புதன், 20 நவம்பர், 2013

கிரீன் சிக்னல் ? ஏற்காடு இடைத்தேர்தலில் தே.மு.தி.க. காங்கிரஸ் போட்டியிடாமல்.....

ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடாமல், தே.மு.தி.க., ஒதுங்கிக் கொண்டதற்கு காரணம், லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வுடன் அக்கட்சி கூட்டணி சேர்வதற்கான, "கிரீன் சிக்னல்' என, அரசியல் வட்டாரத்தில் விமர்சிக்கப்படுகிறது. ஆதரவு கேட்டு தி.மு.க., தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு கிடைத்த, "ரெஸ்பான்ஸ்' எனவும், இரு கட்சிகளின் பிரபலங்களுக்கு இடையே நடந்த ரகசிய சந்திப்பும், பேச்சும் முக்கிய காரணம் எனவும், கருத்துகள் கூறப்படுகின்றன.தி.மு.க.,வை பொறுத்தவரையில், லோக்சபா தேர்தலுக்கென புது கூட்டணிக் கணக்கு போடப்பட்டுள்ளது. அதில், தே.மு.தி.க.,வுக்கு தான் அதிக மதிப்பெண் தரப்பட்டுள்ளது. "காங்கிரசும், தே.மு.தி.க.,வும் கூட்டணிக்கு வந்துவிட்டால் போதும்; கணிசமான எம்.பி.,க்களை பெற்று விடலாம் என்பது தான் தேர்தல் இலக்கு' என்கிறது தி.மு.க., வட்டாரம். அதற்கான, காய் நகர்த்தலின் விளைவு தான், ஏற்காடு தேர்தலில், தே.மு.தி.க., போட்டியிடாமல் போனது என்றும், எதிர்கால கூட்டணிக்கான ஒத்திகை, முன்னோட்டம் என்றெல்லாம், அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வலம் வருகின்றன.


இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில், வேறு விதமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அவை வருமாறு:
* ஏற்காடு இடைத் தேர்தலை, விஜயகாந்த் சீரியசாகவே எடுத்துக் கொள்ளவில்லை. முதலில், ஏற்காட்டில் வேட்பாளரை தேர்வு செய்ய, மாவட்ட செயலரிடம் பட்டியல் கேட்டுப் பெற்றார். சுவர் விளம்பரம், பூத் கமிட்டி அமைக்கவும், கட்சியினருக்கு அனுமதி அளித்தார். ஆனால், "தி.மு.க., போட்டியிடுகிறது' என, முடிவெடுத்ததும், தனது முடிவை அவர் மாற்றிக்கொண்டார். "இரண்டு கட்சிகளும் முட்டி மோதட்டும்; யார் வீழ்ந்தாலும கவலை இல்லை; நாம் டில்லிக்கு போகலாம்' என, முடிவெடுத்து, டில்லி தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்தார். அதன்பிறகு, அவரது ஆர்வம் முழுக்க, அந்த தேர்தல் மீது தான் திரும்பியது. இப்போது கூட, கட்சியினர் கோரிக்கையை ஏற்று, டில்லி பிரசாரத்திற்கு செல்ல சம்மதித்துள்ளார்.
* "தி.மு.க.,வுக்கு மறைமுக ஆதரவு; எதிர்கால கூட்டணிக்கு அச்சாரம்' என்பது உண்மையாக இருந்தால், அதை வெளிப்படையாக அறிவித்திருக்கலாமே?. ஆதரவு கேட்டு கருணாநிதி, வெளிப்படையாக தானே கடிதம் அனுப்பினார். அதற்காக தான் இந்த முடிவு என்றால், "தி.மு.க.,வை ஆதரித்து, போட்டியில் இருந்து விலகினோம்' என, விஜயகாந்த் சொல்லியிருக்கலாமே?.
*விஜயகாந்த்தை பொறுத்தவரையில், ஏற்கனவே அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்து பட்ட கஷ்டங்களை மறக்கவில்லை. தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து, அதே அனுபவத்தை மீண்டும் பெற வேண்டுமா என்ற சிந்தனையில் இருக்கிறார். மேலும், கல்யாண மண்டபம் இடிப்பு போன்ற பழைய பகையை இன்னமும் அவர் மறந்து விடவில்லை.
* இன்னொரு முக்கியமான விஷயம் இதில் இருக்கிறது. ஏற்காடு இடைத் தேர்தலில், காங்கிரசுக்கும் தான் கருணாநிதி கடிதம் எழுதினார். அந்த கட்சியும் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. "போட்டியும் இல்லை; ஆதரவும் இல்லை' என்ற நிலைப்பாட்டை தான் அந்த கட்சியும் எடுக்கப் போகிறது. எங்களுக்கு கிடைத்த தகவல் அது தான்.
* காங்கிரஸ் கட்சி, இந்த நிலையை எடுக்கப் போகிறது என்பதை அறிந்தே, விஜயகாந்த், இம்முடிவை எடுத்திருக்கலாம். டில்லியில், நேற்று முன்தினம், ஏற்காடு தேர்தல் தொடர்பாக, தமிழக காங்கிரசாருடன், ராகுல் ஆலோசனை நடத்தி முடித்துள்ளார். ஆனால், இன்னும் காங்கிரஸ் தனது முடிவை அறிவிக்கவில்லையே.
* மேலும், ஏற்காட்டில் தே.மு.தி.க., போட்டியிட்டால், ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயாராக இருந்தது. அந்த தகவல், எங்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. எனவே, தே.மு.தி.க.,வை பொறுத்தவரையில், தேசிய கட்சிகளுடன் கூட்டு சேர்வதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்.இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நமது சிறப்பு நிருபர் dinamalar.com

கருத்துகள் இல்லை: