செவ்வாய், 12 செப்டம்பர், 2017

ஓட்டுநர் உரிமம் இடைக்கால தடை! உயர் நீதிமன்றம்..

ஓட்டுநர் உரிமம் இருந்தால் தான் புதிய வாகனம் வாங்க முடியும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் நிகழும் அதிகப்படியான விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, அசல் ஓட்டுநர் உரிமம் இருந்தால் தான் வாகனத்தை இயக்க முடியும் என்றும் வாகனங்கள் வாங்க முடியும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், புதிய வாகனம் வாங்க அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து வாகன விற்பனை முகவர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், வாகனம் வாங்கும் பலர் தங்களது வாகனங்களை இயக்க ஓட்டுநரை அமர்த்திக் கொள்கின்றனர். எனவே அரசின் இந்த உத்தரவு நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத ஒன்று என குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று(செப்,12) விசாரணைக்கு வந்த போது, புதிய வாகனம் வாங்க ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதி துரைசாமி தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதிலளிக்கக்கோரி தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: