சனி, 11 பிப்ரவரி, 2017

தினமணி : சிங்கம் 3 ... ஹாலிவுட் இயக்குநர்கள் கூட சிந்திக்கத் தயங்குகிற பிரம்மாண்டம்.




இயக்குநர் ஹரியின் வழக்கமான ஆர்ப்பாட்டத்திற்கும் அமர்க்களத்திற்கும் சற்றும் குறையாமல் வந்திருக்கும் திரைப்படம் சிங்கம் -3. முந்தைய பகுதிகளின் அதே பாணியில் குறிப்பாக இரண்டாம் பகுதியின் வார்ப்பை அப்படியே பின்பற்றி உருவாகியிருக்கிறது மூன்றாம் பாகம்.  என்னவொன்று தமிழக வாசனையோடு இழந்ததோடு கூடுதலான ஆந்திர காரமும் இருக்கிறது.  சூர்யாவின் வணிகச்சந்தை மதிப்பு மாநிலங்களின் எல்லையைத் தாண்டியிருப்பதால் ஆந்திர மக்களின் ரசனையை மனதில் பிரதானமாகக் கொண்டு அதற்கேற்ப களத்தின் பின்னணியை உருவாக்கி கூடுதல் மசாலாவைக் கலந்து சுடச்சுட பரிமாறியிருக்கிறார் ஹரி.
வளர்ந்த நாடுகள் தங்களின் மின்னணு கழிவுகளையும் மருத்துவக் குப்பைகளையும் மூன்றாம் உலக நாடுகளில் கொட்டி அவற்றை குப்பைத்தொட்டியாக பயன்படுத்துகின்றன. இந்த உலகளாவிய பிரச்னையை ஆவேசமாக உரையாடுவதன் சாக்கில் உருவாகியிருக்கும் சிங்கம் -3, தமிழ் சினிமாவின் சூழலில் கூடுதலான தூய்மைக்கேட்டையும் ஒலி மாசுபடுதலையும் ஏற்படுத்தியிருப்பது முரண்நகை.
***
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிவதனால் ஏற்படும் அரசியல் குழப்பங்களோடு படம் துவங்குகிறது. விசாகப்பட்டினத்தின் போலீஸ் கமிஷனர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். ஆந்திர காவல்துறையாலேயே துப்பு துலக்க முடியாத இந்த வழக்கை திறமையாகவும் நேர்மையாகவும் கையாள்வதற்கு தமிழ்நாட்டிலிருந்து ஒரு காவல்துறை அதிகாரியை வரவழைத்தால்தான் சாத்தியமாகும் என்று அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சரே கருதுகிறார். 
அந்த நேர்மையான அதிகாரி வேறு யார்? நம் துரைசிங்கம்தான். 
நிற்காமல் வந்து கொண்டேயிருக்கும் அதிரடியான சாகசக் காட்சிகளுக்குப் பிறகு கமிஷனரின் கொலையாளிகளைக் கண்டுபிடித்து அழிக்கிறார். ஆனால் அந்தக் கொலையின் காரணத்திற்குப் பின்னால் இந்தியாவின் சுற்றுச்சூழலை மோசமாக பாதிக்கும் இன்னொரு பிரம்மாண்டமான சதியும் இருக்கிறது. இரும்பு இறக்குமதி என்கிற போர்வையில் ஆஸ்திரேலியாவின் கழிவுகளை இந்தியாவில் கொட்டும் இண்டர்நேஷனல் வில்லனை எவ்வாறு துரைசிங்கம் வதம் செய்கிறார் என்பது மீதமுள்ள அதிரடி. (இரண்டாவது பாகத்தில் ஆப்ரிக்க வில்லன், இதில் ஆஸ்திரேலியா). 
**
'விசையுறு பந்தினைப்போல்-உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்' என்கிற பாரதியின் வேண்டுகோள் அவருக்கு அருளப்பட்டதோ இல்லையோ, சூர்யாவிற்கு கிடைத்திருக்கிறது. இயற்பியல் விதிகளின் நடைமுறைகளையெல்லாம் உடைத்து விட்டு நான்கு திசைகளிலும் பறக்கிறார், துள்ளுகிறார், உதைக்கிறார் துரைசிங்கம். அமர்ந்து படம் பார்க்கும் நமக்கே சில கலோரிகள் எரிந்து விட்டிருக்குமோ என்று களைப்படையும் அளவிற்கு சூர்யா தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும் சாகசக் காட்சிகள் வந்து கொண்டேயிருக்கின்றன.
பல வருடங்களாக உடற்பயிற்சி செய்த திடகாத்திரமான உடம்பு.. பொறாமையை ஏற்படுத்தும்  வகையில் கிண்ணென்று இருக்கிறது. ஹீரோவிற்கு அல்ல, வில்லனுக்கு. (தாக்கூர் அனூப் சிங்).
முதல் படத்தில் நாயகியாக வந்து விட்டதால் அடுத்தடுத்த பாகங்களிலும் அனுஷ்காவை நடிக்க வைக்க வேண்டிய சங்கடம் இயக்குநருக்கு. வில்லனை விடவும் புஷ்டியாக இருக்கும் இவர் மூன்றாவது பாகத்தில் 'ஆனுஷ்கா'வாக மாறி இருப்பதால் பாடல் காட்சிகளில் சூர்யாவின் அக்காவைப் போலவே தெரிகிறார். 
இந்தச் சங்கடத்தை சமன் செய்யும் உத்தியை ஹரி இரண்டாம் பாகத்திலேயே கண்டுபிடித்து விட்டதால் அதில் இருந்த ஹன்சிகாவிற்குப் பதிலாக இதில் ஸ்ருதிஹாசன். நாயகன் விவாகரத்தானவர் என்று தெரிந்தவுடனேயே  இவருக்கு காதல் வந்து விடுகிறதாம். இதைச் சாக்காக வைத்து கவர்ச்சி பொங்கி வழிய  இரண்டு மூன்று டூயட்கள். ஆனால் அசந்தர்ப்பமான நேரங்களில் வந்து எரிச்சலூட்டுகின்றன. 
இதைப் போலவே முதன்மை நாயகியான அனுஷ்காவையும் ஏன் வேறு எந்த இளைஞனும் காதலிப்பதில்லை, கனவுகள் காண்பதில்லை என்கிற கலாசார ரகசியம் புரியவில்லை. 
சூரியின் தேய்வழக்கு நடிப்பும் அவரது எரிச்சலூட்டும் நகைச்சுவையும் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகிறது. இது தவிர ரோபோ ஷங்கர், பாடகர் கிரிஷ் (இவர்களெல்லாம் போலீஸாம்), துரைசிங்கத்துடன் கத்துவதில் போட்டி போடும் வில்லன் சரத் சக்சேனா, சுமன், சரத்பாபு, 'உன்னை மாதிரி ஒருத்தனைத்தாம்லே தேடிக்கிட்டிருந்தேன்' விஜய்குமார் என்று பல உப நடிகர்கள்.
குற்றம் செய்யும் ஹேக்கராக வரும் நிதின் பிரசாத், காவல்துறைக்கு உதவும் நோக்கில் செய்யும் கணினி சாகசங்களையெல்லாம் பார்த்தால் 'விக்கிலீக்' புகழ் ஜூலியன் அசான்ஜேவே மயக்கம் போட்டு விழுந்து விடுவார்
**
'களத்தின் பின்னணி தெலுங்குப் பிரதேசம்தான் என்றாலும் பார்வையாளர்களின் புரிதலுக்காக தமிழில் உரையாடுவார்கள்' என்கிற நகைச்சுவையுடன் சமாளித்தாலும் தெலுங்கு வாசனை மிகையாகாமல் பார்த்துக் கொள்வதில் இயக்குநரின் திறமை தெரிகிறது. 
ஹரி காட்சிகளை உருவாக்கும் விதத்தைப் பார்த்தால் ஒரு பக்கம் சுவாரசியமாகவும் இன்னொரு பக்கம் திகிலாகவும் இருக்கிறது. அத்தனை வே.............கம். படத்தில் வரும் கட்டைவண்டி, ரோடுரோலர் கூட ஜெட் வேகத்தில்தான் பரபரவென்று ஓடுகிறது. படத்திற்குப் படம் ஹரி கூட்டி வரும் வேகத்தைப் பார்த்தால், இனி அவரது படங்களை டிவிடியில் வாங்கி ஸ்லோமோஷனில் வைத்து பார்த்தால்தான் காட்சிகள் புரியுமோ என்று கூட பீதியேற்படுகிறது. 
இதைப் போலவே காட்சிகளை இயக்குநர் விதமும் செயல்படுத்தும் விதமும் கூட விநோத ரணகளமாக இருக்கிறது. ஒரு சண்டைக்காட்சியில் வில்லனின் ஆளை துரைசிங்கம் அடித்து வீழ்த்த அவன் எடை இயந்திரத்தின் மேல் போய் விழுகிறான். மெஷின் எடை சரசரவென உயர்ந்து  1.5 டன் எனக் காட்டுகிறது. அந்தளவிற்கு தனது லாஜிக்கில் கறாரான ஆசாமியாக இருக்கிறார் ஹரி. 
ரன்வேயில் இருந்து கிளம்புகிற விமானத்தை, துரைசிங்கம் டாட்டா சுமாவை வைத்துக் கொண்டு வழிமறிப்பதெல்லாம் ஹாலிவுட் இயக்குநர்கள் கூட சிந்திக்கத் தயங்குகிற பிரம்மாண்டம். இதைப் போன்ற காட்சிகளையெல்லாம் அப்படியே சுவாரசியத்தில் மூழ்கி ரசித்து விட்டு வருவதா அல்லது தானாக உசுப்பபடுகிற மூளையின் காரணமாக சிரித்து விட்டு வருவதா என குழப்பமாகவே இருக்கிறது. 
நாயகனின் பெயரிலும் படத்தின் தலைப்பிலும் 'சிங்கம்' என்று வந்துவிட்டதால் சூர்யா விரல்களை அகல விரித்து பாய்ந்து ஒவ்வொருவரின் பிடறியில் அடிப்பதும் அப்போது அவர் முகம் கிராஃபிக்ஸில் சிங்கமாக மாறுவதும் நகைச்சுவை சாகசம்.
தேசியக்கொடி, இந்தியன் போன்ற விஷயங்களையும் வெளிநாட்டைச் சேர்ந்த வில்லனையும் வைத்துக் கொண்டு உணர்ச்சி பொங்க 'தேசப்பற்று' கபடியாடியிருக்கிறார் இயக்குநர். 'இந்தியாவில் மக்கள் ரோட்டிலேயே குப்பை போடுகிறீர்கள்தானே?' என்று வில்லன் கேட்கும் கேள்வியில் உள்ள தவிர்க்க முடியாத உண்மை இந்த தேசப்பற்று ஆவேசத்தில் மழுங்கிப் போகிறது. 
***
இசை - ஹாரிஸ் ஜெயராஜ். தெலுங்கு வாசனையை கட்டாயமாக கொண்டு வந்து விட வேண்டும் என்று இயக்குநர் கட்டாயப்படுத்தினாரோ என்னமோ, தேவி ஸ்ரீ பிரசாத்தின் முகமூடியை எடுத்து மாட்டிக் கொண்டு வாத்தியங்களை துவம்சம் செய்து இசையை வலுக்கட்டாயமாக வரவழைத்திருக்கிறார். எல்லாமே எரிச்சலூட்டும் இரைச்சல் ரகம். 
என்றாலும் விதிவிலக்காக தாமரையின் அபாரமான வரிகளில் வரும் 'முதல் முறை' என்கிற மெல்லிசைப் பாடல் மட்டுமே கவனத்தை கவர்ந்து ஹாரிஸ் முழுவதும் காணாமற் போய் விடவில்லை என ஆறுதல் அளிக்கிறதுது.  படம் துவங்கிய முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் இந்தப் பாடல் வந்தாலும், திரையரங்கில் மக்கள் வந்து அமர்ந்து வேகத்திலேயே கலைந்து வெளியே செல்கிறார்கள். ரசிகர்களின் இந்த விநோதமான மனநிலையை ஆய்வு செய்து எவராவது பிஎச்டி வாங்கலாம். 
ஒளிப்பதிவைக் கையாண்ட பிரியனும் படத்தொகுப்பைக் கவனித்த வி.டி.விஜயனும் டி.எஸ்ஜெய்யும் நிச்சயம் அதிக ஓவர்டைம் பார்த்திருப்பார்கள். இரண்டு, மூன்று திரைப்படங்களுக்கான உழைப்பை இதில் கொட்டியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். படத்தில் அத்தனை வேகமாக பிரேம்கள் சுழன்று கொண்டேயிருக்கின்றன.
***
மாயமான மலேசிய விமானம் முதல் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்பது வரை சமூகம் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய ரகசியம் அடங்கிய கேள்விகள் பல இருக்கின்றன. துரைசிங்கம் - காவ்யா திருமணம் இந்தப் பாகத்திலாவது நடந்தா என்று தமிழ் சமூகம் அறியத் துடிக்கும் விஷயத்திற்கு விடை இந்தப்படத்தில் இருக்கிறது. 
சிங்கத்தின் முதல், இரண்டாம் பாகத்தின் களம் தமிழ்நாட்டுப் பின்னணயில் இருந்ததால் படத்துடன் சற்று ஒன்றவாவது முடிந்தது. முதல் பாகத்தில் நாயகனுக்கு அபாரமாக ஈடுகொடுத்த எதிர்நாயகன் பிரகாஷ் ராஜை எவரும் மறக்கவே முடியாது. 
ஆனால் சிங்கம் -3 ல் அவ்வாறான வலுவான நடிப்புடன் கூடிய வில்லன்களும் காட்சிகளும் இல்லாமல் துரைசிங்கத்தின் சாகசம் மட்டுமே பிரதானமாக அமைந்திருப்பதால் சலிப்பூட்டுகிறது.
'சிங்கத்தின் வேட்டை தொடரும்' என்று இறுதியில் திகிலையூட்டியிருக்கிறார் ஹரி. 'குட்டி' துரைசிங்கம் உருவான அடையாளத்தையும் வேறு தந்திருக்கிறார். அடுத்த பாகத்தையாவது வேறு பாணியலான திரைக்கதையுடன் அமைத்தால் இழந்த சுவாரசியத்தை மீட்கலாம்

கருத்துகள் இல்லை: