புதன், 9 ஜூலை, 2014

திமுகவை இன்னும் கலைஞரின் குடும்பத்தினரும் புரிந்து கொள்ளவில்லை ! அதன் தலைவர்களும் புரிந்து கொள்ளவில்லை !

‘இன்றைய திமுக காரர்கள் பெரியாரை புரிந்து கொள்ளவில்லை. பெரியாரை புறக்கணிக்கிறார்கள்’ என்று ஆதங்கப்படுகிறார்கள் பெரியார் மீது அன்பு கொண்ட திமுக அபிமானிகள்.
பெரியாரை விடுங்கள்; திமுக காரர்களுக்கு கலைஞரையே தெரியவில்லை. மொழி உணர்வு, சமூக நீதி அரசியல் போன்றவற்றில் அவர்கள் கலைஞரின் நிலைக்கே வளரவில்லை. அதன் பிறகு அண்ணா, அப்புறம் எங்கிருந்து பெரியார்?
கலைஞர் எழுதிய புத்தகங்களில் இரண்டு புத்தகங்களின் பெயர்களை, பெரும் பணக்காரர்களாக இருக்கிற அவரின் பேரன்களில் யாராவது ஒருவரை ‘சட்’ டென்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
கலைஞர் மூலமாக கழகத்திற்கு வந்த, மூத்த திமுக வின் எளிய தொண்டர்களுக்கு; அவரின் பேச்சு, வசனம், எழுத்துக்கள் அத்துப்படி. அவர்களிடம் திமுகவிற்கு எதிராகவோ கலைஞருக்கு எதிராகவோ யாரும் பேசி வெற்றி பெற முடியாது. கம்யுனிஸ்ட் கட்சிக்காரர்களையே விவாதத்தில் கலங்க அடிப்பார்கள்.
மொழி உணர்வும், சமூக நிதி அரசியலும் தெளிவாக தெரிந்தவர்கள். அவர்களின் குழந்தைகளுக்கு மத சார்பற்ற தனித்தமிழ்ப் பெயர்களை சூட்டியவர்கள்.
ஆனால், இன்று..? கலைஞரின் குடும்பத்திலேயே தமிழ்ப் பெயர்கள் இல்லை.
ஆக, திமுக காரர்கள் உடனடியாக செய்ய வேண்டியது, கலைஞரின் அரசியல் அறிவுக்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்வது தான். அதுதான் திமுக வை தூக்கி நிறுத்தும்.
அதன் பிறகு பெரியாரிடம் வரலாம். வராவிடிலும் பிரச்சினை இல்லை.
முதலில் கூரை ஏறி கோழி புடிங்க.. அப்புறம் வானம் ஏறி வைகுண்டம் போகலாம். mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை: