வெள்ளி, 1 மே, 2015

இலங்கை இந்திய படகு சேவைக்கு பன்னீர்செல்வம் முட்டு கட்டை! பின்னணியில் விமான நிறுவனங்கள்?

தமிழக முதல்வர், மாநில அரசின் தலைமைச் செயலர் மூலம் அனுப்பிய கடிதத்தில் இரு நாடுகளுக்கும் இடையே படகுச் சேவையை செயல்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ராமேசுவரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு இடையிலான பயணிகள் படகுப் போக்குவரத்து சேவை ஏன் நிறுத்தப்பட்டுள்ளது என்பதற்கு மத்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர்கள் வியாழக்கிழமை எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பதில் வருமாறு:
2011-இல், இந்திய - இலங்கை அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி தூத்துக்குடியில் இருந்து இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு படகுப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. அப்போது, படகு சேவையைத் தொடங்க வேண்டாம் என்று தமிழக முதல்வர் சார்பில் அரசின் தலைமைச் செயலர், மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதன் காரணமாக படகு சேவை தொடங்கிய ஆறு மாதங்களுக்குள்ளேயே நிறுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே படகுச் சேவையைத் தொடர மத்திய அரசு இப்போதும் தயாராக உள்ளது.
கடந்த மாதம் மத்திய கப்பல் துறைச் செயலர் நடத்திய கூட்டத்திலும், தமிழக முதல்வர், மாநில அரசின் தலைமைச் செயலர் மூலம் அனுப்பிய கடிதத்தில் இரு நாடுகளுக்கும் இடையே படகுச் சேவையை செயல்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களுக்கு மாநில அரசு ஆதரவளிக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொள்கிறது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
சீன ஆதிக்கத்தை எதிர்கொள்ள நடவடிக்கை: இதைத் தொடர்ந்து, வேலூர் தொகுதி அதிமுக உறுப்பினர் பி. செங்குட்டுவன், "இந்தியப் பெருங்கடல் தீவுகளான மாலத்தீவுகள், இலங்கை மற்றும் மோரீஷியஸ் உள்ளிட்டவற்றில் அதிகரித்து வரும் சீன நாட்டின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஏதேனும் உத்திகளைக் கையாளுகிறதா?' எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், "சீனா, இதர நாடுகள் உள்பட 16 நாடுகளுடன் இந்தியா ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
கடல் பகுதியில் நமது கப்பல் போக்குவரத்து மேம்பாடு பற்றி நாம் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறோம். சீன நாட்டுடனும் மத்திய அரசு அதிகமான தொடர்புகளைக் கொண்டுள்ளது' என்றார். dinamani.com

கருத்துகள் இல்லை: