செவ்வாய், 12 செப்டம்பர், 2017

நவோதயா பள்ளிகள் என்பது சமூகநீதிக்கு எதிரானது! அதனால் தமிழகம் எதிர்கிறது!

கேள்வி : நவோதயா பள்ளி என்றால் என்ன? அதை ஏன் எதிர்க்கின்றீர்கள்? அது இந்தி பள்ளி என்பதாலா?
பதில் : முதலில் ஒரு விசயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.. நவோதயா பள்ளி என்பது முழு இந்தி பள்ளிக்கூடம் அல்ல. அதில் இந்தி ஒரு பாடமாக மட்டுமே இருக்கும். மாநில அரசின் பள்ளிகளில் இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்பதைத்தான் திராவிட இயக்கம் எதிர்க்கிறதே தவிர அவர்களின் மத்திய அரசின் பள்ளிகளில் அவர்கள் நடத்திக் கொள்வதை நாங்கள் எதிர்க்கவில்லை.
கேள்வி : அப்படி என்றால் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருப்பதைப் போல தமிழகத்தில் நவோதயா பள்ளிகளும் இருந்து விட்டு போகட்டுமே! பிறகு ஏன் அதை எதிர்க்கின்றீர்கள்?
பதில் : ராஜீவ் காந்தி காலத்தில் 1986 இல் உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கையில் "மாவட்டம் தோறும் ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டு அதில் நன்றாகப் படிக்கும் மாணவர்களை இனம் கண்டு சேர்த்து அவர்களுக்கு மேலும் சிறப்புப் பயிற்சி அளிப்பது" என்ற கொள்கை உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்டது தான் நவோதயா பள்ளிகள். இதில் சேர்க்கையில் இடஒதுக்கீடும் பின் பற்றப்பட்ட மாட்டாது.

கல்வியும், கற்பித்தலும், படிக்கும் வாய்ப்பும் மாணவர்களிடையே சமமாக வழங்கவே ஒரு அரசு செயல்பட வேண்டுமே தவிர மாணவர்களைப் பிரித்து சேர்க்கையில் இருந்து கற்பித்தல் வரை ஒருசாரார் மட்டுமே பயன் பெறும் வகையில் முழு பாகுபாடோடு செயல்படும் நவோதயா பள்ளிகள் என்பது சமூகநீதிக்கு எதிரானது! இது தீண்டாமையின் இன்னொரு வடிவம். அதற்காகத்தான் எதிர்க்கிறோமே தவிர அதில் இந்தி ஒரு பாடம் என்பதற்காக மட்டுமே அல்ல.
மேலும் ராணுவம் ரயில்வே என மத்திய அரசுக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இருக்கும் போது அதில் துவங்காமல் தமிழக அரசின் நிலத்தையும் நிர்வாகச் செலவில் பங்கையும் பெற்று மாநில மொழியை தவிர்ப்பது ஏற்புடையதா என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
M. M. Abdulla

கருத்துகள் இல்லை: