வியாழன், 9 பிப்ரவரி, 2017

ஸ்டாலின் : பன்னீர்செல்வம் ஆதரவு கோரினால் திமுக ஆதரிக்காது! சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியது பற்றி தெரியாது!

மதுரை: சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு கோரினால் திமுக ஆதரிக்காது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழகத்தின் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தான் ராஜினாமா செய்ய மிரட்டப்பட்டேன் என்ற பகீர் தகவலை சென்னை மெரினாவில் வெளியிட்டார். அதன் பிறகு, சசிகலா தலைமையிலான அதிமுகவே ஆட்டம் கண்டுவிட்டது. அப்போதே, ஓபிஎஸ் இப்படி பேசுவதற்கு காரணம் திமுகதான் என்று சசிகலா குற்றம்சாட்டினார். மேலும், சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உடன் ஓபிஎஸ் சிரித்து சிரித்துபேசினார் அப்போதே எனக்கு தெரியும் இதுபோல் நடக்கும் என்று யூகித்தேன் என்றெல்லாம் சசிகலா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசினார். முன்னதாக, சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பேசும் போது ஓபிஎஸ் தலைமையிலான அரசுக்கு திமுக ஆதரவளிக்கும் என்று கூறியிருந்தார். இதெல்லாம் சசிகலா திமுக மீது குற்றம்சாட்டு வைக்க காரணமாக இருந்த நிலையில், தற்போது திமுகவின் துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் சட்டசபை கூட்டத்தில் ஓபிஎஸ்சை திமுக ஆதரிக்கும் என்று சத்தியமங்கலத்தில் செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்.
மேலும், ஓபிஎஸ் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினால் எந்தவித எதிர்ப்பும் இன்றி எதிர்ப்பார்ப்பும் இன்றி திமுக ஆதரவு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், சற்று நேரத்திலேயே மதுரை விமான நிலையத்திற்கு வந்த திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இந்தச் செய்தியை மறுத்துள்ளார். மேலும், சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் ஓபிஎஸ் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆதரவு கேட்டால் தராது என்றும் திட்டவட்டமாக மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: