புதன், 29 ஏப்ரல், 2015

மோடி : இலங்கையில் தற்போது இந்தியாவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது ஆனால் வைகோ எல்லாவற்றையும் கெடுக்கிறார் ?

இலங்கையில், தற்போது இந்தியாவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. இதை பயன்படுத்தி, பிரச்னையை தீர்க்கலாம். ஆனால், தமிழகத்தில் இப்பிரச்னையை பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி தான் நடக்கிறது. இதில் அரசியல் செய்வதையே தமிழகத்தில் சில கட்சிகள் வாடிக்கையாக கொண்டுள்ளன. இப்படி இருந்தால், எப்படி பிரச்னையை தீர்க்க முடியும்? குறிப்பாக, இலங்கை தமிழர் பிரச்னையில், வைகோவால் பிரச்னைகள் தான் ஏற்படுகின்றன. பிரச்னையை புரிந்து கொள்ளாமல், உணர்ச்சிகரமாக பேசுகிறார். சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு வெடிக்கிறார்; அழுகிறார். எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் நடந்தால், என்ன செய்வது? எப்படி பிரச்னையை தீர்க்க முடியும்?
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமையில், 10 கட்சிகளின் பிரதிநிதிகள் குழு, டில்லியில், பிரதமர் மோடியை சந்தித்தபோது பேசப்பட்ட விஷயங்கள் பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன இதுபற்றிய, விவரம் வருமாறு:டில்லியில், பிரதமரை அவரது அலுவலகத்தில், தமிழக பிரதிநிதிகள் குழு சந்தித்தபோது, முதலில், குரூப் போட்டோ எடுக்கப்பட்டது. அது முடிந்ததும், தாங்கள் வந்திருக்கும் நோக்கம் குறித்து, பிரதமரிடம் விஜயகாந்த் சில நிமிடங்கள் பேசினார். பின், கொண்டு வந்திருந்த மனுவை, பிரதமரிடம் அளித்தார்.காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, தி.மு.க., பிரதிநிதிகள் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் அடுத்தடுத்து வலியுறுத்தினர்.
அதனால், தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை, திருச்சி சிவாவும், கனிமொழியும் விரிவாக, பிரதமரிடம் விளக்கினர். அதற்கு, 'இன்னும் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு துவங்கவில்லையே' என, பிரதமர் கேள்வி எழுப்பினார்.உடனே, காங்கிரஸ் பிரதிநிதி கோபண்ணா, 'சமீபத்திய பட்ஜெட்டில், கர்நாடக அரசு, இந்த திட்டப் பணிக்காக, 25 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது' என்றார்.'அது சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி; இன்னும் மத்திய அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதியை, அந்த மாநில அரசு பெறவில்லை. அப்புறம் எப்படி அணை கட்ட முடியும்?' என்று பிரதமர் கேட்டுள்ளார்.இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கத்தான், காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்று, கோபண்ணா கூறினார். அதையே, மற்றவர்களும் வலியுறுத்தினர்.

பதற்ற சூழல்:

'இது, இரு மாநில விவகாரம். அதனால், கவனமாக செயல்பட வேண்டிய அவசியம், அரசுக்கு உள்ளது. தேவையற்ற பதற்ற சூழல் உருவாவதை தவிர்க்கவும் வேண்டி உள்ளது' என்று பிரதமர் பூடகமாக பதில் கூறியுள்ளார். இருப்பினும், மேகதாது அணை விவகாரம் குறித்து, அம்மாநில அரசுடன் பேசப்படும் என, பிரதமர் கூறியதை அடுத்து, இலங்கை படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையை தமிழக பிரதிநிதிகள் எழுப்பினர்.இந்த பிரச்னையை கிளப்பியதும், பிரதமர் கொஞ்சம் சூடாகி கூறியதாவது:இலங்கையில், தற்போது இந்தியாவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. இதை பயன்படுத்தி, பிரச்னையை தீர்க்கலாம். ஆனால், தமிழகத்தில் இப்பிரச்னையை பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி தான் நடக்கிறது. இதில் அரசியல் செய்வதையே தமிழகத்தில் சில கட்சிகள் வாடிக்கையாக கொண்டுள்ளன. இப்படி இருந்தால், எப்படி பிரச்னையை தீர்க்க முடியும்? குறிப்பாக, இலங்கை தமிழர் பிரச்னையில், வைகோவால் பிரச்னைகள் தான் ஏற்படுகின்றன. பிரச்னையை புரிந்து கொள்ளாமல், உணர்ச்சிகரமாக பேசுகிறார். சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு வெடிக்கிறார்; அழுகிறார். எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் நடந்தால், என்ன செய்வது? எப்படி பிரச்னையை தீர்க்க முடியும்?இவ்வாறு, பிரதமர் கேள்வி எழுப்பினார். உடனே குழுவினர், 'ம.தி.மு.க.,வை சேர்ந்த பிரதிநிதியும் இங்கே வந்திருக்கிறார்' என்றனர். அப்போது குறுக்கிட்ட, முன்னாள் எம்.பி., கணேசமூர்த்தி, 'நான் தான் இங்கே ம.தி.மு.க., சார்பில் வந்திருக்கும் பிரதிநிதி' என்றார். 'இருக்கட்டும், நான் உண்மையைத்தான் சொல்கிறேன்' என்றார் பிரதமர்.

உத்தரவாதம் தரவில்லை:

இறுதியாக, ஆந்திர வனப் பகுதியில், தமிழக கூலித் தொழிலாளிகள், 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். 'டில்லி பேரணியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு கண்ணீர் சிந்திய நீங்கள், இதை கண்டுகொள்ள வில்லை; இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என, தமிழக குழுவினர் கேட்டனர்.அதற்கு பிரதமர் எந்த உத்தரவாதமும் தரவில்லை. இறுதியாக, 'தமிழகத்தை சேர்ந்த நீங்கள் எல்லாம் குழுவாக வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது; அதன் காரணமாகவே, என்னால் விஜயகாந்தை சந்திக்க முடிந்தது' என்று பிரதமர் கூறியதும்,
அனைவரும் சிரித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் தினமலர்.com

கருத்துகள் இல்லை: