திங்கள், 18 நவம்பர், 2013

சி.பி.எம் : கிரிமினல் கும்பலாகச் சீரழிந்து விட்ட சமூக விரோதக் கழிசடைகளின் புகலிடம் !

சமர் ஆச்சார்ஜிதிரிபுரா மாநிலத்தில் அரசுப் பணிகளுக்கான அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரராகத் தொழில் செய்து வருகிறார் சி.பி.எம். கட்சியின் ஜோகேந்தர் நகர் கமிட்டி உறுப்பினரான சமர் ஆச்சார்ஜி. திரிபுராவின் தலைநகர் அகர்தலா உள்ளிட்ட மூன்று நகராட்சிகளில் ஏழை மக்களுக்காக 2,400 கழிப்பறைகளைக் கட்டித்தர அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரசிடமிருந்து ஒப்பந்தப் பணிகளை எடுத்துள்ளார். இதன் மூலம் ரூ. 2.5 கோடி வரை சம்பாதித்துள்ள அவர், கடந்த அக்டோபர் 10-ஆம் தேதியன்று தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.20 லட்சத்தை ரொக்கப் பணமாக எடுத்து வந்து மெத்தை மீது விரித்து, அதன் மீது படுத்துக் கொண்டு சில நோட்டுக் கட்டுகளை தன் மீது பரப்பிக் கொண்டு, அக்காட்சியைத் தனது செல்பேசி கேமரா மூலம் பதிவு செய்து தனது நண்பர்களுக்கு பெருமிதத்துடன் அனுப்பியுள்ளார். இது தனது வாழ்நாள் கனவு என்றும், இப்போதுதான் அது நிறைவேறியுள்ளது என்றும், கட்சியின் பிற தலைவர்களைப் போல பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொண்டு சம்பாதித்த சொத்துக்களை மறைத்து ஏழையைப் போல நடிப்பதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.  இந்த வீடியோவை அவரது நண்பர் ஒருவர் உள்ளூர் தொலைக்காட்சிக்குக் கொடுக்க, அது நாடெங்கும் இப்போது ஒளிபரப்பாகி, ஊழல் பெருச்சாளிகளான காங்கிரசுக்காரர்களே காறித்துப்புமளவுக்கு சி.பி.எம். கட்சியின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது.

பணக் கட்டுகளை மெத்தை மீது விரித்து படுத்துப் புரளும் போலி கம்யூனிஸ்டு சமர் ஆச்சார்ஜி.
இது பற்றி சமர் ஆச்சார்ஜியிடம் விளக்கம் கேட்டு, அது ஏற்புடையதாக இல்லாததால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து கடந்த அக்டோபர் 19 அன்று நீக்கி விட்டோம் என்கிறது, சி.பி.எம். கட்சியின் திரிபுரா மாநிலக் குழு. அரசு ஒப்பந்ததாரர் எப்படிக் கட்சி உறுப்பினராக இருக்க முடியும் என்பதையோ, இப்படி ஊழல் செய்து முறைகேடாகச் சம்பாதித்ததையோ சி.பி.எம். கட்சி ஒரு குற்றமாகக் கருதவில்லை. பணத்தில் படுத்துப் புரண்டு அதை வீடியோ எடுத்து வெளிச்சம் போட்டுக் காட்டியதுதான் அக்கட்சிக்குப் பெரிய குற்றமாகி விட்டது.
புரட்சி சவடால் அடிக்கும் சி.பி.எம். கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியே அல்ல. அது, பிழைப்புவாதிகள், ஊழல் பெருச்சாளிகள், கிரிமினல் குண்டர்களின் கட்சிதான். திரிபுராவில் மட்டுமின்றி, திருவாரூர் மாவட்ட சி.பி.எம். கட்சியினரும் இதை மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.
ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, நிலவுடமை ஆதிக்கத்தை எதிர்த்து ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களில் உறுதிமிக்கப் போராளியாகத் திகழ்ந்தவர்தான், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திலுள்ள திட்டாணி முட்டம் கிராமத்தைச் சேர்ந்த தோழர் சின்னப்பா. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதோடு, பண்ணையடிமைகளாக இருந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளைத் திரட்டி சவுக்கடி, சாணிப்பால் கொடூரங்களுக்கு எதிராகப் போராடிய முன்னுதாரணமிக்க கம்யூனிஸ்டாக அவர் திகழ்ந்தவர். கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட பின்னர் சி.பி.எம். கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், மாவட்டம் முழுவதும் சைக்கிளிலேயே பயணித்து விவசாயிகள் சங்கத்தைக் கட்டியமைக்கவும், திட்டாணி முட்டம் கிராமத்தில் ஆதிக்க சாதியினரின் ஆக்கிரமிப்பில் இருந்த புறம்போக்கு நிலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குடிசைகள் கட்டிக் கொடுக்கவும் அரும்பாடுபட்டார்.
தோழர் சின்னப்பா
திட்டாணி முட்டம் கிராமத்தில் புரட்சிகர-ஜனநாயக சக்திகளால் நிறுவப்பட்டுள்ள தோழர் சின்னப்பா அவர்களின் நினைவுக் கல்வெட்டு (வலதுபுறம்) தோழர் சின்னப்பா.
இத்தகைய தியாகச் செம்மலாகத் திகழ்ந்த சின்னப்பா, தான் கட்டி வளர்த்த சி.பி.எம். கட்சியினரே ஊர்ச்சொத்தைக் கொள்ளையடிப்பதையும், பொது நிதியை பொய்க்கணக்கு காட்டி ஏய்ப்பதையும், அப்பாவிக் கூலித் தொழிலாளிகளைச் சாதியக் கட்டுமானப்படி ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதையும் ஒரு மூத்த கம்யூனிஸ்டு என்கிற முறையில் எதிர்த்தார். இதனால் பிழைப்புவாத சி.பி.எம். கட்சித் தலைமையின் எதிர்ப்பைச் சம்பாதித்தார்.
திட்டாணி முட்டம் கிராமத்தில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி கலைச்செல்வி யின் கணவரும் சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவருமான டி.முருகையன், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் சாலை அமைப்பது என்ற பெயரில் சின்னப்பாவின் விளைநிலத்தை ஆக்கிரமித்து, அவர் வளர்த்த மரங்களை வெட்டிச் சாய்த்தார். இதை எதிர்த்து நியாயம் கேட்ட சின்னப்பா மற்றும் அவருக்கு ஆதரவாக நின்றவர்களை கிராமக் கமிட்டி கூட்டத்தில் ஊரை விட்டே ஒதுக்கி வைத்தனர், சி.பி.எம். தலைவர்கள். 2011-இல் சின்னப்பாவை சி.பி.எம். கட்சிக் குண்டர்கள் கொடூரமாகத் தாக்கியதில் அவரது இடுப்பு எலும்பு முறிந்து ஆறு மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகி விட்ட அவர், கடந்த 5.10.2013-இல் மரணமடைந்தார்.
இப்பகுதியில் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டவர் என்ற முறையில் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் உள்ளிட்டு அனைத்து புரட்சிகர  ஜனநாயக சக்திகளும் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். சாதிக் கட்டுப்பாடு போட்டு அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கக் கூடாது என சி.பி.எம். கட்சித் தலைமை தடுத்தபோது, ”எங்களை உருவாக்கிய தலைவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளக் கூடாதெனத் தடை போட நீங்கள் யார்?” என்று வர்க்க உணர்வுள்ள சில சி.பி.எம். ஊழியர்கள் ஆவேசப்பட்டுக் கடைத்தெருவிலிருந்த சி.பி.எம். கட்சிக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு இறுதி ஊர்வல நிகழ்ச்சியில்  பங்கேற்றனர்.
மறைந்த இத்தியாகத் தோழருக்கு வி.வி.மு, பு.மா.இ.மு.வினரும், கிராமக் கமிட்டி மற்றும் மாதர் சங்கத் தோழர்களும் இணைந்து கடைத்தெரு அருகே இதர கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அமைந்துள்ள இடத்தில் நினைவுக் கல்வெட்டு அமைக்கத் தீர்மானித்தனர். இதற்கான கட்டுமானப் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது, அதைத் தடுக்க போலீசு, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சி.பி.எம். கட்சியின் பிழைப்புவாதத் தலைவர்கள் முயற்சித்தனர். புரட்சிகர அமைப்புகளின் உறுதியான நடவடிக்கையால் அது முடியாமல் போகவே, 18-ஆம் தேதியன்று நள்ளிரவில் 50,60 பேர் கொண்ட சி.பி.எம். குண்டர் படையினர் குடிபோதையில் அரிவாள், கம்பு, உருட்டுக்கட்டை, கடப்பாரையுடன்  கல்வெட்டை உடைக்க வந்தனர்.
இதையறிந்ததும் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டுத் தோழர்கள் திரண்டு கல்வெட்டைக் காத்து நின்று, தோழர் சின்னப்பாவின் புகழையும், நக்சல்பாரி புரட்சிகர முழக்கங்களையும் எழுப்பினர். இதைக் கேட்டு கிராம மக்கள் திரளத் தொடங்கியதும், ஆயுதங்களை வீசியெறிந்து விட்டு குண்டர்கள் தப்பியோடினர். பின்னர் போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் இழுத்தடிப்புகளை முறியடித்து, திட்டமிட்டபடி 20.10.2013 அன்று தோழர் சின்னப்பா அவர்களின் நினைவுக் கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியும், அவரது இல்லத்தில் படத்திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. பல்வேறு கட்சியின் பிரமுகர்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை வட்டார வி.வி.மு. செயலாளர் தோழர் மாரிமுத்து, திருவாரூர் மாவட்ட பு.மா.இ.மு. அமைப்பாளர் தோழர் ஆசாத், ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் ஆகியோர் தோழர் சின்னப்பாவின் போராட்ட வாழ்வையும் கம்யூனிச நேர்மையையும் விளக்கி, கிரிமினல் கும்பலாகச் சீரழிந்து விட்ட சி.பி.எம். கட்சியின் துரோகத்தையும் பித்தலாட்டைத்தையும் மக்களிடம் அம்பபடுத்தி, நக்சல்பாரி பாதையில் அணிதிரள்வதே தோழர் சின்னப்பாவுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும் என உரையாற்றினர்.
- பு.ஜ.செய்தியாளர், திருவாரூர். vinavu.com

கருத்துகள் இல்லை: