புதன், 9 ஜூலை, 2014

பாரிஸ் புறநகர் துணை மேயர் ஒரு தமிழ் பெண் சேர்ஜியா மகேந்திரன்! Cergya Mahendran !

France mayerபிரான்ஸ் நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்று தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான கார்ஜ் லி கொணெஸ் (Garges les Gonesse) என்னும் அழகிய கிராமம். இலங்கைத் தமிழர்கள்,பாண்டிச்சேரி தமிழர்கள்,வட இந்தியர்கள்,பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள், ஆபிரிக்கர்கள்,அல்ஜீரியர்கள், துருக்கியர் என பல்இன குழுக்கள் செறிந்து வாழும் இந்தக் கிராமத்தில் இன ரீதியான பாகுபாடுகள் குறிப்பிடும்படி இல்லாமல் இருப்பது இக்கிராமத்தின் சிறப்புகளில் ஒன்று.

கடந்த ஏப்பிரல் மாதம் நடைபெற்ற இந்தப்பகுதிக்கான நகராட்சி மன்றத் தேர்தலில், பிரான்சின் முக்கிய வலதுசாரிக் கட்சியான UMP  (Union Pour Un Mouvement Populaire) சார்பில் போட்டியிட்ட சேர்ஜியா மகேந்திரன் (Cergya Mahendran)என்கின்ற இளம் தமிழ் பெண் பெரு வெற்றியீட்டியதுடன்  நகரத்தின் துணைமேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளதும் இப்பகுதியின் தற்போ தைய சிறப்புகளில் மற்றொன்று.


யாழ்பாணம்,கொழும்புத்துறையை சேர்ந்த செல்லப்பா மகேந்திரன்-தேவி, தம்பதிகளின் புதல்வியான செல்வி சேர்ஜியா பிரான்ஸின் சட்டத்துறையில் பட்டம் பெற்று ஒரு சட்டத் தரணியாக பணியாற்றுபவர். இளவயது முதலே சமூக சேவையில் ஆர்வம் கொண்டு செயல்படும் இவரது மக்கள் நல பணிகளால் இவர் வாழும் கார்ஜ் லி கொணேஸ்(Garges les Gonesse) மட்டுமல்லாது அயல் கிராமங்களான சார்சேல் (sarcelles), டுனி (Dugny) போன்ற கிராமங்களில் வாழும் பலரும் சிறப்படைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

39ஆசனங்களைக்கொண்ட கார்ஜ் லி  கொணெஸ் நகர சபைக்கான இந்தத் தோதலில் UMPகட்சி 30 ஆசனங்களைப்பெற்று பெரு வெற்றியீட்டியது. அந்தக் கட்சியின் முக்கியஸ்தரும்,இங்கு வாழும் அனைத்தின மக்ளினதும்  நன்மதிப்புக்கு உரியவருமான ,மொறீஸ் லிபெவ்ர் (Maurice Lefளூvre ) 3வது முறையாகவும் நகரபிதாவாக தெரிவானார்.
இவர் தலைமையிலான நகராட்சிமன்ற ஆட்சிக்குழுவில் சட்டம், திருமண விவகாரம், காப்பகங்கள், தோதல்கள் போன்ற முக்கிய பொறுப்புகளுடன் சேர்ஜியா மகேந்திரன் துணை மேயராக பொறுப்பேற்றுள்ளார். சமூக சேவை ஆர்வலர்களில் பலர் சுயவிளம்பரத்தையே முக்கிய குறியாககொண்டிருக்கும் நிலையில் எந்தவித ஆராவாரமோ, ஆர்பரிப்போ இன்றி செயல்படும் சேர்ஜியாவின் வெற்றி மக்கள் வெற்றியாகவே நோக்கப்பட வேண்டும். நம்மவர் மத்தியில் புரையோடிப்போய்விட்ட சமூக ஏற்றத்தாழ்வுகள், சமய வேற்றுமைகள், பண்பாட்டு- கலாச்சார விழுமியங்கள் அனைத்தையும் கடந்து ,இவர் பெற்ற வெற்றி ,புலம் பெயர் தமிழர் வரலாற்றில் சமூக மாற்றத்திற்கான ஒரு மைல்க்கல் ஆகும் .

அண்மைக் காலங்களில் புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் இது போன்ற தோதல்களில் சுயநல நோக்குடனான ,தேசிய சிந்தனா அடிப்படை  வாதிகளே நம்மவர்களால், பெரும்பாலும் முன்னிறுத்தபடுவது வழமையாகி வருகிறது.  இதனை எல்லாம் மழுங்கடித்து பொதுச்சிந்தனையுடன் செயல்படும் ,சேர்ஜியா மகேந்திரன் களமிறங்கி, மக்கள் அங்கீகாரம் பெற்றமையானது மாற்றுக்கருத்துக்கள் எனப்படும் பொதுக்கருத்துக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.

தானுண்டு தன் வேலை உண்டு என வாழும் பெரும்பாலான எமது சமூக மக்கள் மத்தியில் இள வயதிலேயே பொது வாழ்வுக்குள்   நுழைந்த    சேர்ஜியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அவரின் பெற்றோரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

சேர்ஜியா மகேந்திரனின் தன்னல மற்ற பணி இந்தப்பகுதியுடன் மட்டும் நின்ற விடாது மேலும் பரந்து விரியவும் அவரின் பொது, அரசியல் , தனிப்பட்ட வாழ்வு மேன் மேலும் சிறக்கவும் அளைவரும் இணைந்து வாழ்த்துவோமாக.
தகவல்
கோவை நந்தன் thenee.com

கருத்துகள் இல்லை: