திங்கள், 11 செப்டம்பர், 2017

‘நீட்’ தேர்வு தேவைதானா? கல்வியல் மாணவர்களின் கருத்து

thetimestamil.com காயத்ரி நரசிம்மன் : நானும் பிரியங்காவும் முதுகலை கல்வியியல் துறை மாணவர்கள்(ஆம் அப்படி ஒரு பட்டப்படிப்பு இருக்கிறது‌. அது பி.எட் பட்டத்தில் இருந்து வேறுபட்டது)‌. எங்கள் பாடத்திட்டத்தில் ‘பாடப் புத்தகங்களைப் புரிந்து கொள்ளுதல்’ என்று ஒரு பிரிவு உண்டு. அதன்மூலம், தற்செயலாய் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிடுகிற பாடப்புத்தங்களை மதிப்பீட்டு நோக்குடன் அணுகக் கூடிய வாய்ப்பு கிட்டியது. அதில் பங்கேற்ற எங்கள் பேராசிரியர்களும்(அவர்கள் பாடத்திட்ட, பாடப்புத்தக வடிவமைப்பிற்கான கலந்தாய்வு அமைப்புகளில் முக்கியப் பங்காற்றுபவர்கள்), 20 மாணவர்களும்(என்னையும் பிரியங்காவையும் தவிர மற்ற பதினெட்டு பேருமே தமிழ்நாடு பாடத்திட்டத்திற்குத் தொடர்பில்லாதவர்கள்) ஒப்புக்கொண்ட ஒரு‌ விஷயம் என்னவென்றால். தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின்‌ அறிவியல் பாடப்புத்தகங்கள், அதே வகுப்பிற்கான சி.பி.எஸ்.சி பள்ளிகள் பின்பற்றும் என்.சி.ஈ.ஆர்.டி அறிவியல் பாடப்புத்தகங்ளை விட நன்றாகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

அதே நேரத்தில் தமிழகப் பாடத்திட்டத்தின் சமூக அறிவியல் பாடப் புத்தகங்கள் இன்னமும் கேள்விகளை ஊக்குவிக்குமாறு வடிவமைக்கப்படவேண்டும். ஆனால் ஒரு நீண்ட கலந்துரையாடலுக்குப் பின்னர், தமிழகப் பாடத்திட்ட நூல்கள் கோர்வையாகவும், சரியான அளவு கலைச்சொல் பயன்பாட்டையும், வாசிப்பவர்களுக்கு சுவாரசியத்தையும், தெளிவான விளக்கங்களை, தேவையான அளவு கொண்டவைகளாக இருக்கின்றன என முடிவுக்கு வந்தோம்.
நம் பாடப்புத்தகங்கள் இன்னும் சிறப்பாக வடிவமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் பாடப்புத்தகங்களின் தரமற்ற தன்மையே நம் கல்வியின் தரக்குறைவுக்கு காரணம் என்பது சுருங்கிய, பிழையுள்ள பார்வை. இந்த பாடத்திட்டத்தில் இருந்து உருப்படியாய் ஏதும் வெளிப்படாது என்பதும், பாடத்திட்டத்தை மாற்றினால் ஒழிய மருத்துவ மாணவர்கள் முன்னேற முடியாது என்பது தவறான வாதம். கவனிக்க வேண்டியது என்னவெனில் தமிழகப் பாடநூல்கள் 2012ல் பெரிய மாற்றத்துக்கு உட்பட்டிருக்கின்றன. மேலும் அவற்றில் 2014-15, 2015-16 கல்வி ஆண்டுகளில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் சி.பி.எஸ்.ஸி பின்பற்றும்‌ பாடநூல்கள் 2005 ஆம் ஆண்டு கடைசியாக திருத்தி அமைக்கப்பட்டன.
முக்கியக் கேள்விக்கு‌ வருவோம். நீட் எதைச் சோதிக்கிறது?
நீட் தேர்வு மருத்துவம் படிக்க விரும்பும் ஒருவரது தகுதியைச் சோதிக்கிறதா? எல்லா தகுதித் தேர்வுகளையும் போல தேர்வெழுதும் நபருக்கு என்னவெல்லாம் தெரியாது என்பதை ‘நீட்’ தேர்வும் சோதிக்கிறது. மருத்துவத்துப் படிப்புக்கான தகுதித் தேர்வில், தேர்வெழுதுபவர் எவ்வளவு தூரம் சமூகப் பணியாற்ற விருப்பம்‌ கொண்டுள்ளார்? மருத்துவப் படிப்பிற்குத் தேவையான திறன்கள் அவரிடம் உள்ளனவா? போன்றவற்றை அறிய முடியுமா?
தரம் உயரும் ‌என்று நீட் தேர்வை ஆதரிப்பவர்கள், தேர்வெழுதுபவரின் தகவல் அறிவை மட்டும் கணக்கெடுக்கிறார்கள். ‘நீட்’ தேர்வின் மூலம் தரமான மருத்துவர்களைக் கொண்டு வர முடியும் என்பது தர்க்கப்பூர்வமற்ற மிக மேலோட்டமான வாதம். காரணம் தரம் என்பதைக் கண்டறியும் வேலையை நீட் தேர்வு செய்வதில்லை. பணத்தைக் கொடுத்து அறிவைப் பெற்று தேர்வில் வெற்றி பெறுவதை நடைபெறச் செய்வதன் மூலம், நாம் இவ்வளவு காலம் எந்தச் சமூகக் கட்டமைப்பை உடைத்தெறிய நினைக்கிறோமோ, அந்தச் சமூகக் கட்டமைப்பை, நீட் தேர்வு மீண்டும் நிறுவப் பார்க்கிறது‌. சமூகத்தின் ஒரு சிறிய சாரார் மட்டும் முதலாளிகளாய் ஆகும் அதே நேரத்தில் கிராமப்புற ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை நிதமும் பள்ளிக்கு வரவைக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெருமுதலாளியின் மகனையும், முதல் தலைமுறை பள்ளிக்குச் சென்ற ஒரு மாணவனையும் ஒரே தராசில் நாம் நிறுத்த முடியாது. காரணம் அவர்கள் ஒரே சமூகப் படிநிலையைச் சேர்ந்தவர்கள் கிடையாது.
எதை நீட் செய்யுமென்று சொல்கிறார்களோ அதைச் செய்யாத போது ஏன் மக்களை இதற்காக வதைக்க வேண்டும்? பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண்ணும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு சிறு சதவிகிதத்தினர் நீட் தேர்வை முடக்குவதால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் பெரும்பான்மையினரின் நிலை வேறு. உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் 85:15 என்ற விகிதாச்சாரத்தை மீண்டும் பரிசீலித்து இந்த ‘நீட்’ சர்ச்சையால் மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட மாணவர்களின் கனவைச் சிதையாமல் காப்பாற்ற வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் சொல்லப்பட்டவை முறையான ஆய்வாக நிகழவில்லை என்றாலும் இரு பாடத்திட்டத்தின் நூல்கள் ரீதியாக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடனான நீண்ட கலந்தாய்வின் வழியாக உருவான எண்ணங்கள்.

கருத்துகள் இல்லை: