சனி, 17 அக்டோபர், 2020

முத்தையா முரளிதரன் திரைப்படத்தை இலங்கை நடிகர்களை வைத்து இலங்கையில் தயாரிக்க ..

Janaki Karthigesan Balakrishnan : · நடப்பவை எல்லாம் நன்றாகவே நடக்கின்றன! முத்தையா முரளீதரன் ஒரு கண்டத்திலிருந்து தப்பினார் என்றே தான் கருதுகிறேன்.

Water என்றொரு controversial ஆங்கிலத் திரைப்படத்தை அதன் கனேடிய பெண் டைரக்டர், Deepa Mehta, இந்தியாவில் எடுக்க ஆரம்பித்து, வழமை போல் அதற்கான எதிர்ப்பைத் தவிர்த்து சிறீ லங்காவில் எடுத்து முடித்தார். மிக அருமையான படம். அதன் சுற்றுப்புறக் காட்சிகள் அழகோ, அழகு. அதிக நாட்கள் திரையில் ஓடியது. இப்போதும் இடைக்கிடை TV யில் வரும். அது போன்ற சந்தர்ப்பம் சிறீ லங்காவில் முரளீதரனுக்குப் பொருத்தமான அரசியல் சூழலில் வந்து தானாக கையில் வந்திருக்கிறது. முரளீதரனும் அவரது டைரக்டரும் செய்ய வேண்டியது தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று பாராது விஜய் சேதுபதியை விட இளமையான, இன்னும் முரளீதரன் இளமையில் இருந்த தோற்றத்திற்குப் பொருத்தமான இளைஞனைத் தேரந்தெடுத்து சிறீ லங்காவில், தமிழன் முரளீதரன் என்பதைவிட, சிறீ லங்கன் முரளீதரனாகப் படத்தை எடுக்க ஆரம்பிப்பதுவே சிறந்தது. சிறீ லங்காவில் இந்தியாவைவிட செலவு மிகக் குறைவாகவே இருக்கும். 

முரளீதரன் தான் கற்ற, பயிற்சி பெற்ற என்ற அனைத்தும் அதே இயற்கையான சூழலாக இருக்கும். சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும். சிறீ லங்காவும், ராஜபக்ஸ அரசாங்கமும் அதை ஊக்குவிக்க முடியும். தாம் விட்ட தவறுகள் சில சுட்டிக்காட்டப்பட்டால், அதையும் ஏற்றுக் கடந்து போகமுடியும். படத்தை ஒரு மொழியில் எடுத்து ஏனைய இரண்டு மொழிகளில் டப் செய்து, தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்றும் இடம்பெற பண்ண முடியும். 

தேவையெனில் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளில் டப் பண்ண முடியும். அவர் ஒரு உலகப்பிரசித்தி பெற்ற விளையாட்டு வீரன். உலகளாவப் பார்க்க செய்வதே சரியானது.

மேலும் மிக முக்கியமானவை. நடிகருக்குப் பழக்கிக் கொடுக்கும் போது பார்வையாளராக எத்தனை சிறீ லங்கன் இளைஞர்கள் இன, மொழி, மத பேதமின்றி முரளீதரனது ஸ்டைலை, திறமைகளை கற்றுக் கொள்ள முடியும். இன்றுவரை தனது பூர்வீகமான மலையகத்திற்கு எதுவும் செய்யவில்லையென்று முறையிடுகின்றனர். இதுதான் தக்க தருணமும், மிகவும் காலத்திற்கேற்பதானதும். இன்றைய மலையக மாணவர்கள் பலர் பல்கலைக்கழகக் கல்வியை கலைத்துறையிலேயே தேர்ந்தெடுக்கிறார்கள். அப்பட்டதாரிகளையும், மாணவர்களையும் சினிமாத்துறையில் ஈடுபடுத்தி ஊக்குவிக்க அரிய சந்தர்ப்பம். மலையக மக்களே எதுவும் காலம் கைகூடும் போது நடைபெறும் எனும் நம்பிக்கையை வைத்து, ஆதரவு கொடுங்கள், ஊக்குவியுங்கள்.
முத்தையா முரளீதரன் இதைச் செய்து, பாறாங்கல்லொன்று தலையில் விழவிருந்ததைத் தவிர்த்து, ஒரு கல்லில் பல மாங்காய்களாக, பல காரியங்களை வென்றெடுப்பாரா? அனைத்து இன மக்களும் ஆதரவளிப்பீர்களா, ஊக்குவிப்பீர்களா? சிறீ லங்கா அரசும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவும், மலையகப் பிரதிநிதிகளான மனோ கணேசன், ஜீவன் தொண்டமான் போன்ற கனம் பொருந்திய தலைவர்களும் ஆதரிப்பீர்களா, ஊக்குவிப்பீர்களா?
இன்றும் 800 க்கு 1000% ஆதரவுண்டு!
நன்றி.   

கருத்துகள் இல்லை: