வியாழன், 9 பிப்ரவரி, 2017

துரைமுருகன் : எங்களால் ஓபிஎஸ்ஸுக்கு எந்த ஆபத்தும் இல்லை. சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்போம்

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை உருவாகியிருக்கும் நிலையில் “சூழலுக்கு ஏற்ப திமுக முடிவெடுக்கும்” என்று அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைப் பார்த்து பேசும்போது, “நீங்களே 5 ஆண்டுகளுக்கு முதல்வராக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் எல்லா சக்திகளையும் பெற்றிருக்க வேண்டும். உங்களுக்கு வேண்டிய சக்தியை தர நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்தப் பக்கத்தில் இருந்து (அதிமுக எம்எல்ஏக்களைச் சுட்டிக்காட்டி) எதுவும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று பேசியிருந்தார். தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.
இதனால் அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா நீக்கியுள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

“நீங்களே முதலமைச்சராக இருங்கள். நீங்களே 5 ஆண்டுக்கும் முதல்வராக இருங்கள். எங்களால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அந்தப் பக்கம் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றுதான் சட்டப்பேரவையில் பேசினேன்.

இப்போது தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் உருவாகியிருப்பதாகக் கூறுகிறீர்கள். இப்போது அங்கிருந்துதான் பிரச்சினை வந்திருக்கிறது. சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். அதைவிடுத்து அவசரமாக இப்படி இருந்தால் அப்படி செய்யலாம். அப்படி இருந்தால் இப்படி செய்யலாம் என்று அரசியலில் பேசி சிக்கிக்கொள்ளக் கூடாது. என்ன நடக்கிறது? என்று பொறுத்திருந்து பார்ப்போம். எங்களால் ஓபிஎஸ்ஸுக்கு எந்த ஆபத்தும் இல்லை. சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்போம் என்றார் துரைமுருகன்.  tamilthehindu

கருத்துகள் இல்லை: