ஞாயிறு, 17 நவம்பர், 2013

ஏற்காட்டில் போர்க்கால அடிப்படையில் அதிமுக அமைச்சர்கள் ! ஆளுக்கு 5,000 ஓட்டுக்கள் பெறாவிட்டால் சீட்டு காலி

ஏற்காடு சட்டசபை தொகுதியில், டிசம்பர், 4ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க., சார்பில், மறைந்த எம்.எல்.ஏ., பெருமாள் மனைவி சரோஜாவும், தி.மு.க., சார்பில், மாறனும் போட்டியிடுகின்றனர்.லோக்சபா தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக, இந்த இடைத் தேர்தல் கருதப்படுவதால், 'எதிர்த்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், டெபாசிட்டை இழக்கும் வகையில், அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில், சரோஜாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என, கட்சியினருக்கு, அ.தி.மு.க., மேலிடம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. உலகத்துலையே கஷ்டமான வேலை அடிமையா இருக்கறதுதான்

அதற்காகவே, 33 அமைச்சர்கள் உட்பட, 61 பேரை, தேர்தல் பொறுப்பாளர்களாக அறிவித்து, ஏற்காட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்களும் அங்கு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.அதேநேரத்தில், 'இந்த இடைத் தேர்தலில், வெற்றி பெற முடியாவிட்டாலும், அ.தி.மு.க.,வின் ஓட்டு வித்தியாசத்தை குறைத்து விட வேண்டும்' என, தி.மு.க., மேலிடம் உத்தரவிட்டுள்ளதால், அந்தக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள் என, பலரும் தொகுதியில் முகாமிட்டு, மாறனுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அ.தி.மு.க., தலைமை, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள, 33 அமைச்சர்களுக்கும், ரகசிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ஒவ்வொரு அமைச்சரும், தங்களுக்கு என, ஒதுக்கப்பட்ட பகுதியில், '5,000 ஓட்டுக்களைப் பெற்றுத் தரவேண்டும்' என, இலக்கு நிர்ணயித்துள்ளது. 'இலக்கை எட்டாவிட்டால், பதவி பறிப்பு உட்பட, பல நடவடிக்கைகள் பாயும்' என்றும், மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.அதனால், ஒவ்வொரு அமைச்சரும், தங்களுக்கு என, நிர்ணயித்த இலக்கை எட்ட, தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட, கட்சி நிர்வாகிகளை, ஏற்காட்டில் களம் இறக்கி, தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில், 'அ.தி.மு.க.,வினருக்கு சளைத்தவர்களா நாங்கள்' என்ற அடிப்படையில், தி.மு.க.,வினரும், உத்வேகத்துடன் செயல்படத் துவங்கியுள்ளனர்.

கடந்த தேர்தல் நிலவரம்:

ஏற்காடு சட்டசபை தொகுதியில், 2011 சட்டசபை தேர்தலில், 1,79,492 ஓட்டுகள் பதிவாகின. இதில், அ.தி.மு.க., வேட்பாளர் பெருமாள், 1,04,221 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார்; தி.மு.க., வேட்பாளர் தமிழ்செல்வன், 66,639 ஓட்டுகள் பெற்றார்.இந்தத் தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில், விஜயகாந்தின் தே.மு.தி.க.,வும், தி.மு.க., கூட்டணியில், ராமதாசின் பா.ம.க.,வும் இடம் பெற்றிருந்தன. தற்போது, அந்தக் கட்சிகள், இரு கட்சிகளின் கூட்டணியில் இல்லை.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: