திங்கள், 27 ஏப்ரல், 2015

மிஸ்டர் கழுகு :ஜெயாவுக்கு நெருங்கும் நெருக்கடி ! கனிமொழி யாருக்காக பழிசுமக்​கிறார்?


‘‘எல்லோர் பார்வையும் டெல்லியை நோக்கியே!” என்றபடியே வந்து குதித்தார் கழுகார்!
‘‘தமிழகத்தின் மொத்த அரசியலும் டெல்லியை எதிர்நோக்கியே இருக்கிறது. டெல்லி என்றால் பி.ஜே.பி தலைமை, மத்திய அரசு என்று நினைக்க வேண்டாம். அனைவரும் எதிர்பார்த்திருப்பது உச்ச நீதிமன்றத்தையே!” என்று சிறுவிளக்கத்தையும் சிந்திவிட்டு கழுகார் தொடங்கினார்.
‘‘ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் செய்துள்ளார்கள். விசாரணையை முடித்த நீதிபதி குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பைத் தள்ளி வைத்துள்ளார். இதில், அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஆஜராக உத்தரவு போட்டது. கர்நாடகத்துக்கு வழக்கை மாற்றினால், அந்த மாநில அரசுதானே அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் எதிர் மனு போட்டார். அதனுடைய விசாரணை கடந்த 21, 22 தேதிகளில் உச்ச நீதிமன்றத்தில் நடந்தது!”


‘‘ஏப்ரல் 27-ம் தேதி தீர்ப்பு தரப்போவதாக நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்களே?”
‘‘அன்பழகன் மனு மீதான விசாரணை மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு நடந்தது. அந்த விசாரணை ஆளும் கட்சி வட்டாரத்தை கவலை அடைய வைத்துள்ளது. ‘இந்த வழக்கில் பவானி சிங் ஆஜராவதற்கு எந்த வகையான அங்கீகாரமும் இல்லை. இதில் வழக்கறிஞரை நியமிப்பதற்கு தமிழக அரசுக்கு எந்த வகையிலான சட்டரீதியான உரிமையும் கிடையாது. தண்டனை பெற்றவர்கள் ஜாமீன் கேட்டபோது பவானி சிங் ஆட்சேபனை செய்யவே இல்லை. இது அவருடைய உள்நோக்கத்தையே காட்டுகிறது’ என்று தி.மு.க தரப்பு வழக்கறிஞர் அந்தியர்ஜுனா வாதம் வைத்தார். ஜெயலலிதா தரப்பில் நாரிமன் வாதாடினார். ‘இந்த வழக்கை நடத்துவதே தமிழக அரசுதான். வழக்குச் செலவையும் அவர்கள்தான் பார்க்கிறார்கள். எனவே, அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் அவர்களுக்குத்தான் உள்ளது’ என்று தனது வாதத்தை வைத்தார். 21-ம் தேதி விசாரணை முடிந்ததுமே, மறுநாள் விசாரணை தொடரும் என்று அறிவித்தார்கள்!”
‘‘மிகமிக வேகமாக இருக்கிறதே!”
‘‘டெல்லி, சென்னை, பெங்களூரு என அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த வாரத்தில் இதுதான் ஹாட் டாபிக். இரண்டு நாட்களில் நீதிபதிகளை நியமித்து, விசாரணை உடனடியாக இரண்டு நாட்கள் நடந்த அதிவேக துரித வழக்கு இதுதான். 22-ம் தேதி விசாரணை இன்னும் துரிதமாக நடந்தது. முந்தைய நாள் வைத்த வாதங்களையே தி.மு.க தரப்பு அந்தியர்ஜுனாவும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாரிமனும் வைத்தார்கள். புதிதாக தே.மு.தி.க வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜரானார்!”
‘‘இவர் இங்கே எப்படி திடீரென்று வந்தார்?”
‘‘மேல்முறையீட்டு மனுவில் பவானி சிங் ஆஜரானபோதே உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டவர்தான் இந்த வழக்கறிஞர். ‘நீங்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் போய் மனுவை தாக்கல் செய்யுங்கள்’ என்று அப்போது உச்ச நீதிமன்றம் சொன்னது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் மனு போட்டதால் இவர்கள் அமைதி ஆகிவிட்டார்கள். இந்த விஷயங்களை எல்லாம் ஜி.எஸ்.மணி சொல்லியிருக்கிறார். அதையும் நீதிபதிகள் குறித்துக்கொண்டார்கள். அப்போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாரிமனிடம், ‘இந்த விவகாரத்தில் சட்டப் பிரிவுகள் என்ன சொல்கின்றன’ என்று கேட்ட நீதிபதிகள் தங்கள் கருத்தைச் சொல்லச் சொல்ல நீதிமன்ற வளாகமே நிசப்தம் ஆனது. ‘இந்த மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் ஆஜரானது நடைமுறை விதிகளுக்கு எதிரானது’ என்று வெளிப்படையாகவே சொன்னார்கள். அதற்காக இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தத் தேவையில்லை என்றும் சொன்னார்கள்!”
‘‘பவானி சிங் நியமனம் செல்லாது என்று சொன்னால், மறுவிசாரணை நடத்த வேண்டும் என்பதான சூழ்நிலையாக அமையுமே?”
‘‘நீதிபதிகள் அதற்கு விளக்கம் சொல்லியிருக்​கிறார்கள். ‘ஒரு நீதிபதி, வழக்கறிஞரின் வாதத்தை மட்டும் வைத்து தீர்ப்பு அளிக்கப் போவதில்லை. அந்த வழக்கின் பல்வேறு தன்மைகளைப் பார்த்துத்தான் தீர்ப்பு எழுதுவார்கள். ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சாட்சிகள், ஆவணங்கள் அடிப்படையில் மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்து தீர்ப்பு தரலாம். அதற்குத் தடை இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கலாம் என்று சொல்லியிருப்பதை நினைத்தாலே பயமாக இருக்கிறது’ என்று அ.தி.மு.க-வினர் இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பவானி சிங் பற்றி அன்பழகனின் வழக்கறிஞர் அந்தியர்ஜுனா சில புகார்களைச் சொல்லியிருக்கிறார். ஆனால் அதனை நீதிபதிகள் அனுமதிக்கவில்லை. அன்பழகன் தனது பதிலை எழுத்துப்பூர்வமாக 23-ம் தேதி தரலாம் என்றும் நீதிபதிகள் சொன்னார்கள். வியாழக்கிழமை காலையில் ஜெயலலிதா தரப்பு ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. ‘நாங்களும் எழுத்துப்பூர்வமான மனுவைத் தாக்கல் செய்யலாமா’ என்று அவர்களுக்கும் அனுமதி கொடுத்துவிட்டார்கள் நீதிபதிகள். இந்த நிலைமையில்....!”
‘‘தீர்ப்பு எப்போது?”
‘‘அதைத்தான் சொல்ல வருகிறேன்! விசாரணையி​ன்போது நீதிபதிகள் சொன்னதை வைத்துப் பார்த்தால், கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பை வழங்கு​வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால்
27-ம் தேதி தரப்போகும் தீர்ப்பில் என்ன சொல்லப் போகிறார்கள், ஏதாவது நிபந்தனைகள் இருக்கிறதா என்பதையும் நினைத்து பதற்றத்தில் இருக்கிறது ஜெயலலிதா தரப்பு. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் எதிரொலிக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும் நினைக்கப்படுகிறது. திங்கள் வரை காத்​திருப்போம்” என்ற கழுகார், உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் 2ஜி விவகாரத்து சிக்கலை அடுத்து சொல்ல ஆரம்பித்தார்!
‘‘2ஜி வழக்கில் புதிய எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சொல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 20-ம் தேதி சி.பி.ஐ கொளுத்திப்போட்ட திரி, பரபர என பற்றத் தொடங்கியிருக்கிறது. இதைக் கடந்த இதழில் லேசாகக் கோடிட்டும் காட்டி இருந்தேன்!”
‘‘ஆமாம்!”
‘‘அப்போது சி.பி.ஐ சார்பில் சொல்லப்பட்ட விஷயம்தான் தி.மு.க வட்டாரத்தை பதற வைத்துள்ளது. ‘2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றவாளியாக இருக்கும் ஒருவர், இதே வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு தனிநபரின் தவற்றை மூடிமறைக்க முயற்சி செய்கிறார். தனி நபரை பாதுகாக்கும் வகையில் இப்போதுள்ள குற்றவாளி முயற்சி செய்ததை விசாரணை நடத்துவதற்காக புதிதாக எஃப்.ஐ.ஆரை வழக்கில் சேர்ப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியை சி.பி.ஐ கோருகிறது’ என்று சொன்ன சி.பி.ஐ வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அத்துடன் நிற்காமல் 2ஜி ஊழல் தொடர்பாக சி.பி.ஐ மேற்கொண்ட விசாரணை பற்றி சில புதிய விவரங்களை சீலிடப்பட்ட ஓர் உறையில் போட்டு  நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளார். ‘2ஜி வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு தனிநபருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்துள்ளார். இதை நிரூபிப்பதற்குத் தேவையான ஆடியோ டேப் ஆதாரம் சி.பி.ஐ அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளது. அந்த டேப்பின் நம்பகத்தன்மை குறித்து பரிசோதித்துப் பார்த்ததில், அந்த உரை​யாடல் மேற்கண்ட இரு நபர்களுக்கும் இடையில் நடைபெற்றதுதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றும் சொல்லியிருக்கிறார். தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா அடங்கியோர் பெஞ்ச்  இதனை விசாரித்தது. இந்த விசாரணையின் அடுத்த நிலை என்ன என்பது ஏப்ரல் 30-ம் தேதிதான் தெரியும். காரணம் அன்றைக்குத்தான் விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறது நீதிமன்றம்!”
‘‘என்ன ஆதாரம்? கலைஞர் டி.வி. அலுவலகத்துக்கு கனிமொழி வந்து செல்லும் சி.டி இருப்பதாகச் சொன்னீரே... அதுமட்டும்தானா?”
‘‘இன்னும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதையும் சொல்லி விடுகிறேன்! கடந்த தி.மு.க ஆட்சியில் உளவுத் துறை அதிகாரியாக இருந்த ஜாஃபர் சேட்டுடன் கலைஞர் டி.வி-யின் சரத்தும் கனிமொழியும், கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனும் பேசிய செல்போன் உரையாடல்கள் முக்கிய ஆதாரங்களாக நீதிமன்றத்தில் காட்டப்படப் போகிறதாம்.  மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்டுப் பரபரப்பை கிளப்பினார் அல்லவா? அந்த கேசட்தான் இதற்கு அடிப்படை!”
‘‘இதுபற்றி ‘2ஜி டிரிங்... டிரிங்’ என்ற தலைப்பில் 9.2.14 தேதியிட்ட ஜூ.வி இதழில் ஏற்கெனவே எழுதி இருக்கிறோமே?”
‘‘அதுதான்! (அந்த உரையாடலின் முக்கியமான பகுதிகள் பெட்டிச் செய்தியாக வெளியிடப்பட்டு உள்ளது!) இந்த உரையாடலின் பகுதிகளை ஆதாரமாகக் கொண்டுவந்து 30-ம் தேதி உச்ச நீதிமன்றத்​தில் அவிழ்க்கப் போவதாகச் சொல்கி​றார்கள். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் எப்படி டீல் செய்யும் என்பதில் தி.மு.க வட்டாரத்துக்குப் பதற்றம் அதிகமாகி வருகிறது. கருணாநிதி, கனிமொழி ஆகியோர் பதற்றம் கூடுதலாகிக் காணப்படுகிறார்களாம். ‘இந்த விஷயத்தில் தன்னை தனிமைப்படுத்தி பழிவாங்கப்​பட்டதாக நினைக்கிறார் கனிமொழி. யாருக்காகவோ நான் பழிசுமக்​கிறேன் என்றும் அவர் நினைக்கிறார்’ என்றும் அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். கனிமொழிக்கு கருணாநிதி ஆறுதல் சொன்ன​தாகவும், இது ஸ்டாலினுக்குத் தெரியவந்து அவரும் கனிமொழியை சந்தித்துப் பேசிய​தாகவும் சொல்கிறார்கள். இதற்கிடையில் இன்னொரு தகவலும் சொல்லப்படுகிறது!”
‘‘அது என்ன?”
‘‘மாநிலங்களவையில் கனிமொழி பேசிய காட்சிகள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் அப்படியே ஒளிபரப்பப்பட்டது. ஆனால், தி.மு.க ஆதரவு தொலைக்காட்சியில் வரவில்லையாம். ‘உங்களுக்காக கஷ்டத்தை அனுபவித்தவர் அவர். நீங்கள்தானே கனிமொழி பேச்சை ஒழுங்காக ஒளிபரப்ப வேண்டும்’ என்றதாம் அந்தக் குரல். தீயாய் இருந்ததாம் அந்தக் குரல். அதன் பிறகுதான் இவர்கள் ஒளிபரப்பி இருக்கிறார்கள்!”
‘‘அந்தக் குரல் யாருடையது?”
‘‘கேட்கும் உரிமை உள்ளவரின் குரல்தான் அது! தங்கம் திருடியது யார் என்று சொல்ல வருகிறேன்!’’ என்று டாப்பிக்கை திருச்சி பக்கம் மாற்றினார். விகடன்.com

கருத்துகள் இல்லை: