செவ்வாய், 19 நவம்பர், 2013

பண்பு தெரியாத ராகுல் பிரதமருக்கு சொன்ன நான்சென்ஸ் ! மோடி தாக்கு !

“பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் எடுத்த முடிவை, ‘நான்சென்ஸ்’ என்று சொல்லியிருக்கிறாரே ராகுல். அது பிரதமரின் முகத்தில் விழுந்த அறை அல்லவா?” என்று கூறியுள்ள நரேந்திர மோடி, “எதற்கும் உங்கள் கட்சியின் துணை தலைவர் ராகுலுக்கு மரியாதையாக பேசுவது எப்படி என்பதை முதலில் கற்றுக் கொடுங்கள்” என்று கிண்டலாக காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரையும் கூறியிருக்கிறார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 25-ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ.க. அரசு ஆட்சி செய்துவரும் அங்கு, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நேற்று பேசினார்.
அப்போதுதான், ராகுல் பற்றிய விவகாரம் அவரால் பேசப்பட்டது.
அங்கு மோடி பேசுகையில், “இங்கு ஒரு பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ‘பா.ஜ.க. கட்சியினர், அரசியல் எதிரிகளை அவமதிக்கும் வகையில் பேசுகின்றனர். மரியாதையாக பேச அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்’ என பேசியுள்ளார்.

பிரதமருக்கு, ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். சமீபத்தில், குற்றப் பின்னணி உடைய மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்கும் விதமான அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற உங்களின் மத்திய அரசு முயற்சித்தது. இதற்காக உங்கள் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது தொடர்பான விஷயங்கள் அனைத்தும் உங்கள் கட்சியின் துணை தலைவர் ராகுலுக்கு நன்றாக தெரியும்.
ஆனால் கடைசி நேரத்தில் ஒன்றுமே தெரியாதது போல், ‘நான்சென்ஸ்… யார் இந்த முடிவை எடுத்தது? அவசர சட்டத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்’ என, பிளேட்டை திருப்பி விட்டார் ராகுல்.
இந்த சட்டம் வேண்டுமா, வேண்டாமா என்ற விஷயத்துக்குள் நான் இப்போது போக விரும்பவில்லை. அதேநேரத்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட மத்திய அமைச்சரவை, பிரதமர் தலைமையில் எடுத்த முடிவை ‘நான்சென்ஸ்.. அதை தூக்கி குப்பையில் போடுங்கள்’ என ராகுல் எப்படி விமர்சிக்கலாம்?
ராகுலின் இந்த விமர்சனம், பிரதமரின் முகத்தில் விழுந்த அறை. ஜனநாயக நடைமுறைகளை களங்கப்படுத்தும் விதமாக அவர் பேசியுள்ளார்.
எனவே மரியாதையாக எப்படி பேசுவது என்பதை, முதலில் உங்கள் கட்சியின் துணை தலைவருக்கு கற்றுக் கொடுங்கள். அதற்கு பின் எங்களுக்கு அறிவுரை கூறலாம்.
எங்களுக்கு அறிவுரை கூறுவது போல், ராகுலுக்கு உங்களால் அறிவுரை கூற முடியுமா? சமீபத்தில்கூட, எங்கள் கட்சியினரை, ‘திருடர்கள்’ என ராகுல் விமர்சித்துள்ளார். அது குறித்து நீங்கள் வாய் திறக்கவே இல்லையே… முடிந்தால் அவருக்கும் அறிவுரை கூறி பாருங்களேன்” என்றார், குரலில் கிண்டல் தொனிக்க!

viruvirupu.com

கருத்துகள் இல்லை: