செவ்வாய், 13 அக்டோபர், 2020

சிறுத்தைகள் வேண்டாம்: ஸ்டாலினை வற்புறுத்தும் இருவர்! -ஏன்? ... ( துரைமுருகன், எ.வ. வேலு )

minnambalam "திமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் சிலர் வருவார்கள், சிலர் போவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் சில நாட்களுக்கு முன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது சொல்லியிருந்தார். திமுகவின் பொதுச் செயலாளர் வாயில் இருந்தே இந்த வார்த்தைகள் வந்ததால், கூட்டணியில் இருந்து போகும் கட்சிகள் எவை, கூட்டணிக்கு புதிதாக வர வாய்ப்புள்ள கட்சிகள் எவை என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.இந்த விவாதத்தின் ஒரு பகுதியாக திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலை குறித்து திமுக, விடுதலைச் சிறுத்தைகள் என இரு கட்சி வட்டாரங்களிலும் சில விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்கக் கூடாது என்று திமுகவின் இரு முக்கிய புள்ளிகள் விரும்புவதாக தகவல்கள் கிடைக்கின்றன. அந்த இருவரில் முதலாமவர் பொதுச் செயலாளர் துரைமுருகன்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே பாமகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வர ரொம்பவும் பிரயத்தனப்பட்டார் துரைமுருகன். பாமக வந்தால் விடுதலைச் சிறுத்தைகளுக்கு கூட்டணியை விட்டு போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அறிந்தேதான் இந்த முயற்சியை மேற்கொண்டார் துரைமுருகன். ஆனால் அது நாடாளுமன்றத் தேர்தலில் சாத்தியமடையாமல் போயிற்று. அப்போது பொருளாளராக இருந்த துரைமுருகன், இப்போது பொதுச் செயலாளர் என்னும் கட்சியின் மிக முக்கிய உயர் பதவியில் இருக்கிறார்.

அதனால் தற்போது பாமகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக துரைமுருகன் தரப்பில் இன்னும் தீவிரமாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்கிறார்கள் வேலூர் திமுக வட்டாரத்தில். பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவருவதன் மூலமாக, தேர்தலுக்குப் பிறகு திமுக அரசு அமையும் பட்சத்தில் தனக்கான முக்கியத்துவத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்று கருதுகிறார் துரைமுருகன். அதுவும் இந்த முயற்சிக்கான ஒரு காரணங்களில் ஒன்றாக இருக்கிறது என்கிறார்கள் அவர்கள். எனவே துரைமுருகனுக்கு பாமக உள்ளே வரவேண்டும் என்ற விருப்பமிருக்கிறது.

அதேநேரம் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளரும் ஸ்டாலினுக்கு நெருக்கமானவருமான எ.வ. வேலு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை கூட்டணிக்குள் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று ஸ்டாலினிடமே தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. வேலுவுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் என்ன கசப்பு?

“எ.வ.வேலு திருவண்ணாமலையில் ஒரு மாவட்டச் செயலாளர் என்ற முறையில் மட்டுமல்ல, அதுக்கும் மேல என்ற வகையில்தான் தனது பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். ஸ்டாலினுக்கு நெருக்கமானவர், இவர் சொன்னால் ஸ்டாலின் தட்டமாட்டார் என்றெல்லாம் திமுகவில் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளிடையேயும் வேலுவை பற்றி ஒரு சித்திரம் வரையப்பட்டிருக்கிறது.

ஆனால் சிறுத்தைகளின் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளரான பு.செல்வம், சித்தாந்த ரீதியாக நிறையப் படித்தவர். பண வசதி மிக்கவர். யாருக்கும் தலைவணங்காமல் அரசியல் செய்பவர். நானும் ஒரு கட்சியின் மாசெ, வேலுவும் ஒரு கட்சியின் மாசெ என்ற ரீதியில் வேலுவிடம் கம்பீரமாகப் பழகுபவர். மாவட்டத்தில் மற்ற நிர்வாகிகள் போல வேலுவிடம் அனுசரித்துச் செல்வதை விரும்பாதவர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இந்த சுயமரியாதை வேலுவை உறுத்தியிருக்கிறது. அதனால் இந்த மாசெவை மாற்ற வேண்டும் என்று அவர் சிறுத்தைகளின் தலைமை வரைக்கும் அழுத்தம் கொடுத்திருக்கிறார். நம் கட்சியின் மாவட்டச் செயலாளரை நீக்குமாறு நம்மிடமே அழுத்தம் கொடுத்திருக்கிறாரே என்று அதிர்ந்துபோயிருக்கிறார் திருமாவளவன். ஆனால் இதற்கு உடன்படவில்லை. இந்தப் பின்னணியில்தான் சிறுத்தைகளே கூட்டணிக்கு வேண்டாம் என்று ஸ்டாலினிடம் வேலு பேசியிருப்பதாக சொல்கிறார்கள்” என்கிறார்கள் சிறுத்தைகள் வட்டாரத்தில்.

இதுகுறித்து எ.வ.வேலு தரப்பில் பேசும்போது, “அந்த செல்வம் வரும் தேர்தலில் செங்கம் தொகுதியை குறிவைத்துள்ளார். அதை விடுதலைச் சிறுத்தைகளுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்கிறார். ஆனால் தற்போது திமுக வசமுள்ள இத்தொகுதியை மீண்டும் திமுகவே கைப்பற்ற வேண்டும் என்று கருதுகிறார் வேலு. இங்கே இதுதான் பிரச்சினை” என்கிறார்கள்.

-ராஜ்

கருத்துகள் இல்லை: