்கு அனுமதி அளித்தது என்று பொய் கூறி, நீதிமன்றத்தை ஏமாற்றி, பொது நுழைவு தேர்விற்கு நீதிமன்ற அனுமதியை வாங்கிவிட்டு, பிறகு மத்திய அரசிடம் சென்று அந்த நீதிமன்ற ஆனையை காட்டி உச்ச நீதிமன்ற ஆனை - எனவே பொது நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய் அரசை ஏமாற்றும் முயற்சி
பேரூந்து நிலையங்களில் சிட்டு குருவி லேகியம் விற்பது, முட்டுச்சந்தில் மூன்று சீட்டு சூதாட்டம், பிதாமகனில் சூர்யா செய்வதற்கும், அல்லது if tomorrow comes (குமுதத்தில் தாரகை என்று வெளிவந்த தொடரில்) ஜெப்பும், டிரேசியும் செய்வதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று எனக்கு புரியவில்லை
இது குறித்து தமிழக அரசும் மாணவர்களும் விழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே தெரிகிறது.
எற்கனவே மத்திய அரசு நடத்தும் கல்லூரியில் அனைத்து இடங்களும் மத்திய அரசால் நிரப்பப்படுகிறது. அதில் மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் பங்கு பெறுவது அரிது
இது தவிர மாநில அரசின் கல்லூரியில் 50 சதம் வரை மத்திய அரசு நிரப்புகிறது. (இதுவே அநியாயம் என்பது என் கருத்து)
இந்நிலையில், மாநில அரசு நடத்தும் கல்லூரிகள் மாநில அரசால் ஒரு இடத்தை கூட நிரப்ப வழியின்றி, அனைத்து இடங்களும், மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பொது நுழைவு மூலம் நிரப்பப்பட்டால் மாநில அரசின் பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காது
அனைத்து இடங்களும் மத்திய அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களே பெறுவார்கள்
வெறும் எதிர்ப்பு மட்டும் போதுமா ? மாணவர்களும், பொது மக்களும் அரசும் மேலும் என்ன செய்ய வேண்டும்
மத்திய அரசு நடத்தும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே நுழைவு தேர்வு இருக்க வேண்டி போராட வேண்டும்
ஆந்திராவை போல் இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டிற்கும் இடங்களை வழங்காமல் இருக்க வேண்டும். மாநில அரசு நடத்தும் கல்லூரிகளில் அனைத்து இடங்களையும் மாநில அரசே நிரப்ப வேண்டும்
இடங்களை வழங்குவதால் நம் மாணவர்கள் வெளி மாநிலங்கள் சென்று படிக்கிறார்களே ! நாம் வழங்க மறுத்தால் நமக்கு நஷ்டமா இலாபமா என்று கேள்வி எழுகிறதா
மாநில அரசு கல்லூரியில் இடங்களை வழங்காமல் வெளிவருவதால், ஏய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசு கல்லூரிகளுக்கு நம் மாணவர்கள் சென்று படிப்பதற்கு எந்த தடையும் கிடையாது. பிற மாநில அரசு கல்லூரிகளில் படிப்பது முடியாது. அவ்வளவு தான் (பிற மாநில தனியார் கல்லூரிகளில் படிப்பதற்கும் தடை இல்லை)
பிற மாநில அரசு கல்லூரிகளுக்கு சென்று படிக்கும் நம் மாணவர்களை விட இங்கு வந்து படிக்கும் வெளி மாநில மாணவர்களின் எண்ணிக்கையே அதிகம். இது குறித்து சந்தேகம் இருப்பவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி தகவல்களை கேட்டு சரிபார்த்துக்கொள்ளலாம்
சந்தேகங்களை கேட்கலாம்

கருத்துகள் இல்லை: