திங்கள், 12 அக்டோபர், 2020

குஷ்பு கடந்த மார்ச் மாதமே காங்கிரஸில் இருந்து விலக முடிவெடுத்தார்.

minnambalam : கடந்த மார்ச் மாதமே காங்கிரஸில் இருந்து விலக முடிவெடுத்துவிட்டதாக இன்று (அக்டோபர் 12) பாஜகவில் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்தவருமான குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து இன்று காலை விலகிவிட்டு, மதியம் பாஜகவில் சேர்ந்துவிட்டார். டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர் கட்சியின் பொதுச் செயலாளர் சி.டி. ரவி,தமிழக பாஜக தலைவர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். பின் பாஜகவின் அகில இந்திய தலைவர் நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.பாஜகவில் சேர்ந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் குஷ்பு. "பாஜக எனக்கு வழங்கும் எந்தவொரு வேலையையும் நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்தார் குஷ்பு."கட்சிக்குள்ளேயே உயர்ந்த மட்டத்தில் அமர்ந்திருக்கும் சிலர் யதார்த்தத்துடனோ அல்லது பொதுமக்களுடனோ எந்த தொடர்பும் இல்லாதவர்கள். அவர்களால்தான் கட்சிக்கு உண்மையாக பணியாற்ற விரும்பிய என்னைப் போன்றவர்கள் அடக்கப்படுகிறார்கள், வெளியேற்றப்படுகிறார்கள்” என்று சோனியாவுக்கு குஷ்பு கடிதம் எழுதினார்.

ஆங்கில நாளேடான தி இந்துவிடம் பேசிய குஷ்பு, “காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக நினைத்து நான் எழுதிய இந்த கடிதத்தை கடந்த மார்ச் மாதமே தயார் செய்துவிட்டேன். சோனியா காந்தி முன்னிலையில் நான் காங்கிரஸில் சேர்ந்ததால் அவரிடம் என் ராஜினாமா கடிதத்தை நேரில் ஒப்படைக்க விரும்பினேன். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக என்னால் சோனியாவை சந்திக்க முடியவில்லை. இந்தக் கடிதத்தை எழுதியபோது நான் பாஜகவில் சேரப் போவதாக நினைக்கவில்லை” என்று குறிப்பிட்ட குஷ்பு,

"எதிர்க்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருப்பவர் என்ற வகையில், அரசாங்கத்தின் கொள்கைகளைத் தாக்குவது எனது கடமையாக இருந்தது. ஆனால் பா.ஜ.க. தனது சித்தாந்தம் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றில் தெளிவாக இருக்கிறது என்பதை படிப்படியாக உணர்ந்தேன். பிரதமர் மோடி மீது மக்கள் மீண்டும் காட்டிய நம்பிக்கையும் எனக்குப் புரிந்தது”என்றார் குஷ்பு.

பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற ஒரு கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேட்டபோது, “பாஜக சிறுபான்மையினருக்கு எதிரி என்றால், காங்கிரஸ் இந்துக்களின் எதிரியா?” என்று திருப்பிக் கேட்டுள்ளார் குஷ்பு.

மாநில அரசியலில்தான் தனக்கு ஆர்வம் என்பதை சூசகமாகத் தெரிவிக்கும் வகையில், “தமிழக பாஜக எனக்கு அளிக்கும் வேலைத் திட்டத்துக்காக காத்திருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார் குஷ்பு.

இதன் மூலம் தேசிய அரசியலை விட மாநில அரசியலில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ள குஷ்பு வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: