வியாழன், 14 செப்டம்பர், 2017

சிறுமியைக் (7 வயது ) கொன்றவனுக்கு பிணையா? கொடூர பாலியல் கொலையாளி தஷ்வந்த் வெளிவந்தான்

சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்திற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இதற்குச் சிறுமியின் பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
போரூர் முகலிவாக்கம் பகுதியிலுள்ள மதனந்தபுரத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் 7வயது மகள் ஹாசினி கடந்த பிப்ரவரி 7ம் தேதி காணாமல் போனார். இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாங்காடு காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். 4 நாட்களுக்குப் பின் ஹாசினியின் உடல் எரிந்த நிலையில் தாம்பரம் பைபாஸ் சாலையில் கண்டெடுக்கப்பட்டது. சிறுமி ஹாசினியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்ததாக, அதே குடியிருப்பை சேர்ந்த தஷ்வந்த் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தின் கீழ் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவரது தந்தை சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர்.
இதனையடுத்து அவருக்குப் பிணை கிடைத்துள்ளது.
தஷ்வந்திற்கு பிணை கிடைத்துள்ளதற்கு ஹாசினியின் பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிறுமியின் தந்தை செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘ உயர் நீதிமன்றத்தில் உத்தரவு ஏமாற்றம் அளிக்கிறது. கொலை செய்யலாம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுலாம் எளிதாக வெளியே வரலாம் என்பதை நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற குற்றவாளிகளுக்கு பிணை வழங்குவது நீதியின் மேல் மக்களுக்கு உள்ள நம்பிக்கையைச் சீரழிக்கும்.
தஷ்வந்த் மிகவும் ஆபத்தான நபர். அவர் வெளியே வந்தால் எதையும் செய்ய தயங்க மாட்டார். பத்து அல்லது இருபது ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கிடைப்பது நீதியாக இருக்காது. என் மகள் திருப்ப கிடைக்கமாட்டாள் என்று தெரியும். அவள் நிலை வேறு யாருக்கு ஏற்படக்கூடாது என்பதால்தான் கூறுகிறேன். தஷ்வந்திற்கு அதிகபட்ச தண்டனையை வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: