சனி, 17 அக்டோபர், 2020

அரசு வேடிக்கை பார்க்காது! துணைவேந்தருக்கு அமைச்சர் அன்பழகன் எச்சரிக்கை!

minnambalam : விதிகளுக்கு உட்பட்டுதான் துணைவேந்தர் செயல்பட வேண்டுமென அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அரசு வேடிக்கை பார்க்காது: துணைவேந்தருக்கு அமைச்சர் எச்சரிக்கை!
அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக துணை வேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில அரசை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக கடிதம் எழுதிய சூரப்பாவை, டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் அண்ணா பல்கலைக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.இதற்கு வரவேற்பு தெரிவித்த ஸ்டாலின், காலதாமதமான முடிவு என்றாலும் வரவேற்கத்தக்கது. வெறும் அறிவிப்பு மட்டும் போதாது. மத்திய அரசிடம் கடிதம் வழியாகத் தெரிவிக்க வேண்டும். சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய முதல்வர் பரிந்துரைக்க வேண்டுமென வலியுறுத்தினார். ஆனால், துணை வேந்தர் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

இந்த நிலையில் தருமபுரியில் இன்று (அக்டோபர் 17) செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், “தமிழக மக்களுக்கு நன்மை கிடைத்தால் ஒரு திட்டத்தை ஆதரிப்போம். இல்லையெனில் எதிர்ப்போம். ஸ்டாலின் சொல்வதைப் போல அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்ற அறிவிப்பு காலதாமதமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. 2017ஆம் ஆண்டிலிருந்தே இது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதிலுள்ள பின்விளைவுகளை ஆராய்வதற்காக 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை முதல்வர் அறிவித்தார். அந்த குழு ஆய்வு செய்த நிலையில், இதுபோன்ற சர்ச்சை ஏற்பட்டது” என்று கூறினார்.

பாஜகவின் கருத்து தொடர்பான கேள்விக்கு, “துணைவேந்தர் என்ற வகையில் 3 ஆண்டு காலத்திற்கு சுதந்திரமாக செயல்படலாம். அதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால், விதிகளுக்கு உட்பட்டுதான் துணைவேந்தர் செயல்பட வேண்டும். அப்படி விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது” என்று துணைவேந்தருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் அன்பழகன்.

எழில்

கருத்துகள் இல்லை: