வெள்ளி, 15 செப்டம்பர், 2017

தினகரன் : ஒரே வாரத்தில் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்!

மின்னம்பலம் : ஒரு வாரத்திற்குள் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரை
வீட்டுக்கு அனுப்புவோம் என்று சென்னை அடையாறிலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கான ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற்றுள்ள நிலையில்,இவர்கள் தகுதி நீக்கம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது குறித்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
வரும் 20ஆம் தேதிவரை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று நேற்றைய தினம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் சென்னை அடையாறிலுள்ள தனது இல்லத்தில் இன்று (செப்டம்பர் 15) செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன், "சில ஊடகங்களில் நான் கோபமாகப் பேசியதாக கூறியுள்ளனர்.ஆனால் நான் கோபப்படவில்லை. நான் எப்போதும் இப்படியேதான் இருப்பேன்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள என்னுடைய சித்தப்பா நடராசனைப் பார்க்கச் சென்றுவந்ததால் சிறிது மன வருத்தத்தில் இருந்தேன். அது உங்களுக்குக் கோபமாக இருந்ததாகத் தெரிந்திருக்கலாம். அவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய உள்ளோம். தற்போது அவர் நலமாக உள்ளார்.
எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்டில் தங்கவைத்திருப்பது அநேகமாக முடிவுக்கு வரவுள்ளது. அடுத்த வாரத்திற்குள் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தை வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நிலையும் வந்துகொண்டிருக்கிறது.
எங்கள் எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த வாபஸ் கடிதத்தாலும், முதல்வர் கூட்டிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 117 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ளவில்லை என்பதாலும்,பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி திமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நேற்று சபாநாயகர் அளித்த கடிதத்துக்கு விளக்கமளிக்க எங்களுடைய எம்.எல்.ஏ.க்கள் வராத காரணத்தை எம்.எல்.ஏ. வெற்றிவேலும், எங்கள் தரப்பு வழக்கறிஞரும் சபாநாயகரிடம் விளக்கினர்.
சபாநாயகர் நோட்டீசுக்கு எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் தமிழக போலீசார் ரிசார்ட்டிற்குச் சென்று முற்றுகையிட்டனர். செந்தில்பாலாஜியிடம், எங்கள் தரப்புக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம், ஆதரவு தரவில்லை என்றால் உங்கள் குடும்பத்தின் மீது வழக்கு போடுவோம் என்று கூறியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் செந்தில்பாலாஜி மீது வழக்கே போடுகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்.
இதுபோல பொய் வழக்குகள், மிரட்டல், உருட்டல்களை எல்லாம் பழனிசாமி செய்து பார்க்கிறார். எங்களால் முதல்வரானவர் எடப்பாடி. எந்த எம்.எல்.ஏ.க்களின் ஆதரவில் முதல்வரனாரோ, அவர்களை மறந்துவிட்டு, 12 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சியை எதிர்த்த பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துவிட்டார். இதுதான் கலியுகம் என்பது. இந்த கலியுகத்தில் அதர்மம், துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை. இதற்கெல்லாம் இன்னும் ஒரு வாரத்தில் சட்டமன்றத்தில் முடிவு கட்டுவோம்.
சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டு முதல்வரானவர்தான் எடப்பாடி பழனிசாமி. அவர்தான் சசிகலாவின் படமே தலைமை கழகத்தில் இருக்கக் கூடாது என்று தூக்கி எறிந்தவர். பொதுச் செயலாளரை நீக்கி பொதுக்குழு என்ற பெயரிலே ஒரு கூட்டத்தைக் கூட்டியவர். இன்று நாங்கள் திமுகவுடன் கூட்டணி சேர்ந்துவிட்டதாகக் கூறுகிறார்.
நான் மீண்டும் கூறுகிறேன் திமுக எங்களுடைய பிரதான எதிர்க்கட்சி, அவர்களுடன் எங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட்டணி கிடையாது. ஆளுநரிடம் 21 எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு எதிராகக் கடிதம் கொடுத்தனர். ஆளுநர் காலம் தாழ்த்தினார். திமுக சும்மா இருக்குமா? அவர்களுக்குத் தேர்தல் வர வேண்டும் என்பது எண்ணம். அதனால் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். சபாநாயகரைச் சந்திக்க வெற்றிவேல் சென்றபோது எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு உடனே ஓட்டெடுப்பு நடத்தலாம் என்று நினைத்துள்ளனர். அதனால் நாங்களும் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளோம்.இதில் என்ன தவறு? இது யதார்த்தமாக நடந்த ஓன்று.
சட்டம் எங்களுக்கு ஆதரவாக உள்ளது. நீதிமன்றத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும். நான் செல்கிற இடத்திலெல்லாம் தொண்டர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் வர வேண்டும். அதற்காக மீண்டும் தேர்தல் வர வேண்டும். இது ஜெயலலிதாவின் ஆட்சியல்ல, துரோகிகள் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தின் கூட்டணி ஆட்சி என்றே கூறுகின்றனர். பெரும்பான்மை இல்லாதபோது எதிர்க்கட்சிகள் ஆட்சியை கவிழ்க்கத்தானே முயற்சி செய்யும்? இந்த ஆட்சி கலைந்த பிறகு தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்தால் என்னிடம் நீங்கள் கேட்கலாம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குறுக்கு வழி என்னவென்றால் எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்துவிட்டால், மொத்த எண்ணிக்கையில் தேவைப்படும் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை 106ஆகக் குறைந்துவிடும் எனவே உடனடியாக வாக்கெடுப்பு நடத்தலாம் என்று முயற்சி செய்கிறார். ஆனால் நீதிமன்றம் எங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. நிச்சயம் எடப்பாடி பழனிசாமி ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. யாரால் முதல்வரானாரோ அவருக்கு துரோகம் இழைத்தவரை, அவருக்கு வாக்களித்த எங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் குள்ளநரித்தனத்தில் ஈடுபட்டால், நீதி தேவதை விட்டுவிடாது. நாங்கள் துணை முதல்வர் பதவி வாங்குவதற்காக தர்மயுத்தம் நடத்தவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: