சனி, 16 செப்டம்பர், 2017

'ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.



teachers
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு குறித்து மதுரையில் வெள்ளிக்கிழமை, சங்க உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் 'ஜாக்டோ-ஜியோ' மாநில நிர்வாகிகள்.
Ads by Kiosked
தமிழகம் முழுவதும் கடந்த 9 நாள்களாக வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கை காரணமாக வெள்ளிக்கிழமை பிற்பகலில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
போராட்டத்தை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர், வரும் 21ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர்(ஜாக்டோ-ஜியோ) செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த டி.சேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், நீதிமன்றத்தின் தடையை மீறி ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்ந்தது. இதில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் அரசு ஊழியர்கள், அரசு அலுவலகங்களையும், ஆட்சியர் அலுவலகங்களையும் முற்றுகையிட்டு இரவில் தங்கி விடிய விடிய போராட்டங்களைத் தொடர்ந்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி டி.சேகரன், மற்றொரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், தமிழ்நாடு அரசு ஊழியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளர்கள் வெள்ளிக்கிழமை (செப்.15) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நான்கு அமைப்புகளின் நிர்வாகிகளான சுப்பிரமணியன், தாஸ், மோசஸ், எம்.சுப்பிரமணியம் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
அவர்களிடம் நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை கைப்பற்றி பொதுமக்கள் அங்கு செல்ல முடியாத நிலையை உருவாக்கியுள்ளனர். அரசு அலுவலகங்களை தனி நபர் சொத்துபோல பாவித்து செயல்பட்டுள்ளனர். அரசு அலுவலகங்களில் இரவு, பகலாக தங்கி போராட்டங்களை மேற்கொள்ள அரசு ஊழியர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. அரசு அலுவலகங்கள் என்பது பொதுமக்கள் பயன்பாட்டிற்கே அன்றி அரசு ஊழியர்களுக்கான ஓய்வு விடுதிகள் அல்ல. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அவர்களுக்கான அதிபதியைப்போல அரசு ஊழியர்கள் செயல்படக்கூடாது. மாநிலத்தில் தற்போது கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிவாரணம் கோரி விவசாயிகள் அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள் அங்கு போராட்டத்தை தொடர்வதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர்.
நீதிபதிகள் கடும் கண்டனம்: மேலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட பின்னரும் போராட்டத்தை கைவிட்டு வேலைக்குத் திரும்பாமல் இருந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். சென்னையில் போராட்டம் நடத்திய சேப்பாக்கம் மைதானத்தின் அருகிலேயே நீதிமன்றம் உள்ளது. இருப்பினும் போராட்டத்தை கைவிட்டு நீதிமன்றத்தை அணுகாமல் இருந்ததன் மூலம் நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் கேலிக்கூத்துக்கு உள்ளாக்குகிறீர்களா? என்று கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
மேலும், காலாண்டுத் தேர்வு நடந்து வரும் நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்வது மாணவர்களின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என்று போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குத் தெரியாதா?. எனவே எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றனர்.
அதற்கு போராட்டக் குழு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பல மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால், அதன் அறிக்கை இதுவரையில் தாக்கல் செய்யப்படவில்லை. காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்பு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பல கட்டங்களாக தொடர்ந்த பேச்சுவார்த்தையின் மூலம் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. எனவே காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக முறையான அறிவிப்பு வெளியிட்டு அதன் பின்னரே போராட்டத்தை தொடங்கினோம் என்றார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வேலைநிறுத்தப் போராட்டத்தை உடனடியாக திரும்ப பெறுவது குறித்து ஆலோசித்து முடிவைத் தெரிவியுங்கள் என்று கூறி விசாரணையை சிறிது நேரம் ஒத்திவைத்தனர்.
போராட்டம் ஒத்திவைப்பு: இதைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், தாஸ், மோசஸ், எம்.சுப்பிரமணியம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அதில், நீதிமன்ற உத்தரவின்பேரில் போராட்டத்தை தாற்காலிகமாக நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளோம். எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தங்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். நீதிபதிகளிடம் எங்களது கோரிக்கையை தெரிவித்துள்ளோம். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் தலைமைச் செயலருடன் செப்டம்பர் 21 ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டவில்லை என்றால், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுப்போம் என்று தெரிவித்தனர் தினமணி

கருத்துகள் இல்லை: