புதன், 14 அக்டோபர், 2020

ஓபிசி இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு இரண்டு நாள் அவகாசம்!

 ஓபிசி இட ஒதுக்கீடு: மத்திய அரசுக்கு இரண்டு நாள் அவகாசம்!

minnambalam :மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்க வேண்டிய 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதற்கு எதிராக இட ஒதுக்கீட்டை வழங்க கோரி தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இதை விசாரித்து ஓபிசி வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அதில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.  கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இட ஒதுக்கீடு தொடர்பாக இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என அறிவித்து வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் நேற்று (அக்டோபர் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுபற்றி இரண்டு நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கழகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை அக்டோபர் 15ஆம் தேதிக்கும் தள்ளிவைத்தனர்.

மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எழில்

கருத்துகள் இல்லை: